பூதத்தாழ்வார் அருளிச் செய்த இரண்டாம் திருவந்தாதி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்
திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
என்பிறவி தீரவிறைஞ் சினேன், இன்னமுதா,
அன்பே தகளி யளித்தானை,-நன்புகழ்சேர்
சீதத்தார் முத்துக்கள் சேரும், கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங் கழல்.
இரண்டாம் திருவந்தாதி
2182
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா,-நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.#
1
2183
ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள்,
தானத்தால் மற்றவன்பேர் சாற்றினால்,-வானத்
தணியமர ராக்குவிக்கு மஃதன்றே, நங்கள்
பணியமரர் கோமான் பரிசு?
2
2184
பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம்,
புரிவார் புகழ்பெறுவர் போலாம்,-புரிவார்கள்
தொல்லமரர் கேள்வித் துலங்கொளிசேர் தோற்றத்து
நல்லமரர் கோமான் நகர்.
3
2185
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர்கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து,-நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
4
2186
அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும்
அடிமூன் றிரந்தவனி கொண்டாய்,-படிநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியே
ஆரோத வல்லார் அறிந்து?
5
2187
அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம்
செறிந்த மனத்தராய்ச் செவ்வே,-அறிந்தவன்றன்
பேரோதி யேத்தும் பெருந்தவத்தோர் காண்பரே,
காரோத வண்ணன் கழல்.
6
2188
கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார்
அழலெடுத்த சிந்தையராய் அஞ்ச,-தழலெடுத்த
போராழி ஏந்தினான் பொன்மலர்ச் சேவடியை,
ஓராழி நெஞ்சே* உகந்து.
7
2189
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி,-உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.
8
2190
அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,
நின்று முலைதந்த இந்நீர்மைக்கு,-அன்று
வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,
பெருமுறையா லெய்துமோ பேர்த்து?
9
2191
பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும் காவலனே,-ஏத்திய
நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால்
காவடியேன் பட்ட கடை.
10
2192
கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர்,-புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
ஆரோத வல்லார் அவர்?
11
2193
அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,
எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில்,-பலரும்
செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே
தொழுந்தகையோர் நாளும் தொடர்ந்து?
12
2194
தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம் கொண்டு,அன்-றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே, வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு?
13
2195
பண்டிப் பெரும்பதியை யாக்கி, பழிபாவம்
கொண்டுஇங்கு வாழ்வாரைக் கூறாதே,-எண்டிசையும்
பேர்த்தகரம் நான்குடையான் பேரோதிப் பேதைகாள்,
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.
14
2196
திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று
பிரிந்தது சீதையைமான் பின்போய்,-புரிந்ததுவும்
கண்பள்ளி கொள்ள அழகியதே, நாகத்தின்
தண்பள்ளி கொள்வான் றனக்கு.
15
2197
தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை,-வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று?
16
2198
மற்றா ரியலாவார் வானவர்கோன் மாமலரோன்,
சுற்றும் வணங்கும் தொழிலானை,-ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான் பின்சென்று, மாலைக்
குறையிரந்து தான்முடித்தான் கொண்டு.
17
2199
கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய்,
ஒண்டிறலோன் மார்வத் துகிர்வைத்தது-உண்டதுவும்
தான்கடந்த ஏழுலகே தாமரைக்கண் மாலொருநாள்,
வான்கடந்தான் செய்த வழக்கு.
18
2200
வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய்,
வழக்கென்று நீமதிக்க வேண்டா,-குழக்கன்று
தீவிளவின் காய்க்கெறிந்த தீமை திருமாலே,
பார்விளங்கச் செய்தாய் பழி.
19
2201
பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை,
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ,-வழுவின்றி
நாரணன்றன் நாமங்கள் நன்குணர்ந்து நன்கேத்தும்,
காரணங்கள் தாமுடையார் தாம்.
20
2202
தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின்
பூவுளதே யேத்தும் பொழுதுண்டே,-வாமன்
திருமருவு தாள்மருவு சென்னியரே, செல்வ
அருநரகம் சேர்வ தரிது.
21
2203
அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால்,-கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து?
22
2204
தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால்,
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும்,-தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்து வேற்றுருவாய், ஞாலம்
அளந்தடிக்கீழ்க் கொண்ட அவன்.
