திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி
குறிப்பு : இரண்டு முறை சேவிக்க வேண்டியவற்றை # என்னும் குறியால் அறியவும்.
தனியன்கள்
திருக்கோட்டியூர் நம்பி அருளிச் செய்தது
கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி்: ப்ரகாஸாபி்: ஆவித்யம் நிஸதம்தம்:.
எம்பெருமானார் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
வாழி பரகாலன் வாழி கலிகன்றி,
வாழி குறையலு}ர் வாழ்வேந்தன்-வாழியரோ,
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள், மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.
ஆழ்வான் அருளிச் செய்தது
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக் கிருள்கடி தீப மடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல வமுதம் தமிழநன் னூல்துறைகள்
அஞ்சுக் கிலக்கியம் ஆரண சாரம்,பரசமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
எம்பார் அருளிச் செய்தது
நேரிசை வெண்பா
எங்கள் கதியே* இராமா னுசமுனியே,
சங்கைகெடுத் தாண்ட தவராசா,-பொங்குபுகழ்
மங்கையர்கோ னீந்த மறையா யிரமனைத்தும்,
தங்குமனம் நீயெனக்குத் தா.
மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்று,
கோலிப் பதிவிருந்த கொற்றவனே,-வேலை
அணைத்தருளும் கையா லடியேன் வினையை,
துணித்தருள வேணும் துணிந்து.(*)

(*)இந்தத் தனியன் சோமாசியாண்டான் அருளிச்செய்தது என்று சிலரும், மணவாள மாமுனிகள் அருளிச்செய்தது என்று சிலரும் கூறுவர். இந்தத் தனியனை ஒரு சாரார் அனுசந்திப்பதில்லை.
பெரிய திருமொழி
முதற் பத்து
1. வாடினேன்
பெரிய திருமந்திரத்தின் மகிமை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
948
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
    பெருந்துய ரிடும்பையில் பிறந்து,
கூடினேன் கூடி யிளையவர் தம்மோ
    டவர்தரும் கல்வியே கருதி,
ஓடினே னோடி யுய்வதோர்; பொருளால்
    உணர்வெனும் பெரும்பதந் (*)தெரிந்து,
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.#

(*) திரிந்து என்பதும் பாடம்.
1
949
'ஆவியே* அமுதே*' எனநினைந் துருகி
    அவரவர் பணைமுலை துணையா,
பாவியே னுணரா தெத்தனை பகலும்
    பழுதுபோ யொழிந்தன நாள்கள்,
தூவிசே ரன்னம் துணையொடும் புணரும்
    சூழ்புனல் குடந்தையே தொழுது,என்
நாவினா லுய்ய நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.#
2
950
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
    தெரிவைமா குருவமே மருவி,
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
    ஒழிந்தன கழிந்தவந் நாள்கள்,
காமனார் தாதை நம்முடை யடிகள்
    தம்மடைந் தார்மனத் திருப்பார்,
நாமம்நா னுய்ய நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.
3
951
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
    வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன்
    என்செய்கேன் நெடுவிசும் பணவும்,
பன்றியா யன்று பாரகங் கீண்ட
    பாழியா னாழியா னருளே,
நன்றுநா னுய்ய நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.
4
952
கள்வனே னானேன் படிறுசெய் திருப்பேன்
    கண்டவா திரிதந்தே னேலும்,
தெள்ளியே னானேன் செல்கதிக் கமைந்தேன்
    சிக்கெனத் திருவருள் பெற்றேன்,
உள்ளெலா முருகிக் குரல்தழுத் தொழிந்தேன்
    உடம்பெலாம் கண்ணநீர் சோர,
நள்ளிரு ளளவும் பகலும்நா னழைப்பன்
    நாராய ணாவென்னும் நாமம்.
5
953
எம்பிரா னெந்தை யென்னுடைச் சுற்றம்
    எனக்கர சென்னுடை வாணாள்,
அம்பினா லரக்கர் வெருக்கொள நெருக்கி
    அவருயிர் செகுத்தவெம் மண்ணல்,
வம்புலாஞ் சோலை மாமதிள் தஞ்சை
    மாமணிக் கோயிலே வணங்கி,
நம்பிகாள்* உய்ய நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.#
6
954
இற்பிறப் பறியீ ரிவரவ ரென்னீர்
    இன்னதோர் தன்மையென் றுணரீர்,
கற்பகம் புலவர் களைகணென் றுலகில்
    கண்டவா தொண்டரைப் பாடும்,
சொற்பொரு ளாளீர்* சொல்லுகேன் வம்மின்
    சூழ்புனல் குடந்தையே தொழுமின்,
நற்பொருள் காண்மின் பாடியீ ருய்மின்
    நாராய ணாவென்னும் நாமம்.
7
955
கற்றிலேன் கலைக ளைம்புலன் கருதும்
    கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலே னதனால் பேதையேன் நன்மை
    பெருநிலத் தாருயிர்க் கெல்லாம்,
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
    செல்கதிக் குய்யுமா றெண்ணி,
நற்றுணை யாகப் பற்றினே னடியேன்
    நாராய ணாவென்னும் நாமம்.
8
956
குலந்தருஞ் செல்வந் தந்திடு மடியார்
    படுதுய ராயின வெல்லாம்,
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும் மருளும்
    அருளொடு பெருநில மளிக்கும்,
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்ற
    தாயினு மாயின செய்யும்,
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன்
    நாராய ணாவென்னும் நாமம்.#
9
957
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
    மங்கையார் வாள்கலி கன்றி,
செஞ்சொலா லெடுத்த தெய்வநன் மாலை
    இவைகொண்டு சிக்கெனத் தொண்டீர்,
துஞ்சும்போ தழைமின் துயர்வரில் நினைமின்
    துயரிலீர் சொல்லினும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு
    நாராய ணாவென்னும் நாமம்.#
10

2. வாலி மாவலத்து
திருப்பிருதி (ஜோஷிமட்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
958
வாலி மாவலத் தொருவன துடல்கெட
    வரிசிலை வளைவித்தன்று,
ஏல நாறுதண் தடம்பொழி லிடம்பெற
    இருந்தந லிமயத்துள்,
ஆலி மாமுகி லதிர்தர அருவரை
    அகடுற முகடேறி,
பீலி மாமயில் நடஞ்செயும் தடஞ்சுனைப்
    பிருதிசென் றடைநெஞ்சே*#
1
959
கலங்க மாக்கட லரிகுலம் பணிசெய்ய
    அருவரை யணைகட்டி,
இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள்தாம்
    இருந்தந லிமயத்து,
விலங்கல் போல்வன விறலிருஞ் சினத்தன
    வேழங்கள் துயர்கூர,
பிலங்கொள் வாளெயிற் றரியவை திரிதரு
    பிருதிசென் றடைநெஞ்சே*
2
960
துடிகொள் நுண்ணிடைச் சுரிகுழல் துளங்கெயிற்
    றிளங்கொடி திறத்து,ஆயர்
இடிகொள் வெங்குர லினவிடை, யடர்த்தவன்
    இருந்தந லிமயத்து,
கடிகொள் வேங்கையின் நறுமல ரமளியின்
    மணியறை மிசைவேழம்,
பிடியி னோடுவண் டிசைசொலத் துயில்கொளும்
    பிருதிசென் றடைநெஞ்சே*
3
961
மறங்கொ ளாளரி யுருவென வெருவர
    ஒருவன தகல்மார்வம்
திறந்து, வானவர் மணிமுடி பணிதர
    இருந்தந லிமயத்துள்,
இறங்கி யேனங்கள் வளைமருப் பிடந்திடக்
    கிடந்தரு கெரிவீசும்,
பிறங்கு மாமணி யருவியொ டிழிதரு
    பிருதிசென் றடைநெஞ்சே*
4
962
கரைசெய் மாக்கடல் கிடந்தவன் கனைகழல்
    அமரர்கள் தொழுதேத்த,
அரைசெய் மேகலை யலர்மக ளவளொடும்
    அமர்ந்தந லியமத்து,
வரைசெய் மாக்களி றிளவெதிர் வளர்முளை
    அளைமிகு தேன்தோய்த்து,
பிரச வாரிதன் னிளம்பிக் கருள்செயும்
    பிருதிசென் றடைநெஞ்சே*
5
963
'பணங்க ளாயிர முடையநல் லரவணைப்
    பள்ளிகொள் பரமா*'என்,
றிணங்கி வானவர் மணிமுடி பணிதர
    இருந்தந லிமயத்து,
மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற
    நிமிர்ந்தவை முகில்பற்றி,
பிணங்கு பூம்பொழில் நுழைந்துவண் டிசைசொலும்
    பிருதிசென் றடைநெஞ்சே*
6
964
கார்கொள் வேங்கைகள் கனவரை தழுவிய
    கறிவளர் கொடிதுன்னி,
போர்கொள் வேங்கைகள் புனவரை தழுவிய
    பூம்பொழி லிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத் தடம்படிந் தினமலர்

    எட்டுமிட் டிமையோர்கள்,
பேர்க ளாயிரம் பரவிநின் றடிதொழும்
    பிருதிசென் றடைநெஞ்சே*
7
965
இரவு கூர்ந்திருள் பெருகிய வரைமுழை
    இரும்பசி யதுகூர,
அரவம் ஆவிக்கு மகன்பொழில் தழுவிய
    அருவரை யிமயத்த,
பரம னாதியெம் பனிமுகில் வண்ணனென்
    றெண்ணிநின் றிமையோர்கள்,
பிரம னோடுசென் றடிதொழும் பெருந்தகைப்
    பிருதிசென் றடைநெஞ்சே*
8
966
ஓதி ஆயிர நாமங்க ளுணர்ந்தவர்க்
    குறுதுய ரடையாமல்,
ஏத மின்றிநின் றருளும்நம் பெருந்தகை
    இருந்தந லிமயத்து,
தாது மல்கிய பிண்டிவிண் டலர்கின்ற
    தழல்புரை யெழில்நோக்கி,
பேதை வண்டுக ளெரியென வெருவரு
    பிருதிசென் றடைநெஞ்சே*
9
967
கரிய மாமுகில் படலங்கள் கிடந்தவை
    முழங்கிட, களிறென்று
பெரிய மாசுணம் வரையெனப் பெயர்தரு
    பிருதியெம் பெருமானை,
வரிகொள் வண்டறை பூம்பொழில் மங்கையர்
    கலியன தொலிமாலை,
அரிய வின்னிசை பாடுநல் லடியவர்க்
    கருவினை யடையாவே.#
10


3. முற்ற மூத்து
திருவதரியாச்சிரமம் (பத்ரிநாத்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
968
முற்ற மூத்துக் கோல்துணையா
    முன்னடி நோக்கி வளைந்து,
இற்ற கால்போல் தள்ளி
    மெள்ள விருந்தங் கிளையாமுன்,
பெற்ற தாய்போல் வந்த
    பேய்ச்சி பெருமுலை யூடு,உயிரை
வற்ற வாங்கி யுண்ட
    வாயான் வதரி வணங்குதுமே.#
1
969
முதுகு பற்றிக் கைத்த
    லத்தால் முன்னொரு கோலூன்றி,
விதிர்வி திர்த்துக் கண்சு
    ழன்று மேற்கிளை கொண்டிருமி,
'இதுவென் னப்பர் மூத்த
    வாறெ'றன் றிளையவ ரேசாமுன்,
மருவுண் வண்டு பண்கள்
    பாடும் வதரி வணங்குதுமே.
2
970
உறிகள் போல்மெய்ந் நரம்பெ
    ழுந்தூன் தளர்ந்துள் ளமெள்கி,
நெறியை நோக்கிக் கண்சு
    ழன்று நின்று நடுங்காமுன்,
அறிதி யாகில் நெஞ்சம்
    அன்பா யாயிர நாமஞ்சொல்லி,
வெறிகொள் வண்டு பண்கள்
    பாடும் வதரி வணங்குதுமே.
3
971
பீளை சோரக் கண்ணி
    டுங்கிப் பித்தெழ மூத்திருமி,
தாள்கள் நோவத் தம்மில்
    முட்டித் தள்ளி நடவாமுன்,
காளை யாகிக் கன்று
    மேய்த்துக் குன்றெடுத் தன்றுநின்றான்,
வாளை பாயும் தண்ட
    டஞ்சூழ் வதரி வணங்குதுமே.
4
972
பண்டு காம ரான
    வாறும் பாவையர் வாயமுதம்,
உண்ட வாறும் வாழ்ந்த
    வாறும் ஒக்க வுரைத்திருமி,
தண்டு வாலா வூன்றி
    யூன்றித் தள்ளி நடவாமுன்,
வண்டு பாடும் தண்டு
    ழாயான் வதரி வணங்குதுமே.
5
973
எய்த்த சொல்லோ டீளை
    யேங்கி யிருமி யிளைத்துடலம்,
பித்தர் போலச் சித்தம்
    வேறாய்ப் பேசி அயராமுன்,
அத்த னெந்தை யாதி
    மூர்த்தி யாழ்கட லைக்கடைந்த,
மைத்த சோதி யெம்பெ
    ருமான் வதரி வணங்குதுமே.
6
974
'பப்ப அப்பர் மூத்த
    வாறு பாழ்ப்பது சீத்திரனை
ஒப்ப, ஐக்கள் போத
    வுந்த வுன்தமர் காண்மின்'என்று,
செப்பு நேர்மென் கொங்கை
    நல்லார் தாம்சிரி யாதமுன்னம்,
வைப்பும் நங்கள் வாழ்வு
    மானான் வதரி வணங்குதுமே.
7
975
'ஈசி போமி னீங்கி
    ரேன்மி னிருமி யிளைத்தீர்,உள்ளம்
கூசி யிட்டீர்' என்று
    பேசும் குவளையங் கண்ணியர்பால்,
நேச மான பாசம்
    விட்டு நன்னெறி நோக்கலுறில்,
வாசம் மல்கு தண்டு
    ழாயான் வதரி வணங்குதுமே.
8
976
புலன்கள் நைய மெய்யில்
    மூத்துப் போந்திருந் துள்ளமெள்கி,
கலங்க ஐக்கள் போத
    வுந்திக் கண்ட பிதற்றாமுன்,
அலங்க லாய தண்டு
    ழாய்கொண் டாயிர நாமஞ்சொல்லி,
வலங்கொள் தொண்டர் பாடி
    யாடும் வதரி வணங்குதுமே.
9
977
வண்டு தண்டே னுண்டு
    வாழும் வதரி நெடுமாலை,
கண்டல் வேலி மங்கை
    வேந்தன் கலிய னொலிமாலை,
கொண்டு தொண்டர் பாடி
    யாடக் கூடிடில் நீள்விசும்பில்
அண்ட மல்லால் மற்ற
    வர்க்கோர் ஆட்சி யறியோமே.#
10

4. ஏனமுனாகி
திருவதரியாச்சிரமம் (பத்ரிநாத்)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
978
ஏனமு னாகி யிருநில மிடந்தன்
    றிணையடி யிமையவர் வணங்க,
தானவ னாகம் தரணியிற் புரளத்
    தடஞ்சிலை குனித்தவெந் தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம் பயந்த
    தெய்வநன் னறுமலர் கொணர்ந்து,
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.#
1
979
கானிடை யுருவைச் சுடுசரந் துரந்து
    கண்டுமுன் கொடுந்தொழி லுரவோன்,
ஊனுடை யகலத் தடுகணை குளிப்ப
    வுயிர்கவர்ந் துகந்தவெம் மொருவன்,
தேனுடைக் கமலத் தயனொடு தேவர்
    சென்றுசென் றிறைஞ்சிட, பெருகு
வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
2
980
இலங்கையும் கடலு மடலருந் துப்பின்
    இருநிதிக் கிறைவனும், அரக்கர்
குலங்களும் கெடமுன் கொடுந்தொழில் புரிந்த
    கொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற,
விலங்கலி லுரிஞ்சி மேல்நின்ற விசும்பினல்
    வெண்துகில் கொடியென விரிந்து,
வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
3
981
துணிவினி யுனக்குச் சொல்லுவன் மனமே*
    தொழுதெழு தொண்டர்கள் தமக்கு,
பிணியொழித் தமரர் பெருவிசும் பருளும்
    பேரரு ளாளனெம் பெருமான்,
அணிமலர்க் குழலா ரரம்பையர் துகிலும்
    ஆரமும் வாரிவந்து, அணிநீர்
மணிகொழித் திழிந்த கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
4
982
பேயிடைக் கிருந்து வந்தமற் றவள்தன்
    பெருமுலை சுவைத்திட, பெற்ற
தாயிடைக் கிருத்த லஞ்சுவ வென்று
    தளர்ந்திட வளர்ந்தவெந் தலைவன்,
சேய்முகட் டுச்சி யண்டமும் சுமந்த
    செம்பொன்செய் விலங்கலில் இலங்கு,
வாய்முகட் டிழிந்த கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
5
983
தேரணங் கல்குல் செழுங்கயல் கண்ணி
    திறத்தொரு மறத்தொழில் புரிந்து,
பாரணங் கிமிலே றேழும்முன் னடர்த்த
    பனிமுகில் வண்ணனெம் பெருமான்,
காரணந் தன்னால் கடும்புனல் கயத்த
    கருவரை பிளவெழக் குத்தி,
வாரணங் கொணர்ந்த கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
6
984
வெந்திறல் களிறும் வேலைவா யமுதும்
    விண்ணொடு விண்ணவர்க் கரசும்,
இந்திரற் கருளி யெமக்குமீந் தருளும்
    எந்தையெம் மடிகளெம் பெருமான்,
அந்தரத் தமர ரடியிணை வணங்க
    ஆயிர முகத்தினா லருளி,
மந்தரத் திழிந்த கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
7
985
மான்முனிந் தொருகால் வரிசிலை வளைத்த
    மன்னவன் பொன்னிறத் துரவோன்,
ஊன்முனிந் தவன துடலிரு பிளவா
    வுகிர்நுதி மடுத்து,அய னரனைத்
தான்முனிந் திட்ட வெந்திறல் சாபந்
    தவிர்த்தவன், தவம்புரிந் துயர்ந்த
மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
8
986
கொண்டல்மா ருதங்கள் குலவரை தொகுநீர்க்
    குரைகட லுலகுட னனைத்தும்,
உண்டமா வயிற்றோ னொண்சுட ரேய்ந்த
    உம்பரு மூழியு மானான்,
அண்டமூ டறுத்தன் றந்தரத் திழிந்தங்
    கவனியா ளலமர, பெருகும்
மண்டுமா மணிநீர்க் கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானே.
9
987
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல்
    வதரியாச் சிரமத்துள் ளானை,
கருங்கடல் முந்நீர் வண்ணனை யெண்ணிக்
    கலியன்வா யொலிசெய்த பனுவல்,
வரஞ்செய்த வைந்து மைந்தும்வல் லார்கள்
    வானவ ருலகுடன் மருவி,
இருங்கட லுலக மாண்டுவெண் குடைக்கீழ்
    இமையவ ராகுவர் தாமே.#
10

5. கலையும் கரியும்
திருச்சாளக்கிராமம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
988
கலையும் கரியும் பரிமாவும்
    திரியும் கானம் கடந்துபோய்,
சிலையும் கணையும் துணையாகச்
    சென்றான் வென்றிச் செருக்களத்து,
மலைகொண் டலைநீ ரணைகட்டி
    மதிள்நீ ரிலங்கை வாளரக்கர்
தலைவன், தலைபத் தறுத்துகந்தான்
    சாளக் கிராம மடைநெஞ்சே*#
1
989
கடம்சூழ் கரியும் பரிமாவும்
    (*)ஒலிமாந் தேரும் காலாளும்,
உடன்சூழந் தெழுந்த கடியிலங்கை
    பொடியா வடிவாய்ச் சரந்துரந்தான்,
இடஞ்சூழ்ந் தெங்கு மிருவிசும்பில்
    இமையோர் வணங்க மணங்கமழும்,
தடஞ்சூழ்ந் தெங்கு மழகாய
    சாளக் கிராம மடைநெஞ்சே*

