அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
கதிர்காமம்
636. திருமகள்
ராகம் - குந்தல வராலி
தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
தனதனன தான - தனதான
பாடல்
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் - பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் - பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் - பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப் - பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் - பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப் - பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் - பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 1

637. அலகின் மாறு
ராகம் -
தாளம் -
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான - தனதான
பாடல்
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி - அறமீயா

அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
அருளி லாத தோடோய - மருளாகிப்

பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு - வெனயாதும்

பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத - படிபாராய்

இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
லெறியும் வேலை மாறாத - திறல்வீரா

இமள மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் - சுதைபாகா

கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி - லிளையோனே

கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேரு வேதேவர் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 2

638. உடுக்கத் துகில்
ராகம் - காம்போதி
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட - 1 1/2, தகதிமி - 2
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன
தனத்தத் தனதான தானன - தனதான
பாடல்
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் - யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் - வகையாவுங்

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி - ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சூழல்வேனை யாளுவ - தொருநாளே

குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக - வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் - வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதூறு - வனமேசென்

றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 3

639. எதிரிலாத
ராகம் - சக்ரவாஹம்
தாளம் - திஸ்ரரூபகம் - திஸ்ரநடை (7 1/2) (எடுப்பு - /3 0)
தனன தான தத்த - தனதான
பாடல்
எதிரி லாத பத்தி - தனைமேவி

இனிய தாள்நி னைப்பை - யிருபோதும்

இதய வாரி திக்கு - ளுறவாகி

எனது ளேசி றக்க - அருள்வாயே

கதிர காம வெற்பி - லுறைவோனே

கனக மேரு வொத்த - புயவீரா

மதுர வாணி யுற்ற - கழலோனே

வழுதி கூனி மிர்த்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 4

640. கடகட கருவிகள்
ராகம் - தோடி
தாளம் - ஆதி (2 களை)
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தந் - தனதான
பாடல்
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம் - மலைவீரா

கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் - புயனோட

வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் - தவழாது

வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் - றிடுமோதான்

அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென் - றயர்வோனே

அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண் - டருள்வோனே

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் - டவர்வாழ்வே

இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 5

641. சமரமுக
ராகம் -
தாளம் -
தனதனன தானத்த தனதனன தானத்த
தனதனன தானத்த - தனதான தானனா
பாடல்
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் - மயில்போ லுலாவியே

சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின் - வசமாக மேவியே

உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர் மகாதத்தை - யெனுமாய மாதரார்

ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்த - மருள்கூர வேணுமே

இடகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
யெழுதரிய காயத்ரி - யுமையாள் குமாரனே

எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதணருகு சேவிக்கு - முருகா விசாகனே

அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய - கவிராஜ ராஜனே

அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தி - லுரியாபி ராமனே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 6

642. சரத்தேயுதித்தாய்
ராகம் - காபி
தாளம் - ஆதி - கண்ட நடை (20) (எடுப்பு - அதீதம்)
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தா - தனதான
பாடல்
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா யெதிர்த்தே - வருசூரைச்

சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றா - னிருகூறாச்

சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் - விருதாகச்

சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
திருத்தா மரைத்தா - ளருள்வாயே

புரத்தாதர் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே - வருபோது

பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
பொரித்தார் நுதற்பார் - வையிலேபின்

கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் - மதனாரைக்

கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்க்காம முற்றார் - முருகோனே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 7

643. சரியையாளர்
ராகம் -
தாளம் -
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
தனதனா தத்தனத் - தனதான
பாடல்
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகலயோ கர்க்குமெட் - டரிதாய

சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
டருபரா சத்தியிற் - பரமான

துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்தநற் - பதிநீடு

துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
சுகசொரூ பத்தையுற் - றடைவேனோ

புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக் - ரமசூரன்

புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் - கருள்வோனே

கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள்பீ றிப்புசித் - தமராடிக்

கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 8

644. பாரவித
ராகம் -
தாளம் -
தானதன தத்தத்த தானதன தத்தத்த
தானதன தத்தத்த - தனதான
பாடல்
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற - இடையாலே

பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி - விடுமாதர்

காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி - லதிமோக

காமுக னகப்பட்ட வாசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும் - வருமோதான்

தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த - அரிமாயன்

சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
கோணசயி லத்துக்ர - கதிர்காம

வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி - னிருதாளின்

வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில கப்பட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 9

645. மருவறா வெற்றி
ராகம் -
தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த - தனதான
பாடல்
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு - மதனாலும்

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு - மதனாலும்

இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த- மெலியாதே

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க - வரவேணும்

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர - மணிமார்பா

கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி - லுறைவோனே

முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை - மயில்வீரா

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
முறியவேல் தொட்ட - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 10

646. மாதர்வசம்
ராகம் - குந்தல வராலி
தாளம் - அங்கதாளம் (7)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகதிமிதக - 3
தானதன தானத் - தனதான
பாடல்
மாதர்வச மாயுற் - றுழல்வாரும்

மாதவமெ ணாமற் - றிரிவாரும்

தீதகல வோதிப் - பணியாரும்

தீநரக மீதிற் - றிகழ்வாரே

நாதவொளி யேநற் - குணசீலா

நாரியிரு வோரைப் - புணர்வேலா

சோதிசிவ ஞானக் - குமரேசா

தோமில் கதிர்காமப் - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 11

647. முதிரு மார
ராகம் -
தாளம் -
தனன தான தான தத்த தனன தான தான தத்த
தனன தான தான தத்த - தனதான
பாடல்
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற - கடலாலே

முடிவி லாத தோர் வடக்கி லெயு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ றிக்கு - நிலவாலே

வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு - மழியாதே

விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
விகட மாதை நீ யணைக்க - வரவேணும்

கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர - மயில்வீரா

கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொ ருத்தி - மணவாளா

அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச கத்தை - யருள்வோனே

அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 12

648. வருபவர்கள் ஓலை
ராகம் - பீம்பளாஸ்
தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட - 2 1/2, தகிட - 1 1/2, தகிட - 1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த - தனதான
பாடல்
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று - தொடர்போது

மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து - அடைவார்கள்

கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து - விடவேதான்

கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் - முனமேதான்

பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த - குமரேசா

பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த - கதிர்காமா

அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த - முருகோனே

அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த - பெருமாளே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ! 13

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com