23
2205
அவன்கண்டாய் நன்னெஞ்சே* ஆரருளும் கேடும்,
அவன்கண்டா யைம்புலனாய் நின்றான்,-அவன்கண்டாய்
காற்றுத்தீ நீர்வான் கருவரைமண் காரோத,
சீற்றத்தீ யாவானும் சென்று.
24
2206
சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால்,
கொன்ற திராவணனைக் கூறுங்கால்,-நின்றதுவும்
வேயோங்கு தண்சாரல் வேங்கடமே, விண்ணவர்தம்
வாயோங்கு தொல்புகழான் வந்து.
25
2207
வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம்,
ஐந்தும் அகத்தடக்கி யார்வமாய்,-உந்திப்
படியமரர் வேலையான் பண்டமரர்க் கீந்த,
படியமரர் வாழும் பதி.
26
2208
பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை,
மதியுரிஞ்சி வான்முகடு நோக்கி-கதிமிகுத்தங்
கோல்தேடி யோடும் கொழுந்ததே போன்றதே,
மால்தேடி யோடும் மனம்.
27
2209
மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான்,-எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருநாள்
மாவாய் பிளந்த மகன்.
28
2210
மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை,
அகனார வுண்பனென் றுண்டு,-மகனைத்தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய், தென்னிலங்கை
நீறாக எய்தழித்தாய் நீ.
29
2211
நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே,
நீயன் றுலகிடந்தா யென்பரால்,-நீயன்று
காரோதம் முன்கடைந்து பின்னடைத்தாய் மாகடலை,
பேரோத மேனிப் பிரான்*
30
2212
பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும்,
குராநல் செழும்போது கொண்டு,-வராகத்
தணியுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்,
மணியுருவம் காண்பார் மகிழ்ந்து.
31
2213
மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்
மகிழ்ந்ததுன் பாதமே போற்றி,-மகிழ்ந்த
தழலாழி சங்க மவைபாடி யாடும்,
தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.
32
2214
துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம்
அணிந்தவன்பே ருள்ளத்துப் பல்கால்,-பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே,
வாய்திறங்கள் சொல்லும் வகை.
33
2215
வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம்,
புகையால் நறுமலரால் முன்னே,-மிகவாய்ந்த
அன்பாக்கி யேத்தி யடிமைப்பட் டேனுனக்கு,
என்பாக்கி யத்தால் இனி.
34
2216
இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற,
இனிதென்பர் தண்ணீரும் எந்தாய்,-இனிதென்று
காமநீர் வேளாது நின்பெருமை வேட்பரேல்,
சேமநீ ராகும் சிறிது.
35
2217
சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும்,
அறியாரும் தாமறியா ராவர்,-அறியாமை
மண்கொண்டு மண்ணுண்டு மண்ணுமிழ்ந்த மாயனென்று,
எண்கொண்டென் னெஞ்சே* இரு.
36
2218
இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே,
திருந்து திசைமுகனைத் தந்தாய்,-பொருந்தியநின்
பாதங்க ளேத்திப் பணியாவேல், பல்பிறப்பும்
ஏதங்க ளெல்லா மெமக்கு.
37
2219
எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே,
தமக்கென்றும் சார்வ மறிந்து,-நமக்கென்றும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லோத்து.
38
2220
ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமி னேழைகாள்,-ஓத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல், மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.
39
2221
சுருக்காக வாங்கிச் சுலாவிநின்று, ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர்,-திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.
40
2222
பொருளால் அமருலகம் புக்கியல லாகாது,
அருளா லறமருளு மன்றே,-அருளாலே
மாமறையோர்க் கீந்த மணிவண்ணன் பாதமே,
நீமறவேல் நெஞ்சே* நினை.
41
2223
நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,
நினைப்பார் பிறப்பொன்றும் நேரார்,-மனைப்பால்
பிறந்தார் பிறந்தெய்தும் போன்ப மெல்லாம்,
துறந்தார் தொழுதாரத் தோள்.
42
2224
தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான்-தாளிரண்டும்,
ஆர்தொழுவார் பாதம் அவைதொழுவ தன்றே,என்
சீர்கெழுதோள் செய்யும் சிறப்பு?