(*) ஒலிமான்றேரும் என்றும் பாடம்.
2
990
உலவு திரையும் குலவரையும்
    ஊழி முதலா எண்திக்கும்,
நிலவும் சுடரு மிருளுமாய்
    நின்றான் வென்றி விறலாழி
வலவன், வானோர் தம்பெருமான்
    மருவா வரக்கர்க் கெஞ்ஞான்றும்
சலவன், சலஞ்சூழ்ந் தழகாய
    சாளக் கிராம மடைநெஞ்சே*
3
991
ஊரான் குடந்தை யுத்தமன்
    ஒருகா லிருகால் சிலைவளைய,
தேரா வரக்கர் தேர்வெள்ளம்
    செற்றான் வற்றா வருபுனல்சூழ்
பேரான், பேரா யிரமுடையான்
    பிறங்கு சிறைவண் டறைகின்ற
தாரான், தாரா வயல்சூழ்ந்த
    சாளக் கிராம மடைநெஞ்சே*
4
992
அடுத்தார்த் தெழுந்தாள் பிலவாய்விட்
    டலற அவள்மூக் கயில்வாளால்
விடுத்தான் விளங்கு சுடராழி
    விண்ணோர் பெருமான் நண்ணார்முன்,
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக்
    கல்லொன் நேற்தி யினநிரைகாத்
தடுத்தான், தடஞ்சூழ்ந் தழகாய
    சாளக் கிராம மடைநெஞ்சே.*
5
993
தாயாய் வந்த பேயுயிரும்
    தயிரும் இழுது முடனுண்ட
வாயான், தூய வரியுருவிற்
    குறளாய்ச் சென்று மாவலியை
ஏயா னிரப்ப, 'மூவடிமண்
    இன்றே தா'என் றுலகேழும்
தாயான், காயா மலர்வண்ணன்
    சாளக் கிராம மடைநெஞ்சே*
6
994
ஏனோ ரஞ்ச வெஞ்சமத்துள்
    அரியாய்ப் பரிய இரணியனை,
ஊனா ரகலம் பிளவெடுத்த
    ஒருவன் தானே யிருசுடராய்,
வானாய்த் தீயாய் மாருதமாய்
    மலையா யலைநீ ருலகனைத்தும்
தானாய், தானு மானான்றன்
    சாளக் கிராம மடைநெஞ்சே*
7
995
வெந்தா ரென்பும் சுடுநீறும்
    மெய்யிற் பூசிக் கையகத்து,ஓர்
சந்தார் தலைகொண் டுலகேழுந்
    திரியும் பெரியோன் றான்சென்று,'என்
எந்தாய்* சாபம் தீர்,'என்ன
    இலங்க முதுநீர் திருமார்பில்
தந்தான், சந்தார் பொழில்சூழ்ந்த
    சாளக் கிராம மடைநெஞ்சே*
8
996
தொண்டா மினமு மிமையோரும்
    துணைநூல் மார்வி லந்தணரும்,
'அண்டா* எமக்கே யருளாய்,'என்
    றணையும் கோயி லருகெல்லாம்,
வண்டார் பொழிலின் பழனத்து
    வயலி னயலே கயல்பாய,
தண்டா மரைகள் முகமலர்த்தும்
    சாளக் கிராம மடைநெஞ்சே*
9
997
தாரா வலரும் வயல்சூழ்ந்த
    சாளக் கிராமத் தடிகளை,
காரார் புறவில் மங்கைவேந்தன்
    கலிய னொலிசெய் தமிழ்மாலை,
ஆரா ருலகத் தறிவுடையார்
    அமரர் நன்னாட் டரசாள,
பேரா யிரமும் ஓதுமின்கள்
    அன்றி யிவையே பிதற்றுமினே.#
10

மேலே செல்க

6. வாணிலா முறுவல்
நைமிசாரணியம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
998
வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்
    மாதரார் வனமுலைப் பயனே
பேணினேன், அதனைப் பிழையெனக் கருதிப்
    பேதையேன் பிறவிநோ யறுப்பான்,
ஏணிலே னிருந்தே னெண்ணினே னெண்ணி
    இளையவர் கலவியின் திறத்தை
நாணினேன், வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*#
1
999
சிலம்படி யுருவிற் கருநெடுங் கண்ணார்
    திறத்தனா யறத்தையே மறந்து,
புலம்படிந் துண்ணும் போகமே பெருக்கிப்
    போக்கினேன் பொழுதினை வாளா,
அலம்பு[ரி தடக்கை ஆயனே* மாயா*
    வானவர்க் கரசனே, வானோர்
நலம்புரிந் திறைஞ்சும் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
2
1000
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து
    சுரிகுழல் மடந்தையர் திறத்து,
காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த
    தொண்டனேன் நமன்றமர் செய்யும்,
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை
    வெண்டிரை யலமரக் கடைந்த
நாதனே, வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
3
1001
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
    பிறர்பொருள் தாரமென் றிவற்றை,
நம்பினா ரிறத்தால் நமன்றமர் பற்றி
    எற்றிவைத்து, 'எரியெழு கின்ற,
செம்பினா லியன்ற பாவையைப் பாவீ*
    தழுவெ'ன மொழிவதற் கஞ்சி,
நம்பனே* வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
4
1002
இடும்பையா லடர்ப்புண்டு, இடுமினோ துற்றென்
    றிரந்தவர்க் கில்லையே யென்று,
நெடுஞ்சொலால் மறுத்த நீவனே னந்தோ*
    நினைக்கிலேன் வினைப்பயன் றன்னை,
கடுங்சொலார் கடியார் காலனார் தமரால்
    படுவதோர் கொடுமிறைக் கஞ்சி,
நடுங்கிநான் வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
5
1003
கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து
    திரிந்துநா யினத்தொடும் திளைத்திட்டு,
ஓடியு முழன்று முயிர்களே கொன்றேன்
    உணர்விலே னாதலால், நமனார்
பாடியைப் பெரிதும் பரிசழித் திட்டேன்
    பரமனே* பாற்கடல் கிடந்தாய்,
நாடிநான் வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
6
1004
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்
    நீதியல் லாதன செய்தும்,
துஞ்சினர் செல்லும் தொன்னெறி கேட்டே
    துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்,
வஞ்சனே னடியேன் நெஞ்சினிற் பிரியா
    வானவா* தானவர்க் கென்றும்
நஞ்சனே, வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
7
1005
ஏவினார் கலியார் நலிகவென் றென்மேல்
    எங்ஙனே வாழுமாறு, ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்
    குறுங்குடி நெடுங்கடல் வண்ணா,
பாவினா ரின்சொல் பன்மலர் கொண்டுன்
    பாதமே பரவிநான் பணிந்து,என்
நாவினால் வந்துன் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
8
ஊனிடைச் சுவர்வைத் தென்புதூண் நாட்டி
    உரோமம்மேய்ந்து ஒன்பது வாசல்,
தானுடைக் குரம்பை பிரியும்போ துன்றன்
    சரணமே சரணமென் றிருந்தேன்,
தேனுடைக் கமலத் திருவினுக் கரசே*
    திரைகொள்மா நெடுங்கடல் கிடந்தாய்,
நானுடைத் தவத்தால் திருவடி யடைந்தேன்
    நைமிசா ரணியத்து ளெந்தாய்*
9
1007
'ஏதம்வந் தணுகா வண்ணம்நா மெண்ணி
    எழுமினோ தொழுதும்,'என்று, இமையோர்
நாதன்வந் திறைஞ்சும் நைமிசா ரணியத்
    தெந்தையைச் சிந்தையுள் வைத்து,
காதலே மிகுத்த கலியன்வா யொலிசெய்
    மாலைதான் கற்றுவல் லார்கள்,
ஓதநீர் வைய மாண்டுவெண் குடைக்கீழ்
    உம்பரு மாகுவர் தாமே.#
10

7. அங்கண் ஞாலம்
சிங்கவேள்குன்றம் (அஹோபிலம்)
கலி நிலைத்துறை
1008
அங்கண் ஞால மஞ்சஅங்கோ
    ராளரி யாய், அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால்
    போழ்ந்த புனிதனிடம்,
பைங்க ணானைக் கொம்புகொண்டு
    பத்திமை யால், அடிக்கீழ்ச்
செங்க ணாளி யிட்டிறைஞ்சும்
    சிங்கவேள் குன்றமே.#
1
1009
அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்
    கோளரி யாய்;அவுணன்
கொலைக்கை யாளன் நெஞ்சிடந்த
    கூருகி ராளனிடம்,
மலைத்த செல்சாத் தெறிந்தபூசல்
    வன்துடி வாய்கடுப்ப,
சிலைக்கை வேடர் தெழிப்பறாத
    சிங்கவேள் குன்றமே.
2
1010
ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர்
    கோளரி யாய்,அவுணன்
வாய்ந்த ஆகம் வள்ளுகிரால்
    வகிர்ந்தவம் மானதிடம்,
ஓய்ந்த மாவு முடைந்தகுன்று
    மன்றியும் நின்றழலால்,
தேய்ந்த வேயு மல்லதில்லாச்
    சிங்கவேள் குன்றமே.
3
1011
எவ்வும் வெவ்வேல் பொன்பெயரோ
    னேதல னின்னுயிரை
வவ்வி, ஆகம் வள்ளுகிரால்
    வகிர்ந்தவம் மானதிடம்,
கவ்வு நாயும் கழுகுமுச்சிப்
    போதொடு கால்சுழன்று,
தெய்வ மல்லால் செல்லவொண்ணாச்
    சிங்கவேள் குன்றமே.
4
1012
மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர்
    கோளரி யாய்,அவுணன்
பொன்ற ஆகம் வள்ளுகிரால்
    போழ்ந்த புனிதனிடம்,
நின்ற செந்தீ மொண்டுசூறை
    (*)நீள்விசும் பூடிரிய
சென்று காண்டற் கரியகோயில்
    சிங்கவேள் குன்றமே.

(*) நீள்விசும்பூடெரிய என்பதும் பாடம்
5
1013
எரிந்த பைங்க ணிலங்குபேழ்வா
    யெயிற்றொடி தெவ்வுருவென்று,
இரிந்து வானோர் கலங்கியோட
    இருந்தவம் மானதிடம்,
நெரிந்த வேயின் முழையுள்நின்று
    நீணெறி வாயுழுவை,
திரிந்த வானைச் சுவடுபார்க்கும்
    சிங்கவேள் குன்றமே.
6
1014
முனைத்த சீற்றம் விண்சுடப்போய்
    மூவுல கும்பிறவும்,
அனைத்து மஞ்ச வாளரியா
    யிருந்தவம் மானதிடம்,
கனைத்த தீயும் கல்லுமல்லா
    வில்லுடை வேடருமாய்,
தினைத்த னையுஞ் செல்லவொண்ணாச்
    சிங்கவேள் குன்றமே.
7
1015
நாத்த ழும்ப நான்முகனு
    மீசனு மாய்முறையால்
ஏத்த, அங்கோ ராளரியா
    யிருந்தவம் மானதிடம்,
காய்த்த வாகை நெற்றொலிப்பக்
    கல்லதர் வேய்ங்கழைபோய்,
தேய்த்த தீயால் விண்சிவக்கும்
    சிங்கவேள் குன்றமே.
8
1016
நல்லை நெஞ்சே* நாம்தொழுதும்
    நம்முடை நம்பெருமான்,
அல்லி மாதர் புல்கநின்ற
    ஆயிரந் தோளனிடம்,
நெல்லி மல்கிக் கல்லுடைப்பப்
    புல்லிலை யார்த்து,அதர்வாய்
சில்லு சில்லென் றொல்லறாத
    சிங்கவேள் குன்றமே.
9
1017
செங்க ணாளி யிட்டிறைஞ்சும்
    சிங்கவேள் குன்றுடைய,
எங்க ளீச னெம்பிரானை
    இருந்தமிழ் நூற்புலவன்,
மங்கை யாளன் மன்னுதொல்சீர்
    வண்டறை தார்க்கலியன்,
செங்கை யாளன் செஞ்சொல்மாலை
    வல்லவர் தீதிலரே.#
10

8. கொங்கலர்ந்த
திருவேங்கடம் (திருப்பதி) - 1
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1018
கொங்க லர்ந்த மலர்க்கு ருந்த
    மொசித்த கோவல னெம்பிரான்,
சங்கு தங்கு தடங்க டல்துயில்
    கொண்ட தாமரைக் கண்ணினன்,
பொங்கு புள்ளினை வாய்பி றந்தபு
    ராணர் தம்மிடம், பொங்குநீர்
செங்க யல்திளைக் கும்சு னைத்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*#
1
1019
பள்ளி யாவது பாற்க டலரங்
    கம்இ ரங்கவன் பேய்முலை,
பிள்ளை யாயுயி ருண்ட வெந்தையி
    ரான வன்பெரு குமிடம்,
வெள்ளி யான்கரி யான்ம ணிநிற
    வண்ண னென்றெண்ணி, நாடொறும்
தெள்ளி யார்வணங் கும்ம லைத்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*#
2
1020
நின்ற மாமரு திற்று வீழந
    டந்த நின்மலன் நேமியான்,
என்றும் வானவர் கைதொ ழுமிணைத்
    தாம ரையடி யெம்பிரான்,
கன்றி மாரி பொழிந்தி டக்கடி
    தாநி ரைக்கிடர் நீக்குவான்,
சென்று குன்ற மெடுத்த வன்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
3
1021
பார்த்தற் காயன்று பார தங்கைசெய்
    திட்டு வென்ற பரஞ்சுடர்,
கோத்தங் காயர்தம் பாடி யில்குர
    வைபி ணைந்தஎம் கோவலன்,
ஏத்து வார்தம் மனத்துள் ளான்இட-
    வெந்தை மேவிய வெம்பிரான்,
தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*#
4
1022
வண்கை யானவு ணர்க்கு நாயகன்
    வேள்வி யில்சென்று மாணியாய்,
மண்கை யாலிரந் தான்ம ராமர
    மேழு மெய்த வலத்தினான்,
எண்கை யானிம யத்துள் ளானிருஞ்
    சோலை மேவிய எம்பிரான்,
திண்கைம் மாதுயர் தீர்த்த வன்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
5
1023
எண்டி சைகளு மேழு லகமும்
    வாங்கிப் பொன்வயிற் றில்பெய்து,
பண்டொ ராலிலைப் பள்ளி கொண்டவன்
    பான்ம திக்கிடர் தீர்த்தவன்,
ஒண்டி றலவு ணன்னு ரத்துகிர்
    வைத்த வனொள்ளெ யிற்றொடு,
திண்டி றலரி யாய வன்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
6
1024
பாரு நீரெரி காற்றி னோடா
    காச முமிவை யாயினான்,
பேரு மாயிரம் பேச நின்றபி-
    றப்பி லிபெரு குமிடம்,
காரும் வார்பனி நீள்வி சும்பிடைச்
    சோரு மாமுகில் தோய்தர,
சேரும் வார்பொழில் சூழெ ழில்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
7
1025
அம்ப ரமனல் கால்நி லம்சல
    மாகி நின்றஅ மரர்கோன்,
வம்பு லாமலர் மேல்ம லிமட
    மங்கை தன்கொழு நனவன்,
கொம்பி னன்னவி டைம டக்குற
    மாதர் நீளித ணந்தொறும்,
செம்பு னமவை காவல் கொள்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
8
1026
பேசு மின்திரு நாம மெட்டெழுத்
    தும்சொல் லிநின்று பின்னரும்,
பேசு வார்தமை யுய்ய வாங்கிப்பி-
    றப்ப றுக்கும் பிரானிடம்,
வாச மாமலர் நாறு வார்பொழில்
    சூழ்த ருமுல குக்கெல்லாம்,
தேச மாய்த்திக ழும்ம லைத்திரு
    வேங்க டமடை நெஞ்சமே*
9
1027
செங்க யல்திளைக் குஞ்சு னைத்திரு
    வேங்க டத்துறை செல்வனை,
மங்கை யர்தலை வன்க லிகன்றி
    வண்ட மிழ்ச்செஞ்சொல் மாலைகள்,
சங்கை யின்றித் தரித்து ரைக்கவல்
    லார்கள் தஞ்சம தாகவே,
வங்க மாகடல் வையங் காவலர்
    ஆகி வானுல காள்வரே.#
10

9. தாயே தந்தை
திருவேங்கடம் (திருப்பதி) - 2
கலிநிலைத்துறை
1028
தாயே தந்தையென்றும்
    தாரமேகிளை மக்களென்றும்,
நோயே பட்டொழிந்தேன்
    நுனைக்காண்பதோ ராசையினால்,
வேயேய் பூம்பொழில்சூழ்
    விரையார்திரு வேங்கடவா,
நாயேன் வந்தடைந்தேன்
    நல்கியாளென்னைக் கொண்டருளே.#
1
1029
மானேய் கண்மடவார்
    மயக்கிற்பட்டு, மாநிலத்து
நானே நானாவித
    நரகம்புகும் பாவஞ்செய்தேன்,
தேனாய் பூம்பொழில்சூழ்
    திருவேங்கட மாமலை.என்
ஆனாய்* வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
2
1030
கொன்றேன் பல்லுயிரைக்
    குறிக்கோளொன் றிலாமையினால்,
என்றே னுமிரந்தார்க்
    கினிதாகவு ரைத்தறியேன்,
குன்றேய் மேகமதிர்
    குளிர்மாமலை வேங்கடவே,
அன்றே வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
3
1031
குலந்தா னெத்தனையும்
    பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்,
நலந்தா னொன்றுமிலேன்
    நல்லதோரறஞ் செய்துமிலேன்,
நிலந்தோய் நீள்முகில்சேர்
    நெறியார்திரு வேங்கடவா,
அலந்தேன் வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
4
1032
எப்பா வம்பலவு
    மிவையேசெய் திளைத்தொழிந்தேன்,
துப்பா நின்னடியே
    தொடர்ந்தேத்தவுங் கிற்கின்றிலேன்,
செப்பார் திண்வரைசூழ்
    திருவேங்கட மாமலை,என்
அப்பா* வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
5
1033
மண்ணாய் நீரெரிகால்
    மஞ்சுலாவுமா காசமுமாம்
புண்ணா ராக்கைதன்னுள்
    புலம்பித்தளர்ந் தெய்த்தொழிந்தேன்,
விண்ணார் நீள்சிகர
    விரையார்திரு வேங்கடவா,
அண்ணா* வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
6
1034
தெரியேன் பாலகனாய்ப்
    பலதீமைகள் செய்துமிட்டேன்,
பெரியே னாயினபின்
    பிறர்க்கேயுழைத் தேழையானேன்,
கரிசெர் பூம்பொழில்சூழ்
    கனமாமலை வேங்கடவா,
அரியே* வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
7
1035
நோற்றேன் பல்பிறவி
    நுனைக்காண்பதோ ராசையினால்,
ஏற்றேன் இப்பிறப்பே
    இடருற்றன னெம்பெருமான்,
கோற்றேன் பாய்ந்தொழுகும்
    குளிர்சோலைசூழ் வேங்கடவா,
ஆற்றேன் வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
8
1036
பற்றே லொன்றுமிலேன்
    பாவமேசெய்து பாவியானேன்,
மற்றே லொன்றரியேன்
    மாயனே*எங்கள் மாதவனே,
கற்றேன் பாய்ந்தொழுகும்
    கமலச்சுனை வேங்கடவா,
அற்றேன் வந்தடைந்தேன்
    அடியேனையாட் கொண்டருளே.
9
1037
கண்ணா யேழுலகுக்
    குயிராயவெங் கார்வண்ணனை,
விண்ணோர் தாம்பரவும்,
    பொழில்வேங்கட வேதியனை,
திண்ணார் மாடங்கசூழ்
    திருமங்கையர் கோன்கலியன்,
பண்ணார் பாடல்பத்தும்
    பயில்வார்க்கில்லை பாவங்களே.#
10

10. கண்ணார் கடல்சூழ்
திருவேங்கடம் (திருப்பதி) - 3
கலிவிருத்தம்
1038
கண்ணார் கடல்சூ ழிலங்கைக் கிறைவன்றன்
திணாண்கம் பிளக்கச் சரஞ்செல வுய்த்தாய்,
விண்ணோர் தொழும்வேங் கடமா மலைமேய
அண்ணா, அடியே னிடரைக் களையாயே.#
1
1039
இலங்கைப் பதிக்கன் றிறையாய, அரக்கர்
குலங்கெட் டவர்மாளக் கொடிப்புள் திரித்தாய்,
விலங்கல் குடுமித் திருவேங் கடம்மேய,
அலங்கல் துளப முடியாய்* அருளாயே.
2
1040
நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு,
ஏரா லமிளந் தளிர்மேல் துயிலெந்தாய்,
சீரார் திருவேங் கடமா மலைமேய,
ஆரா அமுதே* அடியேற் கருளாயே.
3
1041
உண்டா யுறிமேல் நறுநெய் யமுதாக,
கொண்டாய் குறளாய் நிலமீ ரடியாலே,
விண்டோய் சிகரத் திருவேங் கடம்மேய,
அண்டா* அடியே னுக்கருள் புரியாயே.
4
1042
தூணா யதனூ டரியாய் வந்துதோன்றி,
பேணா அவுண னுடலம் பிளந்திட்டாய்,
சேணார் திருவேங் கடமா மலைமேய,
கோணா கணையாய், குறிக்கொள் ளெனைநீதே.
5
1043
மன்னா இம்மனி சப்பிற வியைநீக்கி,
தன்னாக்கித் தன்னின் னருள்செய் யும்தலைவன்,
மின்னார் முகில்சேர் திருவேங் கடம்மேய,
என்னானை யென்னப்ப னென்நெஞ்சி லுளானே.
6
1044
மானேய் மடநோக் கிதிறத் தெதிர்வந்த,
ஆனேய் விடைசெற்ற அணிவரைத் தோளா,
தேனே* திருவேங் கடமா மலைமேய,
கோனே* என்மனம் குடிகொண் டிருந்தாயே.
7
1045
சேய னணிய னென்சிந் தையுள்நின்ற
மாயன், மணிவா ளொளிவெண் தரளங்கள்,
வேய்விண் டுதிர்வேங் கடமா மலைமேய,
ஆய னடியல் லதுமற் றறியேனே.
8
1046
வந்தா யென்மனம் புகுந்தாய் மன்னிநின்றாய்,
நந்தா தகொழுஞ் சுடரே* எங்கள்நம்பீ,
சிந்தா மணியே* திருவேங் கடம்மேய
எந்தாய், இனியா னுன்னையென் றும்விடேனே.
9
1047
வல்லார் மலிவேங் கடமா மலைமேய,
மல்லார் திரடோள் மணிவண்ண னம்மானை,
கல்லார் திரடோள் கலியன் சொன்னமாலை,
வல்லா ரவர்வா னவரா குவர்தாமே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

இரண்டாம் பத்து
1. வானவர்
திருவேங்கடம் (திருப்பதி) - 4
ஆசிரியத்துறை
1048
வானவர் தங்கள் சிந்தை போலஎன்
    நெஞ்சமே* இனிதுவந்து, மாதவ
மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்ற வெந்தை,
கானவாரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம்
    மேவி, மாண்குறள்
ஆன அந்தணற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.#
1
1049
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்
    உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்ச மென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு
    குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
2
1050
இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்
    ஏத்து வாருற வோடும், வானிடைக்
கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்சமென்பாய்,
வண்டு வாழ்வட வேங்கடமலை
    கோயில் கொண்டத னோடும், மீமிசை
அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
3
1051
பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே*
    பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை
மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,
கோவி நாயகன் கொண்ட லுந்துயர்
    வேங்க டமலை யாண்டு, வானவர்
ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
4
1052
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப்
    புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்,
எங்கும் வானவர் தான வர்நிறைந்
    தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
5
1053
துவரி யாடையர் மட்டை யர்சமண்
    தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,
தமரும் தாங்களு மேத டிக்கஎன் நெஞ்சமென்பாய்,
கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்
    கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,
அமர நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
6
1054
தருக்கி னால்சமண் செய்து சோறுதண்
    தயிரி னால்திர ளை,மி டற்றிடை
நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்சமென்பாய்,
மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்
    கோயில் கொண்டத னோடும், வானிடை
அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.
7
1055
சேய னணியன் சிறியன் பெரிய னென்பது
    சிலர்பேசக் கேட்டிருந்
தே,என் னெஞ்சமென் பாய்*எனக் கொன்று சொல்லாதே,
வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி
    வேங்க டமலை கோயில் மேவிய,
ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
8
1056
கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்
    னெஞ்சமென் பாய்* துணிந்துகேள்,
பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் (*)காண்கிலார்,
ஆடு தாமரை யோனு மீசனும்
    அமரர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து
ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

(*) காண்கிலா என்பதும் பாடம்.
9
1057
மின்னு மாமுகில் மேவு தண்திரு
    வேங்க டமலை கோயில் மேவிய,
அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,
கன்னி மாமதிள் மங்கை யர்கலி
    கன்றி யின்தமி ழாலு ரைத்த,இம்
மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலதே.#
10

2. காசையாடை
திருஎவ்வுள் (திருவள்ளூர்)
கலிநிலைத்துறை
1058
காசை யாடை மூடியோடிக்
    காதல்செய் தானவனூர்,
நாச மாக நம்பவல்ல
    நம்பி நம்பெருமான்,
வேயி னன்ன தோள்மடவார்
    வெண்ணெயுண் டானிவனென்று
ஏச நின்ற வெம்பெருமா
    னெவ்வுள் கிடந்தானே.#
1
1059
தைய லாள்மேல் காதல்செய்த
    தானவன் வாளரக்கன்,
பொய்யி லாத பொன்முடிக
    ளொன்பதோ டொன்றும்,அன்று
செய்த வெம்போர் தன்னி லங்கோர்
    செஞ்சரத் தாலுருள,
எய்த வெந்தை யெம்பெருமா
    னெவ்வுள் கிடந்தானே.
2
1060
முன்னோர் தூது வானரத்தின்
    வாயில் மொழிந்து, அரக்கன்
மன்னூர் தன்னை வாளியினால்
    மாள முனிந்து அவனே
பின்னோர் தூத னாதிமன்னர்க்
    காகிப் பெருநிலத்தார்,
இன்னார் தூத னெனநின்றா
    னெவ்வுள் கிடந்தானே.
3
1061
பந்த ணைந்த மெல்விரலாள்
    பாவைதன் காரணத்தால்,
வெந்தி றலே றேழும்வென்ற
    வேந்தன் விரிபுகழ்சேர்,
நந்தன் மைந்த னாகவாகும்
    நம்பி நம்பெருமான்,
எந்தை தந்தை தம்பெருமா
    னெவ்வுள் கிடந்தானே.
4
1062
பால னாகி ஞாலமேழு
    முண்டுபண் டாலிலைமேல்,
சால நாளும் பள்ளிகொள்ளும்
    தாமரைக் கண்ணன்எண்ணில்,
நீல மார்வண் டுண்டுவாழும்
    நெய்தலந் தண்கழனி,
ஏல நாறும் பைம்புறவி
    னெவ்வுள் கிடந்தானே.
5
1063
சோத்த நம்பி யென்றுதொண்டர்
    மிண்டித் தொடர்ந்தழைக்கும்,
ஆத்த னம்பி செங்கணம்பி
    யாகிலும் தேவர்க்கெல்லாம்,
மூத்த நம்பி முக்கணம்பி
    யென்று முனிவர்தொழு-
தேத்தும், நம்பி யெம்பெருமா
    னெவ்வுள் கிடந்தானே.
6
1064
திங்க ளப்பு வானெரிகா
    லாகி, திசைமுகனார்
தங்க ளப்பன் சாமியப்பன்
    பாகத் திருந்த,வண்டுண்
தொங்க லப்பு நீண்முடியான்
    சூழ்கழல் சூடநின்ற,
எங்க ளப்ப னெம்பெருமான்
    னெவ்வுள் கிடந்தானே.
7
1065
முனிவன் மூர்த்தி மூவராகி
    வேதம் விரித்துரைத்த
புனிதன், பூவை வண்ணனண்ணல்
    புண்ணியன் விண்ணவர்கோன்,
தனியன் சேயன் தானொருவன்
    ஆகிலும் தன்னடியார்க்கு
இனியன், எந்தை யெம்பெருமான்
    னெவ்வுள் கிடந்தானே.
8
1066
பந்தி ருக்கும் மெல்விரலாள்
    பாவை பனிமலராள்,
வந்தி ருக்கும் மார்வன்நீல
    மேனி மணிவண்ணன்,
அந்த ரத்தில் வாழும் வானோர்
    நாயக னாயமைந்த,
இந்தி ரற்கும் தம்பெருமா
    னெவ்வுள் கிடந்தானே.
9
1067
இண்டை கொண்டு தொண்டரேத்த
    எவ்வுள் கிடந்தானை,
வண்டு பாடும் பைம்புறவில்
    மங்கையர் கோன்கலியன்,
கொண்ட சீரால் தண்டமிழ்செய்
    மாலையீ ரைந்தும்வல்லார்,
அண்ட மாள்வ தாணையன்றே
    லாள்வ ரமருலகே.#
10

3. விற்பெருவிழவும்
திருவல்லிக்கேணி
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1068
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும்
    வேழமும் பாகனும் வீழ,
செற்றவன் றன்னை, புரமெரி செய்த
    சிவனுறு துயர்களை தேவை,
பற்றலர் வீயக் கோல்கையில் கொண்டு
    பார்த்தன்றன் தேர்முன்நின் றானை,
சிற்றவை பணியால் முடிதுறந் தானைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.#
1
1069
வேதத்தை வேதத் தின்சுவைப் பயனை
    விழுமிய முனிவர்கள் விழுங்கும்,
கோதிலின் கனிணை நந்தனார் களிற்றைக்
    குவலயத் தோர்தொழு தேத்தும்,
ஆதியை யமுதை யென்னை யாளுடை
    அப்பனை ஒப்பவ ரில்லா
மாதர்கள் வாழும், மாடமா மயிலைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.#
2
1070
வஞ்சனை செய்யத் தாயுரு வாகி
    வந்தபே யலறிமண் சேர,
நஞ்சமர் முலையூ டுயிர்செக வுண்ட
    நாதனைத் தானவர் கூற்றை,
விஞ்சைவா னவர்சா ரணர்சித்தர் வியந்து
    துதிசெய்யப் பெண்ணுரு வாகி,
அஞ்சுவை யமுத மன்றளித் தானைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.
3
1071
இந்திர னுக்கென் றாயர்க ளெடுத்த
    எழில்விழ வில்பழ நடைசெய்,
மந்திர விதியில் பூசனை பெறாது
    மழைபொழிந் திடத்தளர்ந்து, ஆயர்
எந்தமோ டினவா நிரைதள ராமல்
    எம்பெரு மானரு ளென்ன,
அந்தமில் வரையால் மழைதடுத் தானைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.
4
1072
இன்துணைப் பதுமத் தலர்மகள் தனக்கும்
    இன்பன்நற் புவிதனக் கிறைவன்,
தன்துணை யாயர் பாவைநப் பின்னை
    தனக்கிறை மற்றையோர்க் கெல்லாம்
வன்துணை, பஞ்ச பாண்டவர்க் காகி
    வாயுரை தூதுசென் றியங்கும்
என்துணை, எந்தை தந்தைதம் மானைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.
5
1073
அந்தகன் சிறுவ னரசர்த மரசற்
    கிளையவ னணியிழை யைச்சென்று,
'எந்தமக் குரிமை செய்'எனத் தரியாது
    'எம்பெரு மானருள்*' என்ன,
சந்தமல் குழலாள் அலக்கண்நூற் றுவர்தம்
    பெண்டிரு மெய்திநூ லிழப்ப,
இந்திரன் சிறுவன் தேர்முன்நின் றானைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.
6
1074
பரதனும் தம்பி சத்துருக் கனனும்
    இலக்கும னோடுமை திலியும்
இரவுநன் பகலும் துதிசெய்ய நின்ற
    இராவணந் தகனையெம் மானை,
குரவமே கமழும் குளிர்பொழி லு}டு
    குயிலொடு மயில்கள்நின் றால,
இரவியின் கதிர்கள் நுழைதல்செய் தறியாத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.#
7
1075
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
    வாயிலோ ராயிர நாமம்
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்
    கொன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
    பிறையெயிற் றனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.#
8
1076
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
    வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
    கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்
    சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
    திருவல்லிக் கேணிக்கண் டேனே.#
9
1077
மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
    மாடமா ளிகையும்மண் டபமும்,
தென்னன்தொண் டையர்கோன் செய்தநன் மயிலைத்
    திருவல்லிக் கேணிநின் றானை,
கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
    காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன் வல்லார்
    சுகமினி தாள்வர்வா னுலகே.#
10

4. அன்றாயர்
திருநீர்மலை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1078
அன்றாயர்கு லக்கொடி யோடணிமா
    மலர்மங்கையொ டன்பள வி,அவுணர்க்
கென்றானு மிரக்கமி லாதவனுக்
    குறையுமிட மாவது, இரும்பொழில்சூழ்
நன்றாயபு னல்நறை யூர்திருவா
    லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,
நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.#
1
1079
காண்டாவன மென்பதோர் காடமரர்க்
    கரையனது கண்டவன் நிற்க,முனே
மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்
    அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்
தாண்டான்,அவு ணனவன் மார்வகலம்
    உகிரால்வகி ராக னிந்து, அரியாய்
நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
2
1080
அலமன்னு மடல்சுரி (*)சங்கமெடுத்
    தடலாழியி னாலணி யாருருவின்,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள்
    பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப்
    பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.

(*) சங்கமடுத்து என்றும் பாடம்.
3
1081
தாங்காததோ ராளரி யாயவுணன்-
    றனைவீட முனிந்தவ னாலமரும்,
பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்
    ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,
பாங்காகமுன் ஐவரொ டன்பளவிப்
    பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,
நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
4
1082
மாலுங்கட லாரம லைக்குவடிட்
    டணைகட்டி வரம்புரு வ,மதிசேர்
கோலமதி யாயவி லங்கைகெடப்
    படைதொட்டொரு காலம ரிலதிர,
காலமிது வென்றயன் வாளியினால்
    கதிர்நீண்முடி பத்து மறுத்தமரும்,
நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
5
1083
பாராருல கும்பணி மால்வரையும்
    கடலும்சுட ருமிவை யுண்டும்,எனக்
காராதென நின்றவ னெம்பெருமான்
    அலைநீருல குக்கர சாகிய,அப்-
பேரானைமு னிந்தமு னிக்கரையன்
    பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,
நீரார்பே ரான்நெடு மாலவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
6
1084
புகராருரு வாகிமு னிந்தவனைப்
    புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்
நகராயின பாழ்பட நாமமெறிந்-
    ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,
பகராதவ னாயிர நாமமடிப்
    பணியாதவ னைப்பணி யாலமரில்,
நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
7
1085
பிச்சச்சிறு பீலிபி டித்துலகில்
    பிணந்தின்மட வாரவர் போல்,அங்ஙனே
அச்சமிலர் நாணில ராதன்மையால்
    அவர்செய்கை வெறுத்தணி மாமலர்தூய்,
'நச்சிநம னாரடை யாமைநமக்
    கருள்செய்' என வுள்குழைந் தார்வமொடு,
நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.
8
1086
பேசுமள வன்றிது வம்மின்நமர்*
    பிறர்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,
நாசமது செய்திடும் ஆதன்மையால்
    அதுவேநம துய்விடம் (*)நாண்மலர்மேல்
வாசமணி வண்டறை பைம்புறவில்
    மனமைந்தொடு நைந்துழல் வார்,மதியில்
நீசரவர் சென்றடை யாதவனுக்
    கிடம்மாமலை யாவது நீர்மலையே.

(*) நாண்மலர்தூய் என்றும் பாடம்.
9
1087
நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்
    நிலவும்புகழ் மங்கையர் கோன்,அமரில்
கடமாகளி யானைவல் லான்கலியன்
    ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு,உடனே
விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்
    எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,
கொடுமாகடல் வையக மாண்டுமதிக்
    குடை மன்னவ ராயடி கூடுவரே.#
10

5. பாராயது
திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) - 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1088
பாராய துண்டுமிழ்ந்த பவளத்தூணைப்
    படுகடலி லமுதத்தைப் பரிவாய்கீண்ட
சீரானை, எம்மானைத் தொண்டர்தங்கள்
    சிந்தையுள்ளே முளைத்தெழுந்த தீங்கரும்பினை,
போரானைப் கொம்பொசித்த போரேற்றினைப்
    புணர்மருத மிறநடந்த பொற்குன்றினை,
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக்
    கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.#
1
1089
பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப்
    பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி
மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை
    என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்
(*)நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்றன்னை
    நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
    கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

(*) நீண்டஅந்தக் கருமுகிலை அம்மான்தன்னை என்றும் பாடம்.
2
1090
உடம்புருவில் மூன்றெhன்றாய் மூர்த்திவேறாய்
    உலகுய்ய நின்றானை, அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
    விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
    தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
3
1091
பேய்த்தாயை முலையுண்ட பிள்ளைதன்னைப்
    பிணைமருப்பில் கருங்களிற்றைப் பிணைமான்நோக்கின்,
ஆய்த்தாயர் தயிர்வெண்ணெ யமர்ந்தகோவை
    அந்தணர்தம் அமுதத்தைக் குரவைமுன்னே
கோத்தானை, குடமாடு கூத்தன்றன்னைக்
    கோகுலங்கள் தளராமல் குன்றமேந்திக்
காத்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
4
1092
பாய்ந்தானைத் திரிசகடம் பாறிவீழப்
    பாலகனா யாலிலையில் பள்ளியின்பம்
ஏய்ந்தானை, இலங்கொளிசேர் மணிக்குன்றன்ன
    ஈரிரண்டு மால்வரைத்தோ ளெம்மான்றன்னை,
தோய்ந்தானை நிலமகள்தோள் தூதிற்சென்றப்
    பொய்யறைவாய் புகப்பெய்த மல்லர்மங்கக்
காய்ந்தானை, எம்மானைக் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
5
1093
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள்மேவிக்
    கிளர்பொறிய மறிதிரிய வதனின்பின்னே
படர்ந்தானைப் படுமதத்த களிற்றின்கொம்பு
    பறித்தானைப் பாரிடத்தை எயிறுகீற
இடந்தானை, வளைமருப்பி னேனமாகி
    இருநிலனும் பெருவிசும்பு மெய்தாவண்ணம்
கடந்தானை, எம்மானை கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
6
1094
பேணாத வலியரக்கர் மெலியவன்று
    பெருவரைத்தோ ளிறநெரித்தன் றவுணர்கோனை,
பூணாகம் பிளவெடுத்த போல்வல்லோனைப்
    பொருகடலுள் துயிலமர்ந்த புள்ளூர்தியை
ஊணாகப் பேய்முலைநஞ் சுண்டான்றன்னை
    உள்ளுவா ருள்ளத்தே யுறைகின்றானை,
காணாது திரிதருவேன் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
7
1095
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப்
    பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்புனல்சூழ் மெய்யமென்னும்
    தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
எண்ணானை யெண்ணிறந்த புகழினானை
    இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
8
1096
தொண்டாயார் தாம்பரவு மடியினானைப்
    படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை
    விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து
    வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும்
கண்டானை, தொண்டனேன் கண்டுகொண்டேன்
    கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
9
1097
படநாகத் தணைக்கிடந்தன் றவுணர்கோனைப்
    படவெகுண்டு மருதிடைப்போய்ப் பழனவேலி,
தடமார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துத்
    தாமரைக்கண் துயிலமர்ந்த தலைவன்தன்னை,
கடமாரும் கருங்களிறு வல்லான்வெல்போர்க்
    கலிகன்றி யொலிசெய்த இன்பப்பாடல்,
திடமாக விவையந்து மைந்துவல்லார்
    தீவினையை முதலரிய வல்லார்தாமே.#
10

மேலே செல்க

6. நண்ணாத
திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) - 2
தரவு கொச்சகக் கலிப்பா
1098
நண்ணாத வாளவுண
    ரிடைப்புக்கு, வானவரைப்
பெண்ணாகி யமுதூட்டும்
    பெருமானார், மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத்
    தலசயனத் துறைவாரை,
எண்ணாதே யிருப்பாரை
    யிறைப்பொழுது மெண்ணோமே.#
1
1099
பார்வண்ண மடமங்கை
    பனிநன்மா மலர்க்கிழத்தி,
நீர்வண்ணன் மார்வத்தி
    லிருக்கையைமுன் நினைந்தவனூர்,
கார்வண்ண முதுமுந்நீர்க்
    கடல்மல்லைத் தலசயனம்,
ஆரெண்ணும் நெஞ்சுடையா
    ரவரெம்மை யாள்வாரே.
2
1100
ஏனத்தி னுருவாகி
    நிலமங்கை யெழில்கொண்டான்,
வானத்தி லவர்முறையால்
    மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள,
கானத்தின் கடல்மல்லைத்
    தலசயனத் துறைகின்ற,
ஞானத்தி னொளியுருவை
    நினைவாரென் நாயகரே.
3
1101
விண்டாரை வென்றாவி
    விலங்குண்ண, மெல்லியலார்
கொண்டாடும் மல்லகலம்
    அழலேற வெஞ்சமத்துக்
கண்டாரை, கடல்மல்லைத்
    தலசயனத் துறைவாரை,
கொண்டாடும் நெஞ்சுடையா
    ரவரெங்கள் குலதெய்வமே.
4
1102
பிச்சச் சிறுபீலிச்
    சமண்குண்டர் முதலாயோர்,
விச்சைக் கிறையென்னு
    மவ்விறையைப் பணியாதே,
கச்சிக் கிடந்தவனூர்
    கடல்மல்லைத் தலசயனம்,
நச்சித் தொழுவாரை
    நச்சென்றன் நன்னெஞ்சே*
5
1103
புலன்கொள்நிதிக் குவையோடு
    புழைக்கைமா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
    சுமந்தெங்கும் நான்றொசிந்து,
கலங்களியங் கும்மலைக்
    கடல்மல்லைத் தலசயனம்,
வலங்கொள்மனத் தாரவரை
    வலங்கொள்ளென் மடநெஞ்சே*
6
1104
பஞ்சிச் சிறுகூழை
    யுருவாகி, மருவாத
வஞ்சப்பெண் நஞ்சுண்ட
    அண்ணல்முன் நண்ணாத,
கஞ்சைக் கடந்தவனூர்
    கடல்மல்லைத் தலசயனம்,
நெஞ்சில் தொழுவாரைத்
    தொழுவாயென் தூய்நெஞ்சே*
7
1105
செழுநீர் மலர்க்கமலம்
    திரையுந்த வன்பகட்டால்,
உழுநீர் வயலுழவ
    ருழப்பின்முன் பிழைத்தெழுந்த,
கழுநீர் கடிகமழும்
    கடல்மல்லைத் தலசயனம்,
தொழுநீர் மனத்தவரைத்
    தொழுவாயென் தூய்நெஞ்சே.
8
1106
பிணங்களிடு காடதனுள்
    நடமாடு பிஞ்ஞகனோடு,
இணங்குதிருச் சக்கரத்தெம்
    பெருமானார்க் கிடம்,விசும்பில்
கணங்களியங் கும்மல்லைக்
    கடல்மல்லைத் தலசயனம்,
வணங்குமனத் தாரவரை
    வணங்கென்றன் மடநெஞ்சே*
9
1107
கடிகமழு நெடுமறுகில்
    கடல்மல்லைத் தலசயனத்து,
அடிகளடி யேநினையு
    மடியவர்கள் தம்மடியான்,
வடிகொள்நெடு வேல்வலவன்
    கலிகன்றி யொலிவல்லார்,
முடிகொள்நெடு மன்னவர்தம்
    முதல்வர்முத லாவாரே.#
10