43
2225
சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம்,
மறந்தாரை மானிடமா வையேன்,-அறம்தாங்கும்
மாதவனே யென்னும் மனம்படைத்து, மற்றவன்பேர்
ஓதுவதே நாவினா லுள்ளு.
44
2226
உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று,
தளர்தல் அதனருகும் சாரார்,-அளவரிய
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பயின்று.
45
2227
பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள்,-பயின்ற
தணிதிகழும் சோலை யணிநீர் மலையே,
மணிதிகழும் வண்தடக்கை மால்.
46
2228
மாலை யரியுருவன் பாத மலரணிந்து,
காலை தொழுதெழுமின் கைகோலி,-ஞாலம்
அளந்திடந் துண்டுமிழ்ந்த அண்ணலைமற் றல்லால்,
உளங்கிடந்த வாற்றா லுணர்ந்து.
47
2229
உயர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி,
மணந்தாய் மலர்மகள்தோள் மாலே*-மணந்தாய்போய்
வேயிருஞ் சாரல் வியலிரு ஞாலம்சூழ்,
மாயிருஞ் சோலை மலை.
48
2230
மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர,
குலைசூழ் குரைகடல்க ளேழும்,-முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப் பெண்ணை நவின்றுண்ட நாவனென்று,
அஞ்சாதென் னெஞ்சே* அழை.
49
2231
அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன,
பிழைப்பில் பெரும்பெயரே பேசி,-'இழைப்பரிய
ஆயவனே* யாதவனே*' என்றவனை யார்முகப்பும்,
மாயவனே என்று மதித்து.
50
2232
மதிக்கண்டாய் நெஞ்சே* மணிவண்ணன் பாதம்,
மதிக்கண்டாய் மற்றவன்பேர் தன்னை,-மதிக்கண்டாய்
பேராழி நின்று பெயர்ந்து கடல்கடைந்த
நீராழி வண்ணன் நிறம்.
51
2233
நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன்,
அறம்பெரிய னார தறிவார்,-மறம்புரிந்த
வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து,
நீளிருக்கைக் குய்த்தான் நெறி.
52
2234
நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து,
அறியா திளங்கிரியென் றெண்ணி,-பிறியாது
பூங்கொடிகள் வைகும் பொருபுனல் குன்றென்றும்,
வேங்கடமே யாம்விரும்பும் வெற்பு.
53
2235
வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்
நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல்,-நிற்பென்
றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், 'வெள்ளத்
திளங்கோயில் கைவிடேல்' என்று.
54
2236
என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
நின்று நினைப்பொழியா நீர்மையால்-வென்றி
அடலாழி கொண்ட அறிவனே, இன்பக்
கடலாழி நீயருளிக் காண்.
55
2237
காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால்,
நாணப் படுமென்றால் நாணுமே?-பேணிக்
கருமாலைப் பொன்மேனி காட்டாமுன் காட்டும்,
திருமாலை நங்கள் திரு.
56
2238
திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும்,
கருமம் கடைப்பிடிமின் கண்டீர்-உரிமையால்
ஏத்தினோம் பாதம் இருந்தடக்கை எந்தைபேர்,
நாற்றிசையும் கேட்டீரே நாம்?
57
2239
நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து,
ஓம்பி யிருந்தெம்மை ஓதுவித்து,-வேம்பின்
பொருள்நீர்மை யாயினும் பொன்னாழி பாடென்று,
அருள்நீர்மை தந்த அருள்.
58
2240
அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து,
பொருள்தொந்து காண்குற்ற அப்போது,-இருள்திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் தொண்கமலம்,
ஓக்கினே னென்னையுமங் கோர்ந்து.
59
2241
ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம்,
ஈருருவன் என்பர் இருநிலத்தோ,-ஓருருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர்கண்டீர்,
நீதியால் மண்காப்பார் நின்று.
60
2242
நின்றதோர் பாதம் நிலம்புதைப்ப, நீண்டதோள்
சென்றளந்த தென்பர் திசையெல்லாம்,-அன்று
கருமாணி யாயிரந்த கள்வனே, உன்னைப்
பிரமாணித் தார்பெற்ற பேறு.
61
2243
பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால்,
மாறென்று சொல்லி வணங்கினேன்,-ஏறின்
பெருத்தெருத்தம் கோடொசியப் பெண்நசையின் பின்போய்,
எருத்திருந்த நல்லாயர் ஏறு.
62
2244
ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து
ஏறேறிப் பட்ட இடுசாபம்,-பாறேறி
உண்டதலை வாய்நிறையக் கோட்டங்கை ஒண்குருதி,
கண்டபொருள் சொல்லின் கதை.
63
2245
கதையும் பெரும்பொருளும் கண்ணா*நின் பேரே,
இதய மிருந்தவையே ஏத்தில்,-கதையும்
திருமொழியாய் நின்ற திருமாலே உன்னைப்
பருமொழியால் காணப் பணி.
64
2246
பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்
அணிந்தேனுன் சேவடிமே லன்பாய்,-துணிந்தேன்
புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே
இருந்தேத்தி வாழும் இது.
65
2247
இதுகண்டாய் நன்னெஞ்சே* இப்பிறவி யாவது,
இதுகண்டா யெல்லாம்நா முற்றது,-இதுகண்டாய்
நாணன்பே ரோதி நரகத் தருகணையா,
காரணமும் வல்லையேல் காண்.
66
2248
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி,-கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
67
2249
வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள,
வலிமிக்க வாள்வரைமத் தாக,-வலிமிக்க
வாணகம் சுற்றி மறுகக் கடல்கடைந்தான்,
கோணகம் கொம்பொசித்த கோ.
68
2250
கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே
மாவேகிச் செல்கின்ற மன்வரும்-(*)பூவேகும்
செங்கமல நாபியான் சேவடிக்கே யேழ்பிறப்பும்,
தண்கமல மேய்ந்தார் தமர்.

(*) பூமேவும் என்பதும் பாடம்.
69
2251
தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை,-தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம்.
70
2252
இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான்
றடங்கா ரொடுங்குவித்த தாழி,-விடங்காலும்
தீவாய் அரவணைமேல் தோன்றல் திசையளப்பான்,
பூவா ரடிநிமிர்த்த போது.
71
2253
போதறிந்து வானரங்கள் பூங்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த
போதரிந்து கொண்டேத்தும் போது,உள்ளம்-போது
மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல,
அணிவேங் கடவன்பே ராய்ந்து.
72
2254
ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய்,
வாய்ந்த மலர்தூவி வைகலும்,-ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண் கரிவிடுத்த பெம்மான்,
இறைக்காட் படத்துணிந்த யான்.
73
2255
யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்,
யானே தவமுடையேன் எம்பெருமான்,-யானே
இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்,
பெருந்தமிழன் நல்லேன் பெரிது.
74
2256
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று,
இருக ணிளமூங்கில் வாங்கி,-அங்கிருந்த
தேன்கலந்து நீட்டும் திருவேங் கடம்கண்டீர்,
வான்கலந்த வண்ணன் வரை.
75
2257
வரைச்சந்த னக்குழம்பும் வான்கலனும் பட்டும்,
விரைப்பொலிந்த வெண்மல் லிகையும்,-நிரைத்துக்கொண்டு
ஆதிக்கண் நின்ற அறிவன் அடியிணையே
ஓதிப் பணிவ துறும்.
76
2258
உறுங்கண்டாய் நன்னெஞ்சே* உத்தமன்நற் பாதம்,
உறுங்கண்டாய் ஒண்கமலந் தன்னால்,-உறுங்கண்டாய்
ஏத்திப் பணிந்தவன்பேர் ஈரைஞ்ஏ றெப்பொழுதும்,
சாற்றி யுரைத்தல் தவம்.
77
2259
தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி
நிவந்தளப்ப நீட்டியபொற் பாதம்,-சிவந்ததன்
கையனைத்து மாரக் கழுவினான், கங்கைநீர்
பெய்தனைத்துப் பேர்மொழிந்து பின்.
78
2260
பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள்-சொல்நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத் தோன்றல், அவனளந்த
நீணிலந்தான் அத்தனைக்கும் நேர்.
79
2261
நேர்ந்தேன் அடிமை நினைந்தேன தொண்கமலம்,
ஆர்ந்தேனுன் சேவடிமேல் அன்பாய்,-ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க் கென்கொலோ, முன்னைப்
படிக்கோலம் கண்ட பகல்?
80
2262
பசற்கண்டேன் நாரணனைக் கண்டேன், கனவில்
மிகக்கண்டேன் மீண்டவனை மெய்யே-மிகக்கண்டேன்,
ஊன்திகழும் நேமி ஒளிதிகழும் சேவடியான்,
வான்திகழும் சோதி வடிவு.