7. திவளும்
திருவிடவெந்தை (திருவிடந்தை)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1108
திவளும்வெண் மதிபோல் திருமுகத் தரிவை
    செழுங்கட லமுதினிற் பிறந்த
அவளும்,நின் னாகத் திருப்பது மறிந்தும்
    ஆகிலு மாசைவி டாளால்,
குவளையங் கண்ணி கொல்லியம் பாவை
    சொல்லுநின் தாள்நயந் தீருந்த
இவளை,உன் மனத்தா லென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*#
1
1109
துளம்படு முறுவல் தோழியர்க் கருளாள்
    துணைமுலை சாந்துகொண் டணியாள்,
குளம்படு குவளைக் கண்ணிணை யெழுதாள்
    கோலநன் மலர்குழற் கணியாள்,
வளம்படு முந்நீர் வையமுன் னளந்த,
    மாலென்னும் மாலின் மொழியாள்,
இளம்படி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
2
1110
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்
    தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும்
    பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம்
    வளைகளும் இறைநில்லா, என்றன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
3
1111
'ஊழியில் பெரிதால் நாழிகை*' என்னும்
    'ஒண்சுடர் துயின்றதால்*' என்னும்,
'ஆழியும் புலம்பும்* அன்றிலு முறங்கா
    தென்றலும் தீயினிற் கொடிதாம்,
தோழியோ*' என்னும் 'துணைமுலை யரக்கும்
    சொல்லுமி னென்செய்கேன்?' என்னும்,
ஏழையென பொன்னுக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
4
1112
ஓதிலும் உன்பே ரன்றிமற் றொதாள்
    உருகும்நின் திருவுரு நினைந்து,
காதன்மை பெரிது கையற வுடையள்
    கயல்யநெடுங் கண்துயில் மறந்தாள்,
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது
    தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்,
ஏதலர் முன்னா என்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
5
1113
தன்குடிக் கேதும் தக்கவா நினையாள்
    தடங்கடல் நுடங்கெயி லிலங்கை,
வன்குடி மடங்க வாளமர் தொலைத்த
    வார்த்தைகேட் டின்புறும் மயங்கும்,
மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
    மெல்முலை பொன்பயந் திருந்த,
என்கொடி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
6
1114
உளங்கனிந் திருக்கும் உன்னையே பிதற்றும்
    உனக்கன்றி யெனக்கன்பொன் றிலளால்,
'வளங்கனி பொழில்சூழ் மாலிருஞ் சோலை
    மாயனே*' என்றுவாய் வெருவும்,
களங்கனி முறுவல் காரிகை பெரிது
    கவலையோ டவலம்சேர்ந் திருந்த,
இளங்கனி யிவளுக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
7
1115
'அலங்கெழு தடக்கை யாயன்வா யாம்பற்
    கழியுமா லென்னுள்ளம்*' என்னும்,
புலங்கெழு பொருநீர்ப் புட்குழி பாடும்
    'போதுமோ நீர்மலைக் கெ'ன்னும்,
குலங்கெழு கொல்லி கோமள வல்லிக்
    கொடியிடை நெடுமழைக் கண்ணி,
இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
8
1116
பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்
    பொருகயல் கண்துயில் மறந்தாள்,
அன்பினா லுன்மே லாதரம் பெரிதுஎன்
    அணங்கினுக் குற்றநோ யறியேன்,
மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி
    வீங்கிய வனமுலை யாளுக்கு,
என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய்
    இடவெந்தை யெந்தை பிரானே*
9
1117
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
    ஆயஎம் மாயனே* அருளாய்,
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
    இடவெந்தை யெந்தை பிரானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
    மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
    பழவினை பற்றறுப் பாரே.#
10

8. திரிபுரம்
திருஅட்டபுயகரம் - அஷ்டபுஜ பெருமாள் கோயில் (காஞ்சிபுரம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1118
திரிபுர மூன்றெரித் தானும்மற்றை
    மலர்மிசை மேலய னும்வியப்ப,
முரிதிரை மாகடல் போல்முழங்கி
    மூவுல கும்முறை யால்வணங்க,
எரியன கேசர வாளெயிற்றோ
    டிரணிய னாக மிரண்டுகூறா,
அரியுரு வாமிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.#
1
1119
வெந்திறல் வீரரில் வீரரொப்பார்
    வேத முரைத்திமை யோர்வணங்கும்,
செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்
    தேவ ரிவர்கொல் தெரிக்கமாட்டேன்,
வந்து குறளுரு வாய்நிமிர்ந்து
    மாவலி வேள்வியில் மண்ணளந்த,
அந்தணர் போன்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
2
1120
செம்பொ னிலங்கு வலங்கைவாளி
    திண்சிலை தண்டொடு சங்கமொள்வாள்,
உம்ப ரிருசுட ராழியோடு
    கேடக மொண்மலர் பற்றியெற்றே,
வெம்பு சினத்தடல் வேழம்வீழ
    வெண்மருப் பொன்று பறித்து,இருண்ட
அம்புதம் போன்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
3
1121
மஞ்சுயர் மாமணிக் குன்றமேந்தி
    மாமழை காத்தொரு மாயஆனை
அஞ்ச, அதன்மருப் பொன்றுவாங்கும்
    ஆயர்கொல் மாய மறியமாட்டேன்,
வெஞ்சுட ராழியும் சங்குமேந்தி
    வேதமு னோதுவர் நீதிவானத்து,
அஞ்சுடர் போன்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
4
1122
கலைகளும் வேதமும் நீதிநூலும்
    கற்பமும் சொற்பொருள் தானும்,மற்றை
நிலைகளும் வானவர்க் கும்பிறர்க்கும்
    நீர்மையி னாலருள் செய்து,நீண்ட
மலைகளும் மாமணி யும்மலர்மேல்
    மங்கையும் சங்கமும் தங்குகின்ற,
அலைகடல் போன்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
5
1123
எங்ஙனும் நாமிவர் வண்ணமெண்ணில்
    ஏது மறிகிலம், ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவுமெல்லாம்
    தம்மன வாகப் புகுந்து,தாமும்
பொங்கு கருங்கடல் பூவைகாயாப்
    போதவிழ் நீலம் புனைந்தமேகம்,
அங்ஙனம் போன்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
6
1124
முழுசிவண் டாடிய தண்டுழாயின்
    மொய்ம்மலர்க் கண்ணியும், மேனியஞ்சாந்-
திழிசிய கோல மிருந்தவாறும்
    எங்ஙனஞ் சொல்லுகேன்* ஓவிநல்லார்,
எழுதிய தாமரை யன்னகண்ணும்
    ஏந்தெழி லாகமும் தோளும்வாயும்,
அழகிய தாமிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
7
1125
மேவியெப் பாலும்விண் ணோர்வணங்க
    வேத முரைப்பர்முந் நீர்மடந்தை
தேவி,அப் பாலதிர் சங்கமிப்பால்
    சக்கரம் மற்றிவர் வண்ணமெண்ணில்,
காவியொப் பார்கட லேயுமொப்பார்
    கண்ணும் வடிவும் நெடியராய்,என்
ஆவியொப் பாரிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
8
1126
தஞ்ச மிவர்க்கென் வளையும்நில்லா
    நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு,
வஞ்சி மருங்குல் நெருங்கநோக்கி
    வாய்திறந் தொன்று பணித்ததுண்டு,
நஞ்ச முடைத்திவர் நோக்கும்நோக்கம்
    நானிவர் தம்மை யறியமாட்டேன்,
அஞ்சுவன் மற்றிவ ரார்கொலென்ன
    அட்ட புயகரத் தேனென்றாரே.
9
1127
மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்
    நீள்முடி மாலை வயிரமேகன்,
தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி
    அட்ட புயகரத் தாதிதன்னை,
கன்னிநன் மாமதிள் மங்கைவேந்தன்
    காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
    யேத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே.#
10

9. சொல்லு
திருப்பரமேச்சுரவிண்ணகரம் - வைகுண்டபெருமாள் கோயில் (காஞ்சிபுரம்)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1128
சொல்லுவன் சொற்பொருள் தானவை யாய்ச்சுவை
    ஊறொலி நாற்றமும் தோற்றமுமாய்,
நல்லரன் நான்முகன் நாரண னுக்கிடந்
    தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
பல்லவன் வில்லவ னென்றுல கில்பல
    ராய்ப்பல வேந்தர் வணங்குகழல்
பல்லவன், மல்லையர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.#
1
1129
கார்மன்னு நீள்விசும் பும்கட லும்சுட
    ரும்நில னும்மலை யும்,தன்னுந்தித்
தார்மன்னு தாமரைக் கண்ணனி டம்தட
    மாமதிள் சூழ்ந்தழ காயகச்சி,
தேர்மன்னு தென்னவ னைமுனை யில்செரு
    வில்திறல் வாட்டிய திண்சிலையோன்,
பார்மன்னு பல்லவர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
2
1130
உரந்தரு மெல்லணைப் பள்ளிகொண் டானொரு
    கால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள்,
வரந்தரும் மாமணி வண்ணனி டம்மணி
    மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
நிரந்தவர் மண்ணையில் புண்ணுகர் வேல்நெடு
    வாயி லுகச்செரு வில்முனநாள்,
பரந்தவன் பல்லவர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
3
1131
அண்டமு மெண்டிசை யும்நில னுமலை
    நீரொடு வானெரி கால்முதலா
உண்டவன், எந்தைபி ரானதி டமொளி
    மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி
விண்டவ ரிண்டைக்கு ழாமுட னேவிரைந்
    தாரிரி யச்செரு வில்முனிந்து,
பண்டொரு கால்வளைத் தான்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
4
1132
தூம்புடைத் திண்கைவன் தாள்களிற் றின்துயர்
    தீர்த்தர வம்வெரு வ,முனநாள்
பூம்புனல் பொய்கைபுக் கானவ னுக்கிடந்
    தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
தேம்பொழில் குன்றெயில் தென்னவ னைத்திசைப்
    பச்செரு மேல்வியந் தன்றுசென்ற,
பாம்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
5
1133
திண்படைக் கோளரி யினுரு வாய்த்திற
    லோனக லம்செரு வில்முனநாள்,
புண்படப் போழ்ந்த பிரானதி டம்பொரு
    மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
வெண்குடை நீழல்செங் கோல்நடப் பவிடை
    வெல்கொடி வேல்படை முன்னுயர்த்த,
பண்புடைப் பல்லவர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
6
1134
இலகிய நீண்முடி மாவலி தன்பெரு
    வேள்வியில் மாணுரு வாய்முனநாள்,
சலமொடு மாநிலங் கொண்டவ னுக்கிடந்
    தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
உலகுடை மன்னவன் தென்னவ னைக்கன்னி
    மாமதிள் சூழ்கரு வூர்வெருவ,
பலபடை சாயவென் றான்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
7
1135
குடைத்திறல் மன்ன னாயொரு கால்குரங்
    கைப்படை யா,மலை யால்கடலை
அடைத்தவ னெந்தைபி ரானதி டம்மணி
    மாடங்கள் சூழ்ந்தழ காயகச்சி,
விடைத்திறல் வில்லவன் நென்மெலி யில்வெரு
    வச்செரு வேல்வலங் கைப்பிடித்த,
படைத்திறல் பல்லவர் கோன்பணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
8
1136
பிறையுடை வாணுதல் பின்னை திறத்து
    முன்னொரு கால்செரு வில்லுருமின்,
மறையுடை மால்விடை யேழடர்த் தாற்கிடந்
    தான்தடஞ் சூழ்ந்தழ காயகச்சி,
கறையுடை வாள்மற மன்னர்கெ டக்கடல்
    போல முழங்கும் குரல்கடுவாய்,
பறையுடைப் பல்லவர் கோன்கணிந் தபர
    மேச்சுர விண்ணக ரமதுவே.
9
1137
பார்மன்னு தொல்புகழ்ப் பல்லவர் கோன்பணிந்
    தபர மேச்சுர விண்ணகர்மேல்,
கார்மன்னு நீள்வயல் மங்கையர் தந்தலை
    வன்கலி கன்றிகுன் றாதுரைத்த,
சீர்மன்னு செந்தமிழ் மாலைவல் லார்திரு
    மாமகள் தன்னரு ளால்,உலகில்
தேர்மன்ன ராயொலி மாகடல் சூழ்செழு
    நீருல காண்டு திகழ்வர்களே.#
10

10. மஞ்சாடு
திருக்கோவிலூர்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1138
மஞ்சாடு வரையேழும் கடல்க ளேழும்
    வானகமும் மண்ணகமும் மற்று மெல்லாம்,
எஞ்சாமல் வயிற்றடக்கி யாலின் மேலோர்
    இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் றன்னை,
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
    தூயநான் மறையாளர் சோமுச் செய்ய,
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.#
1
1139
கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்
    தீபங்கொண் டமரர்தொழப் பணங்கொள் பாம்பில்,
சந்தணிமென் முலைமலராள் தரணி மங்கை
    தாமிருவ ரடிவருடும் தன்மை யானை,
வந்தனைசெய்து இசையேழா றங்கம் ஐந்து
    வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்,
சிந்தனைசெய் திருபொழுது மொன்றும் செல்வத்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
2
1140
கொழுந்தலரு மலர்ச்சோலைக் குழாங்கொள் பொய்கைக்
    கோள்முதலை வாளெயிற்றுக் கொண்டற் கெள்கி,
அழுந்தியமா களிற்றினுக்கன் றாழி யேந்தி
    அந்தரமே வரத்தோன்றி யருள்செய் தானை,
எழுந்தமலர்க் கருநீல மிருந்தில் காட்ட
    இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட,
செழுந்தடநீர்க் கமலம்தீ விகைபோல் காட்டும்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
3
1141
தாங்கரும்போர் மாலிபடப் பறவை யூர்ந்து
    தராதலத்தோர் குறைமுடித்த தன்மை யானை,
ஆங்கரும்பிக் கண்ணீர்சோர்ந் தன்பு கூரும்
    அடியவர்கட் காரமுத மானான் றன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
    குழாவரிவண் டிசைபாடும் பாடல் கேட்டு,
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
4
1142
கறைவளர்வேல் கரன்முதலாக் கவந்தன் வாலி
    கணையொன்றி னால்மடிய இலங்கைதன்னுள்,
பிறையெயிற்று வாளரக்கர் சேனை யெல்லாம்
    பெருந்தகையோ டுடன்துணித்த பெம்மான் றன்னை,
மறைவளரப் புகழ்வளர மாடந் தோறும்
    மண்டபமொண் தொளியனைத்தும் வார மோத,
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
5
1143
உறியார்ந்த நறுவெண்ணெ யொளியால் சென்றங்
    குண்டானைக் கண்டாய்ச்சி யுரலோ டார்க்க,
தறியார்ந்த கங்களிறே போல நின்று
    தடங்கண்கள் பனிமல்கும் தன்மை யானை,
வெறியார்ந்த மலர்மகள்நா மங்கை யோடு,
    வியன்கலையெண் தோளினாள் விளங்கு, செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
6
1144
இருங்கைம்மா கரிமுனிந்து பரியைக் கீறி
    இனவிடைக ளேழடர்த்து மருதம் சாய்த்து,
வரும்சகட மிறவுதைத்து மல்லை யட்டு
    வஞ்சஞ்செய் கஞ்சனுக்கு நஞ்சா னானை,
கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று
    காயெல்லாம் மரகதமாய்ப் பவளங் காட்ட,
செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
7
1145
பாரேறு பெரும்பாரந் தீரப் பண்டு
    பாரதத்துத் தூதியங்கி, பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியா யெதிர்ந்தார் சேனை
    செருக்களத்துத் திறலழியச் செற்றான் றன்னை,
போரேறெhன் றுடையானு மளகைக் கோனும்
    புரந்தரனும் நான்முகனும் பொருந்து மூர்போல்
சீரேறு மறையாளர் நிறைந்த செல்வத்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
8
1146
தூவடிவின் பார்மகள்பூ மங்கை யோடு
    சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற,
காவடிவின் கற்பகமே போல நின்று
    கலந்தவர்கட் கருள்புரியுங் கருத்தி னானை,
சேவடிகை திருவாய்கண் சிவந்த வாடை
    செம்பொன்செய் திருவுருவ மானான் றன்னை,
தீவடிவின் சிவனயனே போல்வார் மன்னு
    திருக்கோவ லூரதனுள் கண்டேன் நானே.
9
1147
'வாணரங்கொ ளிடர்கடிந்த மாலை நீல
    மரகதத்தை மழைமுகிலே போல்வான் றன்னை,
சீரணங்கு மறையாளர் நிறைந்த செல்வத்
    திருக்கோவ லூரதனுள் கண்டேன்,' என்று
வாரணங்கு முலைமடவார் மங்கை வேந்தன்
    வாட்கலிய னொலியைந்து மைந்தும் வல்லார்,
காரணங்க ளாலுலகங் கலந்தங் கேத்தக்
    கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

மூன்றாம் பத்து
1. இருந்தண்
திருவயிந்திரபுரம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1148
இருந்தண் மாநில மேனம தாள்வளை
    மருப்பினி லகத்தொடுக்கி,
கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம்
    கமலநன் மலர்த்தேறல்
அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம்
    பொதுளியம் பொழிலூடே,
செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு
    திருவயிந் திரபுரமே.#
1
1149
மின்னு மாழியங் கையவன் செய்யவள்
    உறைதரு திருமார்பன்,
பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய
    பரனிடம் வரைச்சாரல்,
பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப்
    பிணியவிழ் கமலத்து,
தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு
    திருவயிந் திரபுரமே.
2
1150
வைய மேழுமுண் டாலிலை வைசிய
    மாயவன், அடியவர்க்கு
மெய்ய னாகிய தெய்வநா யகனிடம்
    மெய்தகு வரைச்சாரல்,
மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய
    முல்லையங் கொடியாட,
செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு
    திருவயிந் திரபுரமே.
3
1151
மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன்
    மார்பக மிருபிளவா,
கூறு கொண்டவன் குலமகற் கின்னருள்
    கொடுத்தவ னிடம்,மடிpடைந்து
சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை
    விசும்புற மணிநீழல்,
சேறு கொண்டதண் பழனம் தெழில்திகழ்
    திருவயிந் திரபுரமே.
4
1152
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
    றகலிட மளந்துஆயர்,
பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம்
    பொன்மலர் திகழ,வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு
    குரக்கினம் இரைத்தோடி,
தேன்க லந்ததண் பலங்கனி நுகர்தரு
    திருவயிந் திரபுரமே.
5
1153
கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின்
    திறத்திளங் கொடியோடும்,
கானு லாவிய கருமுகில் திருநிறத்
    தவனிடம் கவினாரும்,
வானு லாவிய மதிதவழ் மால்வரை
    மாமதிள் புடைசூழ,
தேனு லாவிய செழும்பொழில் தழுவிய
    திருவயிந் திரபுரமே.
6
1154
மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம்
    விலங்கலின் மிசையிலங்கை
மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன
    திடம்மணி வரைநீழல்,
அன்ன மாமல ரரவிந்தத் தமளியில்
    பெடையோடு மினிதமர,
செந்நெ லார்கவ ரிக்குலை வீசுதண்
    திருவயிந் திரபுரமே.
7
1155
விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம்
    வில்லிறுத்து அடல்மழைக்கு,
நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன்
    நிலவிய இடம்தடமார்,
வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு
    மலைவள ரகிலுந்தி,
திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு
    திருவயிந் திரபுரமே.
8
1156
வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில்
    விசயனுக் காய்,மணித்தேர்க்
கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம்
    குலவுதண் வரைச்சாரல்,
கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம்
    பாளைகள் கமழ்சாரல்,
சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு
    திருவயிந் திரபுரமே.
9
1157
மூவ ராகிய வொருவனை மூவுல
    குண்டுமிழ்ந் தளந்தானை,
தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண்
    திருவயிந் திரபுரத்து,
மேவு சோதியை வேல்வல கன்கலி
    கன்றி விரித்துரைத்த,
பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப்
    பாவங்கள் பயிலாவே.#
10

2. ஊன் வாட
திருச்சித்திரகூடம் (சிதம்பரம்) - 1
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1158
ஊன்வாட வுண்ணா (*)துயிர்காவ லிட்டே
    உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து,
தாம்வாட வாடத் தவம்செய்ய வேண்டா
    தமதா இமையோ ருலகாள கிற்பீர்,
கானாட மஞ்ஞைக் கணமாட மாடே
    கயலாடு கானீர்ப் பழனம் புடைபோய்,
தேனாட மாடக் கொடியாடு தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.#