81
2263
வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப்
படிக்கோலம் கண்டகலாள் பன்னாள்,-அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ,
கோலத்தா லில்லை குறை.
82
2264
குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி,
மறையாங் கெனவுரைத்த மாலை,-இறையேனும்
ஈயுங்கொல் என்றே இருந்தேன் எனைப்பகலும்,
மாயன்கண் சென்ற வரம்.
83
2265
வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை,
உரம்கருதி மூர்க்கத் தவனை,-நரம்கலந்த
சிங்கமாயக் கீண்ட திருவன் அடியிணையே,
அங்கண்மா ஞாலத் தமுது.
84
2266
அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும்,
அமுதன்று கொண்டுகந்தான் என்றும்,-அமுதன்ன
சொன்மாலை யேத்தித் தொழுதேன் சொலப்பட்ட,
நன்மாலை யேத்தி நவின்று.
85
2267
நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே
பயின்றதனால் பெற்றபயன் என்கொல்,-பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனை,யான்
எத்தவத்தால் காண்பன்கொல் இன்று?
86
2268
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் களந்த திருவடியை,-அன்று
கருக்கோட்டி யுள்கிடந்து கைதொழுதேன் கண்டனே,
திருக்கோட்டி எந்தை திறம்.
87
2269
திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை,
திறம்பா வருசென்றார்க் கல்லால்,-திறம்பாச்
செடிநரகை நீக்கித்தான் செல்வதன்முன், வானோர்
கடிநகர வாசற் கதவு.
88
2270
கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து,
அதவிப்போர் யானை ஒசித்து,-பதவியாய்ப்
பாணியால் நீரேற்றுப் பண்டொருகால் மாவலியை,
மாணியாய்க் கொண்டிலையே மண்.
89
2271
மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய்,
விண்ணுலகம் தன்னகத்து மேவேனே,-நண்ணித்
திருமாலைச் செங்க ணெடியானை, எங்கள்
பெருமானைக் கைதொழுத பின்.
90
2272
பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர்,
முன்னால் வணங்க முயல்மினோ,-பன்னூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ் ஞாலத்தை, எல்லாம்
அளந்தா னவன்சே வடி.
91
2273
அடியால்முன் கஞ்சனைச் செற்று, அமர ரேத்தும்
படியான் கொடிமேல்புள் கொண்டான்,-நெடியான்றன்
நாமமே ஏத்துமின்க ளேத்தினால், தாம்வேண்டும்
காமமே காட்டும் கடிது.
92
2274
கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை,
கொடிதென் றதுகூடா முன்னம்,-வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய் கீண்டானை, கொங்கைநஞ்
சுண்டானை ஏத்துமினோ உற்று.
93
2275
உற்று வணங்கித் தொழுமின், உலகேழும்
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,-பற்றிப்
பொருந்தாதான் மார்பிடந்து பூம்பா டகத்துள்
இருந்தானை, ஏத்துமென் நெஞ்சு.
94
2276
என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை
வன்னெஞ்சங் கீண்ட மணிவண்ணன்,-முன்னம்சேய்
ஊழியா னூழி பெயர்த்தான், உலகேத்தும்
ஆழியான் அத்தியூ ரான்.
95
2277
அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின்
துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான்,-மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ் சுண்டான் றனக்கும்,
இறையாவான் எங்கள் பிரான்.#
96
2278
எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ,
செங்க ணெடுமால் திருமார்பா,-பொங்கு
படமூக்கி னாயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்,
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
97
2279
கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,
உண்ட துலகேழு முள்ளொடுங்க,-கொண்டு
குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை.
98
2280
இறையெம் பெருமான் அருளென்று, இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள் தூவ,-அறைகழல
சேவடியான் செங்க ணெடியான், குறளுருவாய்
மாவடிவில் மண்கொண்டான் மால்.#
99
2281
மாலே* நெடியோனே* கண்ணனே, விண்ணவர்க்கு
மேலா* வியன்துழாய்க் கண்ணியனே,-மேலால்
விளவின்காய் கன்றினால் வீழ்த்தவனே,என்றன்
அளவன்றால் யானுடைய அன்பு.#
100
பூதத்தாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com