(*) துயிர்காவ லிட்டு என்றும் பாடம்.
1
1159
காயோடு நீடு கனியுண்டு வீசு
    கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து
தீயோடு நின்று தவஞ்செய்ய வேண்டா
    திருமார்பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்,
வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்
    மறையாளர் நாளும் முறையால் வளர்த்த,
தீயோங்க வோங்கப் புகழோங்கு தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
2
1160
வெம்பும் சினத்துப் புனக்கேழ லொன்றாய்
    விரிநீர் முதுவெள்ள முள்புக் கழுந்த,
வம்புண் பொழில்சூ ழுலகன் றெடுத்தான்
    அடிப்போ தணைவான் விருப்போ டிப்பீர்,
பைம்பொன்னு முத்தும் மணியும் கொணர்ந்து
    படைமன்ன வன்பல் லவர்கோன் பணிந்த,
செம்பொன் மணிமாடங் கள்சூழ்ந்த தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
3
1161
அருமா நிலமன் றளப்பான் குறளாய்
    அவுணன் பெருவேள் வியில்சென் றிரந்த,
பெருமான் திருநா மம்பிதற் றிநுந்தம்
    பிறவித் துயர்நீங்கு துமென்ன கிற்பீர்,
கருமா கடலுள் கிடந்தா னுவந்து
    கலைநா வரவி னணைப்பள்ளி யின்மேல்,
திருமால் திருமங் கையொடாடு தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
4
1162
கோமங்க வங்கக் கடல்வைய முய்யக்
    குலமன்ன ரங்கம் மழுவில் துணிய,
தாமங் கமருள் படைதொட்ட வென்றித்
    தவமா முனியைத் தமக்காக்க கிற்பீர்,
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்
    புகழ்மங்கை யெங்கும் திகழ, புகழ்சேர்
சேமங்கொள் பைம்பூம் பொழில்சூழ்ந்த தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
5
1163
நெய்வா யழலம் புதுரந்து முந்நீர்
    துணியப் பணிகொண் டணியார்ந்து, இலங்கு
மையார் மணிவண் ணனையெண்ணி நுந்தம்
    மனத்தே யிருத்தும் படிவாழ வல்லீர்,
அவ்வா யிளமங் கையர்பேச வுந்தான்
    அருமா மறையந் தணர்சிந் தைபுக,
செவ்வாய்க் கிளிநான் மறைபாடு தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
6
1164
மௌவல் குழலாய்ச்சி மென்தோள் நயந்து
    மகரம் சுழலச் சுழல்நீர் பயந்த,
தெய்வத் திருமா மலர்மங்கை தங்கு
    திருமார் பனைச்சிந்தை யுள்வைத்து மென்பீர்
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்
    கமழ்சந்து முந்தி நிவாவ லங்கொள்,
தெய்வப் புனல்சூழ்ந் தழகாய தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
7
1165
மாவாயி னங்கம் மதியாது கீறி
    மழைமா முதுகுன் றெடுத்து,ஆயர் தங்கள்
கோவாய் நிரைமேய்த் துலகுண்ட மாயன்
    குரைமா கழல்கூ டும்குறிப் புடையீர்,
மூவா யிரநான் மறையாளர் நாளும்
    முறையால் வணங்க அணங்காய சோதி,
தேவாதி தேவன் திகழ்கின்ற தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
8
1166
செருநீல வேற்கண் மடவார் திறத்துச்
    சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்,
அருநீல பாவ மகலப் புகழ்சேர்
    அமரர்க்கு மெய்தாத அண்டத்தி ருப்பீர்,
பெருநீர் நிவாவுந்தி முத்தங்கொ ணர்ந்தெங்கும்
    வித்தும் வயலுள் கயல்பாய்ந் துகள,
திருநீல நின்று திகழ்கின்ற தில்லைத்
    திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.
9
1167
சீரார் பொழில்சூழ்ந் தழகாய தில்லைத்
    திருச்சித்ர கூடத் துறைசெங்கண் மாலுக்கு,
ஆராத வுள்ளத் தவர்கேட் டுவப்ப
    அலைநீ ருலகுக் கருளே புரியும்,
காரார் புயற்கைக் கலிகன்றி குன்றா
    ஒலிமாலை யோரொன்ப தோடொன்றும் வல்லார்,
பாரா ருலக மளந்தா னடிக்கீழ்ப்
    பலகாலம் நிற்கும் படிவாழ்வர் தாமே.#
10

3. வாட மருதிடை
திருச்சித்திரகூடம் (சிதம்பரம்) - 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1168
வாட மருதிடை போகி
    மல்லரைக் கொன்றொக்க லித்திட்டு,
ஆடல்நல் மாவுடைத் தாயர்
    ஆநிரைக் கன்றிடிடர் தீர்ப்பான்,
கூடிய மாமழை காத்த
    கூத்த னெனவரு கின்றான்,
சேடுயர் பூம்பொழில் தில்லைச்
    சித்திர கூடத்துள் ளானே.#
1
1169
பேய்மகள் கொங்கைநஞ் சுண்ட
    பிள்ளை பாpசிது வென்றால்,
மாநில மாமகள் மாதர்
    கேள்வ னிவனென்றும், வண்டுண்
பூமகள் நாயக னென்றுமட்
    புலங்கெழு கோவியர் பாடி,
தேமலர் தூவ வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
2
1170
பண்டிவன் வெண்ணெயுண் டானென்
    றாய்ச்சியர் கூடி யிழிப்ப
எண்டிசை யோரும்வ ணங்க
    இணைமரு தூடு நடந்திட்டு,
அண்டரும் வானத் தவரு
    மாயிர நாமங்க ளோடு,
திண்டிறல் பாட வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
3
1171
வளைக்கை நெடுங்கண் மடவா
    ராய்ச்சிய ரஞ்சி யழைப்ப,
தளைத்தவிழ் தாமரைப் பொய்கைத்
    தண்டடம் புக்கண்டர் காண,
முளைத்த எயிற்றழல் நாகத்
    துச்சியில் நின்றது வாட,
திளைத்தமர் செய்து வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
4
1172
பருவக் கருமுகி லொத்து
    முத்துடை மாகட லொத்து,
அருவித் திரள்திகழ கின்ற
    வாயிரம் பொன்மலை யொத்து,
உருவக் கருங்குழ லாய்ச்சி
    திறத்தின மால்விடை செற்று,
தெருவில் திளைத்து வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
5
1173
எய்யச் சிதைந்த திலங்கை
    மலங்க வருமழை காப்பான்,
உய்யப் பருவரை தாங்கி
    யாநிரை காத்தானென் றேத்தி,
வையத் தெவரும் வணங்க
    அணங்கெழு மாமலை போலே,
தெய்வப்புள் ளேறி வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.#
6
1174
ஆவ ரிவைசெய் தறிவார்?
    அஞ்சன மாமலை போலே,
மேவு சினத்தடல் வேழம்
    வீழ முனிந்து,அழ காய
காவி மலர்நெடுங் கண்ணார்
    கைதொழ வீதி வருவான்,
தேவர் வணங்குதண் தில்லைச்
    சித்திர கூடத்துள் ளானே.
7
1175
பொங்கி யமரி லொருகால்
    பொன்பெய ரோனை வெருவ,
அங்கவ னாக மளைந்திட்
    டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற
    நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
8
1176
கருமுகில் போல்வதோர் மேனி
    கையன வாழியும் சங்கும்,
பெருவறில் வானவர் சூழ
    ஏழுல கும்தொழு தேத்த,
ஒருமக ளாயர் மடந்தை
    யொருத்தி நிலமகள், மற்றைத்
திருமக ளோடும் வருவான்
    சித்திர கூடத்துள் ளானே.
9
1177
தேனமர் பூம்பொழில் தில்லைச்
    சித்திர கூட மமர்ந்த,
வானவர் தங்கள் பிரானை
    மங்கையர் கோன்மரு வார்தம்,
ஊனமர் வேல்கலி கன்றி
    யொண்டமி ழொன்பதோ டொன்றும்,
தானிவை கற்றுவல் லார்மேல்
    (*)சாரகில் லாவினை தாமே.

(*) சாரா தீவினை என்றும் பாடம்.
10

4. ஒருகுறளாய்
திருக்காழிச்சீராமவிண்ணகரம் (சீர்காழி)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1178
ஒருகுறளா யிருநிலம்மூ வடிமண் வேண்டி
    உலகனைத்து மீரடியா லொடுக்கி, ஒன்றும்
தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த
    தாடாளன் தாளணைவீர், தக்க கீர்த்தி
அருமறையின் திரள்நான்கும் வேள்வி யைந்தும்
    அங்கங்கள் அவையாறு மிசைக ளேழும்,
தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.#
1
1179
நான்முகனாள் மிகைத்தருக்கை யிருக்கு வாய்மை
    நலமிகுசீ ருரோமசனால் நவிற்றி, நக்கன்
ஊன்முகமார் தலையோட்டூ ணொழித்த வெந்தை
    ஒளிமலர்ச்சே வடியணைவீர், உழுசே யோடச்
சூன்முகமார் வளையளைவா யுகுத்த முத்தைத்
    தொல்குருகு சினையென்னச்(*) சூழ்ந்தி யங்க,
தேன்முகமார் கமலவயல் சேல்பாய் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.

(*) சூழ்ந்தியங்க, எங்கும் என்றும் பாடம்.
2
1180
வையணைந்த நுதிக்கோட்டு வராக மொன்றாய்
    மண்ணெல்லா மிடந்தெடுத்து மதங்கள் செய்து,
நெய்யணைந்த திகிரியினால் வாணன் திண்டோள்
    நேர்ந்தவன்தா ளணைகிற்பீர், நெய்த லோடு
மையணைந்த குவளைகள்தங் கண்க ளென்றும்
    மலர்க்குமுதம் வாயென்றும் கடைசி மார்கள்,
செய்யணைந்து களைகளையா தேறும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
3
1181
பஞ்சியல்மெல் லடிப்பின்னை திறத்து முன்னாள்
    பாய்விடைக ளேழடர்த்தும் பொன்னன் பைம்பூண்
நெஞ்சிடந்து குருதியுக வுகிர்வே லாண்ட
    நின்மலன்தா ளணைகிற்பீர், நீல மாலைத்
தஞ்சுடைய விருள்தழைப்பத் தரள மாங்கே
    தண்மதியின் நிலாக்காட்டப் பவளந் தன்னால்,
(*)செஞ்சுடர வெயில்விரிக்கு மழகார் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.

(*) செஞ்சுடர் என்றும் பாடம்.
4
1182
தெவ்வாய மறமன்னர் குருதி கொண்டு
    திருக்குலத்தி லிறந்தோர்க்குத் திருத்தி செய்து,
வெவ்வாய மாகீண்டு வேழ மட்ட
    விண்ணவர்கோன் தாளணைவீர், விகிர்த மாதர்
அவ்வாய வாள்நெடுங்கண் குவளை காட்ட
    அரவிந்தம் முகங்காட்ட அருகே யாம்பல்,
செவ்வாயின் திரள்காட்டும் வயல்சூழ் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
5
1183
பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப்
    படர்வனத்துக் கவந்தனொடும் படையார் திண்கை,
வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த
    விண்ணவர்கோன் தாளணைவீர், வெற்புப் போலும்
துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்
    துடியிடையார் முகக்கமலச் சோதி தன்னால்,
திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
6
1184
பொருவில்வலம் புரியரக்கன் முடிகள் பத்தும்
    புற்றுமறிந் தனபோலப் புவிமேல் சிந்த,
செருவில்வலம் புரிசிலைக்கை மலைத்தோள் வேந்தன்
    திருவடிசேர்ந் துய்கிற்பீர், திரைநீர்த் தெள்கி
மருவிவலம் புரிகைதைக் கழியூ டாடி
    வயல்நண்ணி மழைதருநீர் தவழ்கால் மன்னி
தெருவில்வலம் புரிதரள மீனும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
7
1185
பட்டரவே ரகலல்குல் பவளச் செவ்வாய்
    பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலா மின்சொல்,
மட்டவிழுங் குழலிக்கா வானோர் காவில்
    மரங்கொணர்ந்தா னடியணைவீர், அணில்கள் தாவ
நெட்டிலைய கருங்கமுகின் செங்காய வீழ
    நீள்பலவின் தாழ்சினையில் நெருங்கு, பீனத்
தெட்டபழம் சிதைந்துமதுச் சொரியும் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
8
1186
பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
    பிரமனைத்தன் னுந்தியிலே தோற்று வித்து,
கறைதங்கு வேல்தடங்கண் திருவை மார்பில்
    கலந்தவன்தா ளணைகிற்பீர், கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
    தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம் நண்ணி,
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
    சீராம விண்ணகரே சேர்மி னீரே.
9
1187
செங்கமலத் தயனனைய மறையோர் காழிச்
    சீராம விண்ணகரென் செங்கண் மாலை
அங்கமலத் தடவயல்சூ ழாலி நாடன்
    அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன்
    கொற்றவேல் பரகாலன் கலியன் சொன்ன
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்
    தடங்கடல்சூ ழுலகுக்குத் தலைவர் தாமே.#
10

5. வந்துனது
திருவாலி - 1
ஆசிரியத்துறை
1188
வந்துன தடியேன் மனம்புகுந்தாய்
    புகுந்ததற்பின் வணங்கும்,என்
சிந்தனைக் கினியாய்* திருவே*என் னாருயிரே,
அந்தளி ரணியா ரசோகி ளிளந்தளிர்கள்
    கலந்து, அவை யெங்கும்
செந்தழல் புரையும் திருவாலி யம்மானே*#
1
1189
நீலத் தடவரை மாமணி நிகழக்
    கிடந்ததுபோல், அரவணை
வேலைத் தலைக்கிடந்தா யடியேன் மனத்திருந்தாய்,
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட
    மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப் புகைகமழும் அணியாலி யம்மானே*
2
1190
நென்னல்போய் வருமென்றென் றெண்ணி
    யிராமையென் மனத்தே புகுந்தது,
(*)இம்மைக் கென்றிருந்தே னெறிநீர் வளஞ்செறுவில்,
செந்நெற் கூழை வரம்பொரிஇ யரிவார்
    முகத்தெழு வாளைபோய், கரும்பு
அந்நற் காடணையும் அணியாலி யம்மானே*

(*) இன்மைக்கு என்றும் பாடம்.
3
1191
மின்னில் மன்னு நுடங்கிடை மடவார்தம்
    சிந்தை மறந்து வந்து,நின்
மன்னு சேவடிக்கே மறவாமை வைத்தாயால்,
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்
    வாயகன் பணைகள் கலந்தெங்கும்,
அன்னம் மன்னும் வயலணி ஆலி யம்மானே*
4
1192
நீடு பன்மலர் மாலையிட்டு நின்னிணையடி
    தொழுதேத்தும், என்மனம்
வாட நீநினையேல் மரமெய்த மாமுனிவா,
பாட லின்னொலி சங்கி னோசை பரந்து
    பல்பணை யால்மலிந்து, எங்கும்
ஆட லோசையறா அணியாலி யம்மானே*
5
1193
கந்த மாமல ரெட்டுமிட்டு நின்காமர்
    சேவடி கைதொழுதெழும்,
புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகலொட்டேன்,
சந்தி வேள்வி சடங்கு நான்மறை
    ஓதி யோதுவித் தாதி யாய்வரும்,
அந்த ணாள ரறாவணியாலி யம்மானே*
6
1194
உலவுதிரைக் கடற்பள்ளி கொண்டு வந்துன்
    அடியேன் மனம்புகுந்த,அப்
புலவ* புண்ணிய னே*புகுந் தாயைப் போகலொட்டேன்,
நிலவு மலர்ப்புன்னை நாழல் நீழல்
    தண்டாமரை மலரின் மிசை,மலி
அலவன் கண்படுக்கும் அணியாலி யம்மானே*
7
1195
சங்கு தங்கு தடங்கடல் கடல்மல்லை
    யுள்கிடந்தாய், அருள்புரிந்து
இங்கென்னுள் புகுந்தா யினிப்போயி னாலறையோ,
கொங்கு செண்பக மல்லிகை மலர்புல்கி
    இன்னிள வண்டு போய்,இளந்
தெங்கின் தாதளையும் திருவாலி யம்மானே*
8
1196
ஓதி யாயிர நாமமும் பணிந்தேத்தி
    நின்னடைந் தேற்கு.ஒரு பொருள்
வேதியா* அரையா*உரையாய் ஒருமாற்ற மெந்தாய்,
நீதி யாகிய வேதமா முனியாளர்
    தோற்ற முரைத்து, மற்றவர்க்
காதியாய் இருந்தாய்* அணியாலி யம்மானே*
9
1197
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ்
    தென்னாலி யிருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ
    ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.#
10

மேலே செல்க

6. தூவிரிய
திருவாலி - 2
தரவு கொச்சகக் கலிப்பா
1198
தூவிரிய மலருழக்கித்
    துணையோடும் பிரியாதே,
பூவிரிய மதுநுகரும்
    பொறிவரிய சிறுவண்டே,
தீவிரிய மறைவளர்க்கும்
    புகழாளர் திருவாலி,
ஏவரிவெஞ் சிலையானுக்
    கென்னிலைமை யுரையாயே.#
1
1199
பிணியவிழு நறுநீல
    மலர்கிழியப் பெடையோடும்,
அணிமலர்மேல் மதுநுகரும்
    அறுகால சிறுவண்டே,
மணிகெழுநீர் மருங்கலரும்
    வயலாலி மணவாளன்,
பணியறியேன் நீசென்றென்
    பயலைநோ யுரையாயே.
2
1200
நீர்வானம் மண்ணெரிகா
    லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம்
    பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்பொழில்சூழ்
    திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே*
    குறிப்பறிந்து கூறாயே.
3
1201
தானாக நினையானேல்
    தன்னினைந்து நைவேற்கு,ஓர்
மீனாய கொடிநெடுவேள்
    வலிசெய்ய மெலிவேனோ?
தேன்வாய வரிவண்டே*
    திருவாலி நகராளும்,
ஆனாயற் கென்னுறுநோ
    யறியச்சென் றுரையாயே.
4
1202
வாளாய கண்பனிப்ப
    மென்முலைகள் பொன்னரும்ப,
நாணாளும் நின்னினைந்து
    நைவேற்கு,ஓ* மண்ணளந்த
தாளாளா* தண்குடந்தை
    நகராளா* வரையெடுத்த
தோளாளா, என்றனக்கோர்
    துணையாள னாகாயே*
5
1203
தாராய தண்டுளவ
    வண்ழுத வரைமார்பன்,
போரானைக் கொம்பொசித்த
    புட்பாக னென்னம்மான்,
தேராரும் நெடுவீதித்
    திருவாலி நகராளும்,
காராயன் என்னுடைய
    கனவளையும் கவர்வானோ*
6
1204
கொண்டவத் திரையுலவு
    குரைகடல்மேல் குலவரைபோல்,
பண்டரவி னணைக்கிடந்து
    பாரளந்த பண்பாளா,
வண்டமரும் வளர்பொழில்சூழ்
    வயலாலி மைந்தா,என்
கண்டுயில்நீ கொண்டாய்க்கென்
    கனவளையும் கடவேனோ*
7
1205
குயிலாலும் வளர்பொழில்சூழ்
    தண்குடந்தைக் குடமாடீ,
துயிலாத கண்ணிணையேன்
    நின்னினைந்து துயர்வேனோ,
முயலாலு மிளமதிக்கே
    வளையிழந்தேற்கு, இதுநடுவே
வயலாலி மணவாளா*
    கொள்வாயோ மணிநிறமே*
8
1206
நிலையாளா* நின்வணங்க
    வேண்டாயே யாகிலும்,என்
முலையாள வொருநாளுன்
    கைலத்தால் ஆளாயே,
சிலையாளா* மரமெய்த
    திறலாளா* திருமெய்ய
மலையாளா* நீயாள
    வளையாள மாட்டோமே.
9
1207
மையிலங்கு கருங்குவளை
    மருங்கலரும் வயலாலி,
நெய்யிலங்கு சுடராழிப்
    படையானை நெடுமாலை,
கையிலங்கு வேல்கலியன்
    கண்டுரைத்த தமிழ்மாலை,
ஐயிரண்டு மிவைவல்லார்க்
    கருவினைக ளடையாவே.#
10

7. கள்வன்கொல்
திருவாலி - 3
கலிநிலைத்துறை
1208
கள்வன்கொல் யானறியேன்
    கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன்
    மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப்
    பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி
    யணியாலி புகுவர்கொலோ*#
1
1209
பண்டிவ னாயன்நங்காய்*
    படிறன்புகுந்து, என்மகள்தன்
தொண்டையஞ் செங்கனிவாய்
    நுகர்ந்தானை யுகந்து,அவன்பின்
கெண்டையொண் கண்மிளிரக்
    கிளிபோல்மிழற் றிநடந்து,
வண்டமர் கானல்மல்கும்
    வயலாலி புகுவர்கொலோ*
2
1210
அஞ்சுவன் வெஞ்சொல்நங்காய்*
    அரக்கர்குலப் பாவைதன்னை,
வெஞ்சின மூக்கரிந்த
    விறலோன்திறங் கேட்கில்,மெய்யே
பஞ்சியல் மெல்லடியெம்
    பணைத்தோளி பரக்கழிந்து,
வஞ்சியந் தண்பணைசூழ்
    வயலாலி புகுவர்கொலோ*
3
1211
ஏதுஅவன் தொல்பிறப்பு?
    இளைய வன்வளை யூதி,மன்னர்
தூதுவ னாயவனூர்
    சொலுவீர்கள்* சொலீரறியேன்,
மாதவன் தன்துணையா
    நடந்தாள்தடஞ் சூழ்புறவில்,
போதுவண் டாடுசெம்மல்
    புனலாலி புகுவர்கொலோ*
4
1212
தாயெனை யென்றிரங்காள்
    தடந்தோளி தனக்கமைந்த,
மாயனை மாதவனை
    மதித்தென்னை (*)யகன்றஇவள்,
வேயன தோள்விசிறிப்
    பெடையன்ன மெனநடந்து,
போயின பூங்கொடியாள்
    புனலாலி புகுவர்கொலோ*

(*) அகன்றவன்பின் என்றும் பாடம்.
5
1213
என்துணை யென்றெடுத்தேற்
    கிறையேனு மிரங்கிற்றிலள்,
தன்துணை யாயவென்றன்
    தனிமைக்கு மிரங்கிற்றிலள்,
வன்துணை வானவர்க்காய்
    வரஞ்செற்றரங் கத்துறையும்,
இன்துணை வன்னொடும்போ
    யெழிலாலி புகுவர்கொலோ*#
6
1214
அன்னையு மத்தனுமென்
    றடியோமுக் கிரங்கிற்றிலள்,
பின்னைதன் காதலன்றன்
    பெருந்தோள்நலம் பேணினளால்,
மின்னையும் வஞ்சியையும்
    வென்றிலங்கு மிடையாள்நடந்து,
புன்னையும் அன்னமும்சூழ்
    புனலாலி புகுவர்கொலோ*
7
1215
முற்றிலும் பைங்கிளியும்
    பந்துமூசலும் பேசுகின்ற,
சிற்றில்மென் பூவையும்விட்
    டகன்றசெழுங் கோதைதன்னை,
பெற்றிலேன் முற்றிழையைப்
    பிறப்பிலிபின் னேநடந்து,
மற்றெல்லாம் கைதொழப்போய்
    வயலாலி புகுவர்கொலோ*
8
1216
காவியங் கண்ணியெண்ணில்
    கடிமாமலர்ப் பாவையொப்பாள்,
பாவியேன் பெற்றமையால்
    பணைத்தோளி பரக்கழிந்து,
தூவிசே ரன்னமன்ன
    நடையாள்நெடு மாலொடும்போய்,
வாவியந் தண்பணைசூழ்
    வயலாலி புகுவர்கொலோ*
9
1217
தாய்மனம் நின்றிரங்கத்
    தனியேநெடு மால்துணையா,
போயின பூங்கொடியாள்
    புனலாலி புகுவரென்று,
காய்சின வேல்கலிய
    னொலிசெய்தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார்
    தஞ்சமாவது விண்ணுலகே.#
10

8. நந்தா விளக்கு
திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர் திவ்யதேசம்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1218
'நந்தா விளக்கே* அளத்தற் கரியாய்*
    நரநா ரணனே* கருமா முகில்போல்
எந்தாய், எமக்கே யருளாய்,' எனநின்று
    இமையோர் பரவு மிடம்,எத் திசையும்
கந்தா ரமந்தே னிசைபா டமாடே
    களிவண் டுமிழற் றநிழல் துதைந்து,
மந்தா ரநின்று மணமல் குநாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*#
1
1219
முதலைத் தனிமா முரண்தீர வன்று
    முதுநீர்த் தடத்துச் செங்கண்வேழ் முய்ய,
விதலைத் தலைச்சென் றதற்கே யுதவி
    வினைதீர்த்த வம்மா னிடம்,விண் அணவும்
பதலைக் கபோதத் தொளிமாட நெற்றிப்
    பவளக் கொழுங்கால் பைங்கால் புறவம்,
மதலைத் தலைமென் பெடைகூடு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
2
1220
கொலைப்புண் தலைக்குன்ற மொன்றுய்ய வன்று
    கொடுமா முதலைக் கிடர்செய்து, கொங்கார்
இலைப்புண்ட ரிகத் தவளின்ப மன்போ
    டணைந்திட்ட வம்மா னிடம்,ஆ ளரியால்
அலைப்புண்ட யானை மருப்பு மகிலும்
    அணிமுத்தும் வெண்சா மரையோடு, பொன்னி
மலைப்பண்ட மண்டத் திரையுந்து நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
3
1221
சிறையார் உவணப்புள் ளொன்றேறி யன்று
    திசைநான்கும் நான்கு மிரிய, செருவில்
கரையார் நெடுவே லரக்கர் மடியக்
    கடல்சூ ழிலங்கை கடந்தா னிடந்தான்,
முறையால் வளர்க்கின்ற முத்தீயர் நால்வேதர்
    ஐவேள்வி யாறங்கர் ஏழி னிசையோர்,
மறையோர் வணங்கப் புகழெய்து நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
4
1222
இழையாடு கொங்கைத் தலைநஞ்ச முண்டிட்டு
    இளங்கன்று கொண்டு விளங்கா யெறிந்து,
தழைவாட வன்தாள் குருந்த மொசித்துத்
    தடந்தாம ரைப்பொய்கை புக்கானி டந்தான்,
குழையாட வல்லிக் குலமாட மாடே
    குயில்கூவ நீடு கொடிமாட மல்கு,
மழையாடு சோலை மயிலாலு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
5
1223
பண்ணேர் மொழியாய்ச் சியரஞ்ச வஞ்சப்
    பகுவாய்க் கழுதுக் கிரங்காது, அவள்தன்
உண்ணா முலைமற் றவளாவி யோடும்
    உடனே சுவைத்தா னிடம்,ஓங்கு பைந்தாள்
கண்ணார் கரும்பின் கழைதின்று வைகிக்
    கழுநீரில் மூழ்கிச் செழுநீர்த் தடத்து,
மண்ணேந் திளமேதி கள்வைகு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
6
1224
தளைக்கட் டவிழ்தா மரைவைகு பொய்கைத்
    தடம்புக்கு அடங்கா விடங்கா லரவம்,
இளைக்கத் திளைத்திட் டதனுச்சி தன்மேல்
    அடிவைத்த அம்மா னிடம்,மா மதியம்
திளைக்கும் கொடிமா ளிகைசூழ் தெருவில்
    செழுமுத்து வெண்ணெற் கெனச்சென்று, முன்றில்
வளைக்கை நுளைப்பாவை யர்மாறு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
7
1225
துளையார் கருமென் குழலாய்ச்சி யர்தம்
    துகில்வாரி யும்சிற்றில் சிதைத்தும், முற்றா
இளையார் விளையாட் டொடுகாதல் வெள்ளம்
    விளைவித்த வம்மா னிடம்,வேல் நெடுங்கண்
முளைவா ளெயிற்று மடவார் பயிற்று
    மொழிகேட் டிருந்து முதிராத வின்சொல்,
வளைவாய கிள்ளை மறைபாடு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
8
1226
'விடையோட வென்றாய்ச்சி மென்தோள் நயந்த
    விகிர்தா* விளங்கு சுடராழி யென்னும்,
படையோடு சங்கொன் றுடையாய்*' எனநின்று
    இமையோர் பரவு மிடம்,பைந் தடத்துப்
பெடையோடு செங்கால வன்னம் துகைப்பத்
    தொகைப்புண்ட ரிகத்தி டைச்செங் கழுநீர்,
மடையோட நின்று மதுவிம்மு நாங்கூர்
    மணிமாடக் கோயில் வணங்கென் மனனே*
9
1227
வண்டார் பொழில்சூழ் தழகாய நாங்கூர்
    மணிமாடக் கோயில் நெடுமாலுக்கு, என்றும்
தொண்டாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்
    கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
கண்டார் வணங்கக் களியானை மீதே
    கடல்சூ ழுலகுக் கொருகா வலராய்,
விண்தோய் நெடுவெண் குடைநீழ லின்கீழ்
    விரிநீ ருலகாண் டுவிரும் புவரே.#
10

9. சலங்கொண்ட
திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1228
சலங்கொண்ட இரணியன தகல்மார்வம் கீண்டு
    தடங்கடலைக் கடைந்தமுதங் கொண்டுகந்த காளை,
நலங்கொண்ட கருமுகில்போல் திருமேனி யம்மான்
    நாடோறும் மகிழ்ந்தினிது மருவுயுறை கோயில்,
சலங்கொண்டு மலர்சொரியும் மல்லிகையொண் செருந்தி
    சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*#
1
1229
திண்ணியதோ ரரியுருவாய்த் திசையனைத்தும் நடுங்கத்
    தேவரொடு தானவர்கள் திசைப்ப,இர ணயனை
நண்ணியவன் மார்வகலத் துகிர்மடுத்த நாதன்
    நாடோறும் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்ணில்மிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையும்
    ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
மண்ணில்மிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
2
1230
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
    அமுதுசெய்த திருவயிற்றன் அரன்கொண்டு திரியும்,
முண்டமது நிறைத்தவன்கண் சாபமது நீக்கும்
    முதல்வனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
எண்டிசையும் பெருஞ்செந்நெ லிளந்தெங்கு கதலி
    இலைக்கொடியொண் குலைக்கமுகொ டிகலிவளம் சொரிய
வண்டுபல விசைபாட மயிலாலு நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
3
1231
கலையிலங்கு மகலல்குல் அரக்கர்குலக் கொடியைக்
    காதொடுமூக் குடனரியக் கதறியவ ளோடி,
தலையிலங்கை வைத்துமலை யிலங்கைபுகச் செய்த
    தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம்
    செழுங்கொண்ட லகடிரியச் சொரிந்தசெழு முத்தம்,
மலையிலங்கு மாளிகைமேல் மலிவெய்து நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
4
1232
மின்னனைய நுண்மருங்குல் மெல்லியற்கா யிலங்கை
    வேந்தன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர
தன்நிகரில் சிலைவளைத்தன் றிலங்கைகொடி செய்த
    தடந்தோளன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செந்நெலொடு செங்கமலம் சேல்கயல்கள் வாளை
    செங்கழுநீ ரொடுமிடைந்து கழனிதிகழ்ந் தெங்கும்,
மன்னுபுகழ் வேதியர்கள் மலிவெய்து நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
5
1233
பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப் பெரிய
    பேயினது உருவுகொடு மாளவுயி ருண்டு
திண்மைமிகு மருதொடுநற் சகடமிறுத் தருளும்
    தேவனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
உண்மைமிகு மறையொடுநற் கலைகள்நிறை பொறைகள்
    உதவுகொடை யென்றிவற்றி னொழிவில்லா, பெரிய
வண்மைமிகு மறையவர்கள் மலிவெய்து நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
6
1234
விளங்கனியை யிளங்கன்று கொண்டுதிர வெறிந்து
    வேல்நெடுங்க ணாய்ச்சியர்கள் வைத்ததயிர் வெண்ணெய்
உளங்குளிர அமுதுசெய்திவ வுலகுண்ட காளை
    உகந்தினிது நாடோறும் மருவியுறை கோயில்,
இளம்படிநற் கமுகுகுலைத் தெங்குகொடிச் செந்நெல்
    ஈன்கரும்பு கண்வளரக் கால்தடவும் புனலால்,
வளங்கொண்ட பெருங்செல்வம் வளருமணி நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
7
1235
ஆறாத சினத்தின்மிகு நரகனுர மழித்த
    அடலாழித் தடக்கையன் அலர்மகட்கும் அரற்கும்,
கூறாகக் கொடுத்தருளும் திருவுடம்பன் இமையோர்
    குலமுதல்வன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
மாறாத மலர்க்கமலம் செங்கழுநீர் ததும்பி
    மதுவெள்ள மொழுகவய லுழவர்மடை யடைப்ப,
மாறாத பெருஞ்செல்வம் வளருமணி நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
8
1236
வங்கமலி தடங்கடலுள் வானவர்க ளோடு
    மாமுனிவர் பலர்கூடி மாமலர்கள் தூவி,
ஙஎங்கள்தனி நாயகனே* எமக்கருளாய்ங என்னும்
    ஈ.சனவன் மகிழ்ந்தினிது மருவியுறை கோயில்,
செங்கயலும் வாளைகளும் செந்நெலிடைக் குதிப்பச்
    சேலுகளும் செழும்பணைசூழ் வீதிதோறும் மிடைந்து,
மங்குல்மதி யகடுரிஞ்சு மணிமாட நாங்கூர்
    வைகுந்த விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
9
1237
சங்குமலி தண்டுமுதல் சக்கரமு னேந்தும்
    தாமரைக்கண் நெடியபிரான் றானமரும் கோயில்,
வங்கமலி கடலுலகில் மலிவெய்து நாங்கூர்
    வைகுந்த விண்ணகர்மேல் வண்டறையும் பொழில்சூழ்
மங்கையர்தம் தலைவன்மரு வலர்தமுடல் துணிய
    வாள்வீசும் பரகாலன் கலிகன்றி சொன்ன,
சங்கமலி தமிழ்மாலை பத்திவைவல் லார்கள்
    தரணியொடு விசும்பாளும் தன்மைபெறு வாரே.#
10

10. திருமடந்தை
திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1238
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
    தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள்நடந்து,இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
    அமர்ந்தேத்த இருந்தவிடம், பெரும்புகழ்வே தியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள்மிகு கைதைகள்செங் கழுநீர்
    தாமரைகள் தடங்கடொறு மிடங்கடொறும் திகழ,
அருவிடங்கள் பொழில்தழுவி யெழில்திகழு நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே**#
1
1239
வென்றிமிகு நரகனுர மதுவழிய விசிறும்
    விறலாழித் தடக்கையன் விண்ணவர்கட்கு, அன்று
குன்றுகொடு குரைகடலைக் கடைந்தமுத மளிக்கும்
    குருமணியென் னாரமுதம் குலவியுறை கோயில்,
என்றுமிகு பெருஞ்செல்வத் தெழில்விளங்கு மறையோர்
    ஏழிசையும் கேள்விகளு மியன்றபெருங் குணத்தோர்,
அன்றுலகம் படைத்தவனே யனையவர்கள் நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
2
1240
உம்பருமிவ் வேழுலகு மேழ்கடலு மெல்லாம்
    உண்டபிரான் அண்டர்கள்முன் கண்டுமகிழ் வெய்த,
கும்பமிகு மதயானை மருப்பொசித்துக் கஞ்சன்
    குஞ்சிபிடித் தடித்தபிரான் கோயில்,மருங் கெங்கும்
பைம்பொனொடு வெண்முத்தம் பலபுன்னை காட்டப்
    பலங்கனிகள் தேன்காட்டப் படவரவே ரல்குல்,
அம்பனைய கண்மடவார் மகிழ்வெய்து நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
3
1241
ஓடாத வாளரியி னுருவமது கொண்டுஅன்
    றுலப்பில்மிகு பெருவரத்த இரணியனைப் பற்றி,
வாடாத வள்ளுகிரால் பிளந்தவன்றன் மகனுக்
    கருள்செய்தான் வாழுமிடம் மல்லிகைசெங் கழுநீர்,
சேடேறு மலர்ச்செருந்தி செழுங்கமுகம் பாளை
    செண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி னூடே,
ஆடேறு வயலாலைப் புகைகமழு நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
4
1242
கண்டவர்தம் மனம்மகிழ மாவலிதன் வேள்விக்
    களவில்மிகு சிறுகுறளாய் மூவடியென் றிரந்திட்டு,
அண்டமுமிவ் வலைகடலு மவனிகளு மெல்லாம்
    அளந்தபிரா னமருமிடம் வளங்கொள்பொழி லயலே,
அண்டமுறு முழவொலியும் வண்டினங்க ளொலியும்
    அருமறையி னொலியும்மட வார்சிலம்பி னொலியும்,
அண்டமுறு மலைகடலி னொலிதிகழு நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
5
1243
வாணெடுங்கண் மலர்க்கூந்தல் மைதிலிக்கா இலங்கை
    மன்னன்முடி யொருபதும்தோ ளிருபதும்போ யுதிர,
தாணெடுந்திண் சிலைவளைத்த தயரதன்சேய் என்றன்
    தனிச்சரண்வா னவர்க்கரசு கருதுமிடம், தடவார்
சேணிடங்கொள் மலர்க்கமலம் சேல்கயல்கள் வாளை
    செந்நெலொடு மடுத்தாpய வுதிர்ந்தசெழு முத்தம்,
வாணெடுங்கண் கடைசியர்கள் வாருமணி நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
6
1244
தீமனத்தான் கஞ்சனது வஞ்சனையில் திரியும்
    தேனுகனும் பூதனைத னாருயிரும் செகுத்தான்,
காமனைத்தான் பயந்தகரு மேனியுடை யம்மான்
    கருதுமிடம் பொருதுபுனல் துறைதுறைமுத் துந்தி,
நாமனத்தால் மந்திரங்கள் நால்வேதம் ஐந்து
    வேள்வியோ டாறங்கம் நவின்றுகலை பயின்று,அங்
காமனத்து மறையவர்கள் பயிலுமணி நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
7
1245
கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை
    காமருசீர் முகில்வண்ணன் காலிகள்முன் காப்பான்,
குன்றதனால் மழைதடுத்துக் குடமாடு கூத்தன்
    குலவுமிடம் கொடிமதிள்கள் மாளிகைகோ புரங்கள்,
துன்றுமணி மண்டபங்கள் சாலைகள்தூ மறையோர்
    தொக்கீண்டித் தொழுதியொடு மிகப்பயிலும் சோலை,
அன்றலர்வாய் மதுவுண்டங் களிமுரலு நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
8
1246
வஞ்சனையால் வந்தவள்த னுயிருண்டு வாய்த்த
    தயிருண்டு வெண்ணெயமு துண்டு,வலி மிக்க
கஞ்சனுயி ரதுவுண்டிவ் வுலகுண்ட காளை
    கருதுமிடம் காவிரிசந் தகில்கனக முந்தி,
மஞ்சுலவு பொழிலாடும் வயலூடும் வந்து
    வளங்கொடுப்ப மாமறையோர் மாமலர்கள் தூவி,
அஞ்சலித்தங் கரிசரணென் றிறைஞ்சுமணி நாங்கூர்
    அரிமேய விண்ணகரம் வணங்குமட நெஞ்சே*
9
1247
சென்றுசின விடையேழும் படவடர்த்துப் பின்னை
    செவ்வித்தோள் புணர்ந்துகந் திருமால்தன் கோயில்,
அன்றயனு மரன்சேயு மலையவர்கள் நாங்கூர்
    அரிமேய விண்ணகர மமர்ந்தசெழுங் குன்றை,
கன்றிநெடு வேல்வலவன் மங்கையர்தம் கோமான்
    கலிகன்றி யொலிமாலை யைந்தினொடு மூன்றும்,
ஒன்றினொடு மொன்றுமிவை கற்றுவல்லார் உலகத்
    துத்தமர்கட் குத்தமரா யும்பருமா வர்களே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

நான்காம் பத்து
1. போதலர்ந்த
திருத்தேவனார்தொகை (திருநாங்கூர் திவ்யதேசம்)
கொச்சகக் கலிப்பா
1248
போதலர்ந்த பொழில்சோலைப்
    புறமெங்கும் பொருதிரைகள்,
தாதுதிர வந்தலைக்கும்
    தடமண்ணித் தென்கரைமேல்,
மாதவன்றா னுறையுமிடம்
    வயல்நாங்கை, வரிவண்டு
தேதெனவென் றிசைபாடும்
    திருத்தேவ னார்தொகையே.#
1
1249
யாவருமா யாவையுமா
    யெழில்வேதப் பொருள்களுமாய்
மூவருமாய் முதலாய
    மூர்த்தியமர்ந் துறையுமிடம்,
மாவரும்திண் படைமன்னை
    வென்றிகொள்வார் மன்னுநாங்கை,
தேவரும்சென் றிறைஞ்சுபொழில்
    திருத்தேவ னார்தொகையே.
2
1250
வானாடும் மண்ணாடும்
    மற்றுள்ள பல்லுயிரும்,
தானாய வெம்பெருமான்
    தலைவனமர்ந் துறையுமிடம்,
ஆனாத பெருஞ்செல்வத்
    தருமறையோர் நாங்கைதன்னுள்,
தேனாரு மலர்ப்பொழில்சூழ்
    திருத்தேவ னார்தொகையே.
3
1251
இந்திரனு மிமையவரும்
    முனிவர்களும் எழிலமைந்த,
சந்தமலர்ச் சதுமுகனும்,
    கதிரவனும் சந்திரனும்,
'எந்தையெமக் கருள்,'எனநின்
    றருளுமிடம் எழில்நாங்கை
சுந்தரநல் பொழில்புடைசூழ்
    திருத்தேவ னார்தொகையே.
4
1252
அண்டமுமிவ் வலைகடலு
    மவனிகளும் குலவரையும்,
உண்டபிரா னுறையுமிடம்
    ஒளிமணிசந் தகில்கனகம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும்
    திகழ்மண்ணித் தென்கரைமேல்,
திண்திறலார் பயில்நாங்கைத்
    திருத்தேவ னார்தொகையே.
5
1253
ஞாலமெல்லா மமுதுசெய்து
    நான்மறையும் தொடராத,
பாலகனா யாலிலையில்
    பள்ளிகொள்ளும் பரமனிடம்,
சாலிவளம் பெருகிவரும்
    தடமண்ணித் தென்கரைமேல்,
சேலுகளும் வயல்நாங்கைத்
    திருத்தேவ னார்தொகையே.
6
1254
ஓடாத வாளரியி
    னுருவாகி யிரணியனை,
வாடாத வள்ளுகிரால்
    பிளந்தளைந்த மாலதிடம்,
ஏடேறு பெருஞ்செல்வத்
    தெழில்மறையோர் நாங்கைதன்னுள்,
சேடேறு பொழில்தழுவு
    திருத்தேவ னார்தொகையே.
7
1255
வாராரு மிளங்கொங்கை
    மைதிலியை மணம்புணர்வான்,
காரார்திண் சிலையிறுத்த
    தனிக்காளை கருதுமிடம்,
ஏராரும் பெருஞ்செல்வத்
    தெழில்மறையோர் நாங்கைதன்னுள்
சீராரும் மலர்ப்பொழில்சூழ்
    திருத்தேவ னார்தொகையே.
8
1256
கும்பமிகு மதயானை
    பாகனொடும் குலைந்துவிழ,
கொம்பதனைப் பறித்தெறிந்த
    கூத்தனமர்ந் துறையுமிடம்,
வம்பவிழும் செண்பகத்தின்
    மணங்கமழும் நாங்கைதன்னுள்,
செம்பொன்மதிள் பொழில்புடைசூழ்
    திருத்தேவ னார்தொகையே.
9
1257
காரார்ந்த திருமேனிக்
    கண்ணனமர்ந் துறையுமிடம்,
சீரார்ந்த பொழில்நாங்கைத்
    திருத்தேவ னார்தொகைமேல்,
கூரார்ந்த வேற்கலியன்
    கூறுதமிழ் பத்தும்வல்லார்
ஏரார்ந்த வைகுந்தத்
    திமையவரோ டிருப்பாரே.#
10

2. கம்பமா
திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1258
கம்ப மாகட லடைத்திலங் கைக்குமன்
    கதிர்முடி யவைபத்தும்
அம்பி னாலறுத்து, அரசவன் தம்பிக்கு
    அளித்தவ னுறைகோயில்
செம்ப லாநிரை செண்பகம் மாதவி
    சூதகம் வாழைகள்சூழ்,
வம்பு லாம்கமு கோங்கிய நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.#
1
1259
பல்ல வம்திகழ் பூங்கடம் பேறியக்
    காளியன் பணவரங்கில்,
ஒல்லை வந்துறப் பாய்ந்தரு நடஞ்செய்த
    உம்பர்கோ னுறைகோயில்,
நல்ல வெந்தழல் மூன்றுநால் வேதமை
    வேள்வியோ டாறங்கம்,
வல்ல வந்தணர் மல்கிய நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
2
1260
அண்ட ரானவர் வானவர் கோனுக்கென்
    றமைத்தசோ றதுவெல்லாம்
உண்டு, கோநிரை மேய்த்தவை காத்தவன்
    உகந்தினி துறைகோயில்,
கொண்ட லார்முழ வில்குளிர் வார்பொழில்
    குலமயில் நடமாட,
வண்டு தானிசை பாடிடு நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
3
1261
பருங்கை யானையின் கொம்பினைப் பறித்ததன்
    பாகனைச் சாடிப்புக்கு,
ஒருங்க மல்லரைக் கொன்றுபின் கஞ்சனை
    உதைத்தவ னுறைகோயில்,
கரும்பி னூடுயர் சாலிகள் விளைதரு
    கழனியில் மலிவாவி,
மருங்கெ லாம்பொழி லோங்கிய நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
4
1262
சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன்
    படையொடுங் கிளையோடும்
ஓட, வாணனை யாயிரந் தோள்களும்
    துணித்தவ னுறைகோயில்
ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப்
    பகலவ னொளிமறைக்கும்,
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
5
1263
அங்கை யாலடி மூன்றுநீ ரேற்றயன்
    அலர்கொடு தொழுதேத்த,
கங்கை போதரக் கால்நிமிர்த் தருளிய
    கண்ணன்வந் துறைகோயில்,
கொங்கை கோங்கவை காட்டவாய் குமுதங்கள்
    காட்டமா பதுமங்கள்,
மங்கை மார்முகம் காட்டிடு நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
6
1264
உளைய வொண்டிறல் பொன்பெய ரோன்தன
    துரம்பிளந் துதிரத்தை
அளையும், வெஞ்சினத் தரிபரி கீறிய
    அப்பன்வந் துறைகோயில்,
இளைய மங்கைய ரிணையடிச் சிலம்பினொ
    டெழில்கொள்பந் தடிப்போர்,கை
வளையில் நின்றொலி மல்கிய நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
7
1265
வாளை யார்தடங் கண்ணுமை பங்கன்வன்
    சாபமற் றதுநீங்க
மூளை யார்சிரத் தையமுன் அளித்தவெம்
    முகில்வண்ண னுறைகோயில்
பாளை வான்கமு கூடுயர் தெங்கின்வண்
    பழம்விழ வெருவிப்போய்
வாளை பாய்தடம் சூழ்தரு நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
8
1266
இந்து வார்சடை யீசனைப் பயந்தநான்
    முகனைத்தன் னெழிலாரும்,
உந்தி மாமலர் மீமிசைப் படைத்தவன்
    உகந்தினி துறைகோயில்,
குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்துதன்
    குருளையைத் தழுவிப்போய்,
மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர்
    வண்புரு டோத்தமமே.
9
1267
மண்ணு ளார்புகழ் வேதியர் நாங்கூர்
    வண்புரு டோத்தமத்துள்,
அண்ணல் சேவடிக் கீழடைந் துய்ந்தவன்
    ஆலிமன் அருள்மாரி,
பண்ணு ளார்தரப் பாடிய பாடலிப்
    பத்தும்வல் லார்.உலகில்
எண்ணி லாதபே ரின்பமுற் றிமையவ
    ரோடும் கூடுவரே.#
10

3. பேரணிந்து
திருச்செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர் திவ்யதேசம்)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1268
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும்
    பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு
    மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக்
    கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.#
1
1269
பிறப்பொடு மூப்பொன் றில்லவன் றன்னைப்
    பேதியா வின்பவெள் ளத்தை,
இறப்பெதிர் காலக் கழிவுமா னானை
    ஏழிசை யின்சுவை தன்னை,
சிறப்புடை மறையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மறைப்பெரும் பொருளை வானவர் கோனைக்
    கண்டுநான் வாழ்ந்தொழிந் தேனே.
2
1270
திடவிசும் பெரிநீர் திங்களும் சுடரும்
    செழுநிலத் துயிர்களும் மற்றும்,
படர்பொருள் களுமாய் நின்றவன் றன்னை,
    பங்கயத் தயனவ னனைய,
திடமொழி மறையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
கடல்நிற வண்ணன் றன்னைநா னடியேன்
    கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
3
1271
வசையறு குறளாய் மாவலி வேள்வி
    மண்ணள விட்டவன் றன்னை,
அசைவறு மமர ரடியிணை வணங்க
    அலைகடல் துயின்றவம் மானை,
திசைமுக னனையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
உயர்மணி மகுடம் சூடிநின் றானைக்
    கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
4
1272
'தீமனத் தரக்கர் திறலழித் தவனே*'
    என்றுசென் றடைந்தவர் தமக்கு,
தாய்மனத் திரங்கி யருளினைக் கொடுக்கும்
    தயரதன் மதலையைச் சயமே,
தேமலர்ப் பொழில்சூழ் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காமனைப் பயந்தான் றன்னைநா னடியேன்
    கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
5
1273
மல்லைமா முந்நீ ரதர்பட மலையால்
    அணைசெய்து மகிழ்ந்தவன் றன்னை,
கல்லின்மீ தியன்ற கடிமதி ளிலங்கை
    கலங்கவோர் வாளிதொட் டானை,
செல்வநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அல்லிமா மலராள் தன்னொடு மடியேன்
    கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
6
1274
வெஞ்சினக் களிறும் வில்லொடு மல்லும்
    வெகுண்டிறுத் தடர்த்தவன் றன்னை,
கஞ்சனைக் காய்ந்த காளையம் மானைக்
    கருமுகில் திருநிறத் தவனை,
செஞ்சொல்நான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
அஞ்சனக் குன்றம் நின்றதொப் பானைக்
    கண்டுகொண் டல்லல்தீர்ந் தேனே.
7
1275
அன்றிய வாண னாயிரம் தோளும்
    துணியவன் றாழிதொட் டானை,
மின்திகழ் குடுமி வேங்கட மலைமேல்
    மேவிய வேதநல் விளக்கை,
தென்திசைத் திலதம் அனையவர் நாங்கைச்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
மன்றது பொலிய மகிழ்ந்துநின் றானை
    வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
8
1276
'களங்கனி வண்ணா* கண்ணனே* என்றன்
    கார்முகி லே*'என நினைந்திட்டு,
உளங்கனிந் திருக்கு மடியவர் தங்கள்
    உள்ளத்து ளூறிய தேனை,
தெளிந்தநான் மறையோர் நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வளங்கொள்பே ரின்பம் மன்னிநின் றானை
    வணங்கிநான் வாழ்ந்தொழிந் தேனே.
9
1277
தேனமர் சோலை நாங்கைநன் னடுவுள்
    செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
வானவர் கோனைக் கண்டமை சொல்லும்
    மங்கையார் வாட்கலி கன்றி,
ஊனமில் பாட லொன்பதோ டொன்றும்
    ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள்,
மானவெண் குடைக்கீழ் வையக மாண்டு
    வானவ ராகுவர் மகிழ்ந்தே.#
10

4. மாற்றரசர்
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1278
மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும்
    மற்றவர்தம் காதலிமார் குழையும், தந்தை
காற்றளையு முடன்கழல வந்து தோன்றிக்
    கதநாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர்,
நூற்றிதழ்கொ ளரவிந்தம் நுழைந்த பள்ளத்
    திளங்கமுகின் முதுபாளை பகுவாய் நண்டின்,
சேற்றளையில் வெண்முத்தம் சிந்து நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.#
1
1279
பொற்றொடித்தோள் மடமகள்தன் வடிவு கொண்ட
    பொல்லாத வன்பேய்ச்சி கொங்கை வாங்கி,
பெற்றெடுத்த தாய்போல மடுப்ப ஆரும்
    பேணாநஞ் சுண்டுகந்த பிள்ளை கண்டீர்,
நெற்றெடுத்த மலர்நீலம் நிறைந்த சூழல்
    இருஞ்சிறைய வண்டொலியும் நெடுங்க ணார்தம்,
சிற்றடிமேல் சிலம்பொலியும் மிழற்று நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
2
1280
படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்குப்
    பசுவெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும்,
அடலடர்த்த வேற்கண்ணார் தோக்கை பற்றி
    அலந்தலைமை செய்துழலு மையன் கண்டீர்,
மடலெடுத்த நெடுங்தெங்கின் பழங்கள் வீழ
    மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி
திடலெடுத்து மலர்சுமந்தங் கிழியு நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
3
1281
வாராரும் முலைமடவாள் பின்னைக் காகி
    வளைமருப்பில் கடுஞ்சினத்து வன்தா ளார்ந்த,
காரார்திண் விடையடர்த்து வதுவை யாண்ட
    கருமுகில்போல் திருநிறத்தென் கண்ணர் கண்டீர்,
ஏராரும் மலர்ப்பொழில்கள் தழுவி யெங்கும்
    எழில்மதியைக் கால்தொடர விளங்கு சோதி,
சீராரு மணிமாடம் திகழும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
4
1282
கலையிலங்கு மகலல்குல் கமலப் பாவை
    கதிர்முத்த வெண்ணகையாள் கருங்க ணாய்ச்சி,
முலையிலங்கு மொளிமணிப்பூண் வடமும் தேய்ப்ப
    மூவாத வரைநெடுந்தோள் மூர்த்தி கண்டீர்,
மலையிலங்கு நிரைச்சந்தி மாட வீதி
    ஆடவரை மடமொழியார் முகத்து, இரண்டு
சிலைவிலங்கி மனஞ்சிறைகொண் டிருக்கும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
5
1283
தான்போலு மென்றெழுந்தான் தரணி யாளன்
    அதுகண்டு தரித்திருப்பா னரக்கர் தங்கள்,
கோன்போலு மென்றெழுந்தான் குன்ற மன்ன
    இருபதுதோ ளுடன்துணித்த வொருவன் கண்டீர்,
மான்போலு மென்னோக்கின் செய்ய வாயார்
    மரகதம்போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு,
தேன்போலு மென்மழலை பயிற்றும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
6
1284
பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப்
    பொல்லாத குறளுருவாய்ப் பொருந்தா வாணன்,
மங்கலம்சேர் மறைவேள்வி யதனுள் புக்கு
    மண்ணகலம் குறையிரந்த மைந்தன் கண்டீர்,
கொங்கலர்ந்த மலர்க்குழலார் கொங்கை தோய்ந்த
    குங்குமத்தின் குழம்பளைந்த கோலந் தன்னால்,
செங்கலங்கல் வெண்மணல்மேல் தவழும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
7
1285
சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேலு
    திருக்குளம்பில் கணகணப்பத் திருவா காரம்
குலங்க,நில மடந்தைதனை யிடந்து புல்கிக்
    கோட்டிடைவைத் தருளியவெங் கோமான் கண்டீர்,
இலங்கியநான் மறையனைத்து மங்க மாறும்
    ஏழிசையும் கேள்விகளு மெண்டிக் கெங்கும்,
சிலம்பியநற் பெருஞ்செல்வம் திகழும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
8
1286
ஏழுலகும் தாழ்வரையு மெங்கு மூடி
    எண்டிசையு மண்டலமும் மண்டி, அண்டம்
மோழையெழுந் தாழிமிகும் ஊழி வெள்ளம்
    முன்னகட்டி லொடுக்கியவெம் மூர்த்தி கண்டீர்,
ஊழிதொறு மூழிதொறு முயர்ந்த செல்வத்
    தோங்கியநான் மறையனைத்தும் தாங்கு நாவர்
சேழுயர்ந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலே.
9
1287
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
    திருத்தெற்றி யம்பலத்தென் செங்கண் மாலை,
கூரணிந்த வேல்வலவன் ஆலி நாடன்
    கொடிமாட மங்கையர்கோன் குறைய லாளி,
பாரணிந்த தொல்புகழான் கலியன் சொன்ன
    பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்,
சீரணிந்த வுலகத்து மன்ன ராகிச்
    சேண்விசும்பில் வானவராய்த் திகழ்வர் தாமே.#
10

5. தூம்புடை
திருமணிக்கூடம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1288
தூம்புடைப் பனைக்கை வேழம்
    துயர்கெடுத் தருளி, மன்னு
காம்புடைக் குன்ற மேந்திக்
    கடுமழை காத்த எந்தை,
பூம்புனல் பொன்னி முற்றும்
    புகுந்துபொன் வரண்ட, எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.#
1
1289
கவ்வைவா ளெயிற்று வன்பேய்க்
    கதிர்முலை சுவைத்து,இ லங்கை
*வெவ்விய இடும்பை கூரக்
    கடுங்கணை துரந்த எந்தை,
கொவ்வைவாய் மகளிர் கொங்கைக்
    குங்குமம் கழுவித் போந்த,
தெய்வநீர் கமழும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.

(*) வவ்விய என்றும் பாடம்.
2
1290
மாத்தொழில் மடங்கச் செற்று
    மருதிற நடந்து வன்தாள்
சேத்தொழில் சிதைத்துப் பின்னை
    செவ்வித்தோள் புணர்ந்த எந்தை,
நாத்தொழில் மறைவல் லார்கள்
    நயந்தறம் பயந்த, வண்கைத்
தீத்தொழில் பயிலும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
3
1291
தாங்கருஞ் சினத்து வன்தாள்
    தடக்கைமா மருப்பு வாங்கி,
பூங்குருந் தொசித்துப் புள்வாய்
    பிளந்தெரு தடர்த்த எந்தை,
மாங்கனி நுகர்ந்த மந்தி
    வந்துவண் டிரிய, வாழைத்
தீங்கனி நுகரும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
4
1292
கருமக ளிலங்கை யாட்டி
    பிலங்கொள்வாய் திறந்து, தன்மேல்
வருமவள் செவியும் மூக்கும்
    வாளினால் தடித்த எந்தை,
பெருமகள் பேதை மங்கை
    தன்னொடும் பிரிவி லாத,
திருமகள் மருவும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
5
1293
கெண்டையும் குறளும் புள்ளும்
    கேழலு மரியும் மாவும்,
அண்டமும் சுடரும் அல்லா
    ஆற்றலு மாய எந்தை,
ஒண்டிறல் தென்ன னோட
    வடவர சோட்டங் கண்ட,
திண்டிற லாளர் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
6
1294
குன்றமும் வானும் மண்ணும்
    குளிர்புனல் திங்க ளோடு,
நின்றவெஞ் சுடரும் அல்லா
    நிலைகளு மாய எந்தை,
மன்றமும் வயலும் காவும்
    மாடமும் மணங்கொண்டு, எங்கும்
தென்றல்வந் துலவும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
7
1295
சங்கையும் துணிவும் பொய்யும்
    மெய்யும்இத் தரணி யோம்பும்,
பொங்கிய முகிலும் அல்லாப்
    பொருள்களு மாய எந்தை,
பங்கய முகுத்த தேறல்
    பருகிய வாளை பாய,
செங்கய லுகளும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
8
1296
பாவமும் அறமும் வீடும்
    இன்பமுந் துன்பந் தானும்
கோவமும் அருளும் அல்லாக்
    குணங்களு மாய எந்தை,
'மூவரி லெங்கள் மூர்த்தி
    இவன்,'என முனிவ ரோடு,
தேவர்வந் திறைஞ்சும் நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானே.
9
1297
திங்கள்தோய் மாட நாங்கூர்த்
    திருமணிக் கூடத் தானை,
மங்கையர் தலைவன் வண்டார்
    கலியன்வா யொலிகள் வல்லார்,
பொங்குநீ ருலக மாண்டு
    பொன்னுல காண்டு, பின்னும்
வெங்கதிர்ப் பரிதி வட்டத்
    தூடுபோய் விளங்கு வாரே.#
10

மேலே செல்க

6. தாவளந்து
திருக்காவளம்பாடி (திருநாங்கூர் திவ்யதேசம்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1298
தாவளந் துலக முற்றும்
    தடமலர்ப் பொய்கை புக்கு,
நாவளம் நவின்றங் கேத்த
    நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய்,
மாவளம் பெருகி மன்னும்
    மறையவர் வாழும் நாங்கைக்,
காவளம் பாடி மேய
    கண்ணனே* களைக ணீயே.#
1
1299
மண்ணிடந் தான மாகி
    மாவலி வலிதொ லைப்பான்,
விண்ணவர் வேண்டச் சென்று
    வேள்வியில் குறையி ரந்தாய்,
துண்ணென மாற்றார் தம்மைத்
    தொலைத்தவர் நாங்கை மேய,
கண்ணனே* காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
2
1300
உருத்தெழு வாலி மார்வில்
    ஒருகணை யுருவ வோட்டி,
கருத்துடைத் தம்பிக் கின்பக்
    கதிர்முடி யரச ளித்தாய்,
பருத்தெழு பலவும் மாவும்
    பழம்விழுந் தொழுகும் நாங்கைக்,
கருத்தனே* காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
3
1301
முனைமுகத் தரக்கன் மாள
    முடிகள்பத் தறுத்து வீழ்த்து,ஆங்
கனையவற் கிளைய வற்கே
    அரசளித் தருளி னானே,
சுனைகளில் கயல்கள் பாயச்
    சுரும்புதேன் நுகரும் நாங்கைக்
கனைகழல் காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
4
1302
படவர வுச்சி தன்மேல்
    பாய்ந்துபல் நடங்கள் செய்து,
மடவரல் மங்கை தன்னை
    மார்வகத் திருத்தி னானே,
தடவரை தங்கு மாடத்
    தகுபுகழ் நாங்கை மேய,
கடவுளே* காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
5
1303
மல்லரை யட்டு மாளக்
    கஞ்சனை மலைந்து கொன்று,
பல்லர சவிந்து வீழப்
    பாரதப் போர்மு டித்தாய்,
நல்லரணன் காவின் நீழல்
    நறைகமழ் நாங்கை மேய
கல்லரண் காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
6
1304
மூத்தவற் கரசு வேண்டி
    முன்பு தூதெழுந் தருளி,
மாத்தகர் பாகம் வீழ
    மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப்
    புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தனே* காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
7
1305
ஏவிளங் கன்னிக் காகி
    இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்ததுக்
    கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த
    புரந்தரன் செய்த நாங்கைக்
காவளம் பாடி மேய
    கண்ணனே* களைக ணீயே.
8
1306
சந்தமாய்ச் சமய மாகிச்
    சமயவைம் பூத மாகி,
அந்தமா யாதி யாகி
    அருமறை யவையு மானாய்,
மந்தமார் பொழில்க டோறும்
    மடமயி லாலும் நாங்கை,
கந்தமார் காவ ளந்தண்
    பாடியாய்* களைக ணீயே.
9
1307
மாவளம் பெருகி மன்னும்
    மறையவர் வாழும், நாங்கைக்
காவளம் பாடி மேய
    கண்ணனைக் கலியன் சொன்ன,
பாவளம் பத்தும் வல்லார்
    பார்மிசை யரச ராகி,
கோவிள மன்னர் தாழக்
    குடைநிழல் பொலிவர் தாமே.#
10

7. கண்ணார் கடல்
திருவெள்ளக்குளம் (திருநாங்கூர் திவ்யதேசம்)
கலி விருத்தம்
1308
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணர் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா, அடியே னிடரைக் களையாயே.#
1
1309
கொந்தார் துளவ மலர்கொண் டணிவானே,
நந்தா தபெரும் புகழ்வே தியர்நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய், அடியே னிடரைக் களையாயே.
2
1310
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே ரியர்நாங்கூர்
சென்றார் வணங்கும்; திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய்* அடியே னிடர்நீக்கே.
3
1311
கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.
4
1312
வேடார் திருவேங் கடம்மேய விளக்கே,
நாடார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்,
சேடார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்தாய்,
பாடா வருவேன் வினையா யினபாற்றே.#
5
1313
கல்லால் கடலை யணைகட்டி யுகந்தாய்,
நல்லார் பலர்வே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வா, திருவெள்ளக் குளத்துறை வானே,
எல்லா இடரும் கெடுமா றருளாயே.
6
1314
கோலால் நிரைமேய்த்த எங்கோ வலர்கோவே,
நாலா கியவே தியர்மன் னியநாங்கூர்,
சேலார் வயல்சூழ் திருவெள்ளக் குளத்துள்
மாலே, எனவல் வினைதீர்த் தருளாயே.
7
1315
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே* நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே.
8
1316
பூவார் திருமா மகள்புல் லியமார்பா,
நாவார் புகழ்வே தியர்மன் னியநாங்கூர்த்
தேவா* திருவெள்ளக் குளத்துறை வானே,
'ஆவா* அடியா னிவன்,'என் றருளாயே.
9
1317
நல்லன் புடைவே தியர்மன் னியநாங்கூர்ச்
செல்வன் திருவெள் ளக்குளத் துளைவானை,
கல்லின் மலிதோள் கலியன் சொன்னமாலை,
வல்ல ரெனவல் லவர்வா னவர்தாமே.#
10

8. கவளயானை
திருப்பார்த்தன்பள்ளி (திருநாங்கூர் திவ்யதேசம்)
கலி விருத்தம்
1318
கவளயானைக் கொம்பொசித்த
    கண்ணனென்றும், காமருசீர்க்
குவளைமேக மன்னமேனி
    கொண்டகோனென் னானையென்றும்,
தவளமாட நீடுநாங்கைத்
    தாமரையாள் கேள்வனென்றும்,
பவளவாயா ளென்மடந்தை
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.#
1
1319
கஞ்சன்விட்ட வெஞ்சினத்த
    களிறடர்த்த காளையென்றும்,
வஞ்சமேவி வந்தபேயின்
    உயிரையுண்ட மாயனென்றும்,
செஞ்சொலாளர் நீடுநாங்கைத்
    தேவதேவ னென்றென்றோதி,
பஞ்சியன்ன மெல்லடியாள்
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
2
1320
அண்டர்கோனென் னானையென்றும்
    ஆயர்மாதர் கொங்கைபுல்கு
செண்டனென்றும், நான்மறைகள்
    தேடியோடும் செல்வனென்றும்,
வண்டுலவு பொழில்கொள்நாங்கை
    மன்னுமாய னென்றென்றோதி,
பண்டுபோலன் றென்மடந்தை
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
3
1321
கொல்லையானாள் பரிசழிந்தாள்
    கோல்வளையார் தம்முகப்பே,
மல்லைமுந்நீர் தட்டிலங்கை
    கட்டழித்த மாயனென்றும்,
செல்வம்மல்கு மறையோர்நாங்கை
    தேவதேவ னென்றென்றோதி,
பல்வளையா ளென்மடந்தை
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
4
1322
அக்கராவி மாளஅன்று
    ஆழ்கடல்சூ ழிலங்கைசெற்ற,
குரக்கரச னென்றும்கோல
    வில்லியென்றும், மாமதியை
நெருக்குமாட நீடுநாங்கை
    நின்மலன்தா னென்றென்றோதி,
பரக்கழிந்தா ளென்மடந்தை
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
5
1323
ஞாலமுற்று முண்டுமிழ்ந்த
    நாதனென்றும், நானிலம்சூழ்
வேலையன்ன கோலமேனி
    வண்ணனென்றும், மேலெழுந்து
சேலுகளும் வயல்கொள்நாங்கைத்
    தேவதேவ னென்றென்றோதி,
பாலின்நல்ல மென்மொழியாள்
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
6
1324
நாடியென்ற னுள்ளங்கொண்ட
    நாதனென்றும், நான்மறகைள்
தேடியென்றும் காணமாட்டாச்
    செல்வனென்றும், சிறைகொள்வண்டு
சேடுலவு பொழில்கொள்நாங்கைத்
    தேவதேவ னென்றென்றோதி,
பாடகம்சேர் மெல்லடியாள்
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
7
1325
உலகமேத்து மொருவனென்றும்
    ஒண்சுடரோ டும்பரெய்தா,
நிலவுமாழிப் படையனென்றும்
    நேசனென்றும், தென்திசைக்குத்
திலதமன்ன மறையோர்நாங்கைத்
    தேவதேவ னென்றென்றோதி,
பலருமேச வென்மடந்தை
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
8
1326
கண்ணனென்றும் வானவர்கள்
    காதலித்து மலர்கள்தூவும்
எண்ணனென்று மின்பனென்றும்
    மேழுலகுக் காதியென்றும்,
திண்ணமாட நீடுநாங்கைத்
    தேவதேவ னென்றென்றோதி,
பண்ணினன்ன மென்மொழியாள்
    பார்த்தன்பள்ளி பாடுவாளே.
9
1327
பாருள்நல்ல மறையோர்நாங்கைப்
    பார்த்தன்பள்ளி செங்கண்மாலை,
வார்கொள்நல்ல முலைமடவாள்
    பாடலைத்தாய் மொழிந்தமாற்றம்,
கூர்கொள்நல்ல வேல்கலியன்
    கூறுதமிழ் பத்தும்வல்லார்,
ஏர்கொள்நல்ல வைகுந்தத்துள்
    இன்பம்நாளு மெய்துவாரே.#
10

9. நும்மைத் தொழுதோம்
திருஇந்தளூர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1328
நும்மைத் தொழுதோம் நுந்தம்
    பணிசெய் திருக்கும் நும்மடியோம்,
இம்மைக் கின்பம் பெற்றோ
    மெந்தாய் இந்த ளூரிரே,
எம்மைக் கடிதாக் கரும
    மருளி ஆவா வென்றிரங்கி,
நம்மை யொருகால் காட்டி
    நடந்தால் நாங்க ளுய்யோமே?#
1
1329
சிந்தை தன்னுள் நீங்கா
    திருந்த திருவே* மருவினிய
மைந்தா, அந்த ணாலி
    மாலே* சோலை மழகளிறே,
நந்தா விளக்கின் சுடரே*
    நறையூர் நின்ற நம்பீ,என்
எந்தாய்* இந்த ளூராய்*
    அடியேற் கிறையு மிரங்காயே.#
2
1330
பேசு கின்ற திதுவே
    வைய மீரடி யாலளந்த,
மூசி வண்டு முரலும்
    கண்ணி முடியீர், உமைக்காணும்
ஆசை யென்னும் கடலில்
    வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்
ஏசு கின்ற திதுவே
    காணும் இந்த ளூரிரே*
3
1331
ஆசை வழுவா தேத்து
    மெமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்
தேச மறிய வுமக்கே
    யாளாய்த் திரிகின் றோமுக்கு,
காசி னொளியில் திகழும்
    வண்ணம் காட்டீர், எம்பெருமான்
வாசி வல்லீர் இந்த
    ளூரிர்* வாழ்ந்தே போம்நீரே*
4
1332
தீயெம் பெருமான் நீரெம்
    பெருமான் திசையு மிருநிலனு
மாய்,எம் பெருமா னாகி
    நின்றா லடியோம் காணோமால்,
தாயெம் பெருமான் தந்தை
    தந்தை யாவீர், அடியேமுக்-
யேயெம் பெருமா னல்லீ
    ரோநீர் இந்த ளூரிரே*
5
1333
சொல்லா தொழிய கில்லேன்
    அறிந்த சொல்லில், நும்மடியார்,
எல்லா ரோடு மொக்க
    வெண்ணி யிருந்தீ ரடியேனை,
நல்லா ரறிவீர் தீயா
    ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,
எல்லா மறிவீ ரிதே
    யறியீர் இந்த ளூரிரே*
6
1334
மாட்டீ ரானீர் பணிநீர்
    கொள்ள எம்மைப் பணியறியா
வீட்டீர், இதனை வேறே
    சொல்னோம் இந்த ளூரிரே,
காட்டீ ரானீர் நுந்த
    மடிக்கள் காட்டில் உமக்கிந்த,
நாட்டே வந்து தொண்ட
    ரான நாங்க ளுய்யோமே.
7
1335
முன்னை வண்ணம் பாலின்
    வண்ணம் முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல்
    வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,
பொன்னின் வண்ணம் மணியின்
    வண்ணம் புரையுந் திருமேனி,
இன்ன வண்ண மென்று
    காட்டீர் இந்த ளூரிரே*
8
1336
எந்தை தந்தை தம்மா
    னென்றென் றெமரே ழேழளவும்,
வந்து நின்ற தொண்ட
    ரோர்க்கே வாசி வல்லீரால்,
சிந்தை தன்னுள் முந்தி
    நிற்றிர் சிறிதும் திருமேனி,
இந்த வண்ண மென்று
    காட்டீர் இந்த ளூரிரே*
9
1337
ஏரார் பொழில்சூழ் இந்த
    ளூரி லெந்தை பெருமானை,
காரார் புறவில் மங்கை
    வேந்தன் கலிய னொலிசெய்த,
சீரா ரின்சொல் மாலை
    கற்றுத் திரிவா ருலகத்து,
ஆரா ரவரே யமரர்க்
    கென்று மமர ராவாரே.#
10

10. ஆய்ச்சியர்
திருவெள்ளியங்குடி
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1338
ஆய்ச்சிய ரழைப்ப வெண்ணெயுண் டொருகால்
    ஆலிலை வளர்ந்தவெம் பெருமான்,
பேய்ச்சியை முலையுண் டணைமரு திறுத்துப்
    பெருநில மளந்தவன் கோயில்,
காய்த்தநீள் கமுகும் கதலியும் தெங்கும்
    எங்குமாம் பொழில்களி னடுவே,
வாய்த்தநீர் பாயும் மண்ணியின் தென்பால்
    திருவெள்ளி யங்குடி யதுவே.#
1
1339
ஆநிரை மேய்த்தன் றலைகட லடைத்திட்
    டரக்கர்தம் சிரங்களை யுருட்டி,
கார்நிறை மேகம் கலந்ததோ ருருவக்
    கண்ணனார் கருதிய கோயில்,
பூநிரைச் செருந்தி புன்னைமுத் தரும்பிப்
    பொதும்பிடை வரிவண்டு மிண்டி,
தேனிரைத் துண்டங் கின்னிசை முரலும்
    திருவெள்ளி யங்குடி யதுவே.
2
1340
கடுவிட முடைய காளியன் தடத்தைக்
    கலக்கிமுன் னலக்கழித்து, அவன்றன்
படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப்
    பல்நடம் பயின்றவன் கோயில்,
படவர வல்குல் பாவைநல் லார்கள்
    பயிற்றிய நாடகத் தொலிபோய்,
அன்புடை தழுவி யண்டநின் றதிரும்
    திருவெள்ளி யங்குடி யதுவே.
3
1341
கறவைமுன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த
    காளமே கத்திரு வுருவன்,
பறவைமுன் னுயர்த்துப் பாற்கடல் துயின்ற
    பரமனார் பள்ளிகொள் கோயில்,
துறைதுறை தோறும் பொன்மணி சிதறும்
    தொகுதிரை மண்ணியின் தென்பால்,
செறிமணி மாடக் கொடிகதி ரணவும்
    திருவெள்ளி யங்குடி யதுவே.
4
1342
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து
    பாரதம் கையெறிந்து, ஒருகால்
தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த
    செங்கண்மால் சென்றுறை கோயில்,
ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி
    எமக்கிட மன்றிதென் றெண்ணி,
சீர்மலி பொய்கை சென்றணை கின்ற
    திருவெள்ளி யங்குடி யதுவே.
5
1343
காற்றிடைப் பூளை கரந்தன அரந்தை
    உறக்கட லரக்கர்தம் சேனை,
கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த
    கோலவில் இராமன்றன் கோயில்,
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள்
    ஊழ்த்துவீழ்ந் தனவுண்டு மண்டி,
சேற்றிடைக் கயல்க ளுகள்திகழ் வயல்சூழ்
    திருவெள்ளி யங்குடி யதுவே.
6
1344
ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த
    மாவலி வேள்வியில் புக்கு,
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு
    திக்குற வளர்ந்தவன் கோயில்,
அள்ளியம் பொழில்வா யிருந்துவாழ் குயிவ்கள்
    அரியரி யென்றவை யழைப்ப,
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்
    திருவெள்ளி யங்குடி யதுவே.
7
1345
முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர்
    தம்பெரு மானை,அன் றரியாய்
மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட
    மாயனார் மன்னிய கோயில்,
படியிடை மாடத் தடியிடைத் தூணில்
    பதித்தபன் மணிகளி னொளியால்,
விடிபக லிரவென் றரிவரி தாய
    திருவெள்ளி யங்குடி யதுவே.
8
1346
குடிகுடி யாகக் கூடிநின்ட றமரர்
    குணங்களே பிதற்றிநின் றேத்த
அடியவர்க் கருளி யரவணைத் துயின்ற
    ஆழியா னமர்ந்துறை கோயில்,
கடியுடைக் கமலம் அடியிடை மலரக்
    கரும்பொடு பெருஞ்செந்நெ லசைய,
வடிவுடை யன்னம் பெடையொடும் சேரும்
    வயல்;வெள்ளி யங்குடி யதுவே.
9
1347
பண்டுமுன் ஏன மாகியன் றொருகால்,
    பாரியந் தெயிற்றினில் கொண்டு,
தெண்டிரை வருடப் பாற்கடல் துயின்ற
    திருவெள்ளி யங்குடி யானை,
வண்டறை சோலை மங்கையர் தலைவன்
    மானவேல் கலியன்வா யொலிகள்,
கொண்டிவை பாடும் தவமுடை யார்கள்
    ஆள்வரிக் குரைகட லுலகே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஐந்தாம் பத்து
1. அறிவது
திருப்புள்ளம்பூதங்குடி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1348
அறிவ தய னனைத்துலகும்
    உடையா னென்னை யாளுடையான்
குறிய மாணி யுருவாய
    கூத்தன் மன்னி யமருமிடம்,
நறிய மலர்மேல் சுரும்பார்க்க
    எழிலார் மஞ்ஞை நடமாட,
பொறிகொள் சிறைவண் டிசைபாடும்
    புள்ளம் பூதங் குடிதானே.#
1
1349
கள்ளக் குறளாய் மாவலியை
    வஞ்சித் துலகம் கைப்படுத்து,
பொள்ளைக் கரந்த போதகத்தின்
    துன்பம் தவிர்த்த புனிதனிடம்,
பள்ளச் செறுவில் கயலுகளப்
    பழனக் கழனி யதனுள்போய்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடும்
    புள்ளம் பூதங் குடிதானே.
2
1350
மேவா வரக்கர் தென்னிலங்கை
    வேந்தன் வீயச் சரம்துரந்து,
மாவாய் பிளந்து மல்லடர்த்து
    மருதம் சாய்த்த மாலதிடம்,
காவார் தெங்கின் பழம்வீழக்
    கயல்கள் பாயக் குருகிரியும்,
பூவார் கழனி யெழிலாரும்
    புள்ளம் பூதங் குடிதானே.
3
1351
வெற்பால் மாரி பழுதாக்கி
    விறல்வா ளரக்கர் தலைவன்றன்,
வற்பார் திரள்தோ ளைந்நான்கும்
    துணித்த வல்வில் இராமனிடம்,
கற்பார் புரிசை செய்குன்றம்
    கவினார் கூடம் மாளிகைகள்,
பொற்பார் மாட மெழிலாரும்
    புள்ளம் பூதங் குடிதானே.
4
1352
மையார் தடங்கண் கருங்கூந்தல்
    ஆய்ச்சி மறைய வைத்ததயிர்,
நெய்யார் பாலோ டமுதுசெய்த
    நேமி யங்கை மாயனிடம்,
செய்யார் ஆரல் இரைகருதிச்
    செங்கால் நாரை சென்றணையும்,
பொய்யா நாவில் மறையாளர்
    புள்ளம் பூதங் குடிதானே.
5
1353
மின்ன னன்ன நுண்மருங்கல்
    வேயேய் தடந்தோள் மெல்லியற்கா,
மன்னு சினத்த மழவிடைகள்
    ஏழன் றடர்த்த மாலதிடம்,
மன்னு முதுநீ ரரவிந்த
    மலர்மேல் வரிவண் டிசைபாட,
புன்னை பொன்னேய் தாதுதிர்க்கும்
    புள்ளம் பூதங் குடிதானே.
6
1354
குடையா விலங்கல் கொண்டேந்தி
    மாரி பழுதா நிரைகாத்து,
சடையா னோட அடல்வாணன்
    தடந்தோள் துணித்த தலைவனிடம்,
குடியா வண்டு கள்ளுண்ணக்
    கோல நீலம் மட்டுகுக்கும்,
புடையார் கழனி யெழிலாரும்
    புள்ளம் பூதங் குடிதானே.
7
1355
கறையார் நெடுவேல் மறமன்னர்
    வீய விசயன் தேர்கடவி,
இறையான் கையில் நிறையாத
    முண்டம் நிறைத்த எந்தையிடம்,
மறையால் முத்தீ யவைவளர்க்கும்
    மன்னு புகழால் வண்மையால்,
பொறையால் மிக்க அந்தணர்வாழ்
    புள்ளம் பூதங் குடிதானே.
8
1356
துன்னி மண்ணும் விண்ணாடும்
    தோன்றா திருளாய் மூடியநாள்,
அன்ன மாகி யருமறைகள்
    அருளிச் செய்த அமலனிடம்,
மின்னு சோதி நவமணியும்
    வேயின் முத்து சாமரையும்,
பொன்னும் பொன்னி கொணர்ந்தலைக்கும்
    புள்ளம் பூதங் குடிதானே.
9
1357
கற்றா மறித்துக் காளியன்றன்
    சென்னி நடுங்க நடம்பயின்ற,
பொற்றா மரையாள் தன்கேள்வன்
    புள்ளம் பூதங் குடிதன்மேல்
கற்றார் பரவும் மங்கையர்கோன்
    காரார் புயற்கைக் கலிகன்றி,
பொற்றா னீரைந் திவைபாடச்
    சோர நில்லா துயர்தாமே.#
10

2. தாந்தம்
திருக்கூடலூர்
கலி விருத்தம்
1358
தாம்தம் பெருமை யறியார், தூது
வேந்தர்க் காய வேந்த ரூர்(*)போல்,
காந்தள் விரல்மென் கலைநன் மடவார்,
கூந்தல் கமழும் கூட லூரே.#

(*) போல் என்னும் சொல் இப்பகுதியில் அசைச்சொல். அதற்குப் பொருள் இல்லை.
1
1359
செறுமதிண் திமிலே றுடைய, பின்னை
பெறும்தண் கோலம் பெற்றா ரூர்போல்,
நறுந்தண் தீந்தே னுண்ட வண்டு,
குறிஞ்சி பாடும் கூட லூரே.
2
1360
பிள்ளை யுருவாய்த் தயிருண்டு, அடியேன்
உள்ளம் புகுந்த வொருவ ரூர்போல்,
கள்ள நாரை வயலுள், கயல்மீன்
கொள்ளை கொள்ளும் கூட லூரே.
3
1361
கூற்றே ருருவின் குறளாய், நிலநீர்
ஏற்றா னெந்தை பெருமா னூர்போல்,
சேற்றே ருழவர் கோதைப் போதூண்
கோல்தேன் முரலும் கூட லூரே.
4
1362
தொண்டர் பரவச் சுடர்சென் றணவ,
அண்டத் தமரு மடிக ளூர்போல்,
வண்ட லலையுள் கெண்டை மிளிர,
கொண்ட லதிரும் கூட லூரே.
5
1363
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன்,
துக்கம் துடைத்த துணைவ ரூர்போல்,
எக்க லிடுநுண் மணல்மேல், எங்கும்
கொக்கின் பழம்வீழ் கூட லூரே.
6
1364
கருந்தண் கடலும் மலையு முலகும்,
அருந்ம் அடிக ளமரு மூர்போல்,
பெருந்தண் முல்லைப் பிள்ளை யோடி,
குருந்தம் தழுவும் கூட லூரே.
7
1365
கலைவாழ் பிணையோ டணையும், திருநீர்
மலைவா ழெந்தை மருவு மூர்போல்,
இலைதாழ் தெங்கின் மேல்நின்று, இளநீர்க்
குலைதாழ் கிடங்கின் கூட லூரே.
8
1366
பெருகு காத லடியேன் உள்ளம்,
உருகப் புகுந்த வொருவ ரூர்போல்,
அருகு கைதை மலர, கெண்டை
குருகென் றஞ்சும் கூட லூரே.
9
1367
காவிப் பெருநீர் வண்ணன், கண்ணன்
மேவித் திகழும் கூட லூர்மேல்,
கோவைத் தமிழால் கலியன் சொன்ன,
பாவைப் பாடப் பாவம் போமே.#
10

3. வென்றி
திருவெள்ளறை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1368
வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை
    மன்னரை மூவெழுகால்
கொன்ற தேவ,நின் குரைகழல் தொழுவதோர்
    வனையெனக் கருள்புரியே,
மன்றில் மாம்பொழில் நுழைதந்து மல்லிகை
    மௌவலின் போதலர்த்தி,
தென்றல் மாமணம் கமழ்தர வருதிரு
    வெள்ளறை நின்றானே.#
1
1369
வசையில் நான்மறை கெடுத்தவம் மலரயற்
    கருளி,முன் பரிமுகமாய்,
இசைகொள் வேதநூ லென்றிவை பயந்தவ
    னே*எனக் கருள்புரியே,
உயர்கொள் மாதவிப் போதொடு லாவிய
    மாருதம் வீதியின்வாய்,
திசையெல் லாம்கம ழும்பொழில் சூழ்திரு
    வெள்ளறை நின்றானே*
2
1370
வெய்ய னுயுல கேழுடன் நலிந்தவன்
    உடலக மிருபிளவா,
கையில் நீளுகிர்ப் படையது வாய்த்தவ-
    னே*எனக் கருள்புரியே,
மையி னார்தரு வராலினம் பாயவண்
    தடத்திடைக் கமலங்கள்,
தெய்வ நாறுமொண் பொய்கைகள் சூழ்திரு
    வெள்ளறை நின்றானே*
3
1371
வாம்ப ரியுக மன்னர்த முயிர்செக
    ஐவர்கட் கரசளித்த,
காம்பி னார்திரு வேங்கடப் பொருப்ப*நின்
    காதலை யருளெனக்கு,
மாம்பொ ழில்தளிர் கோதிய மடக்குயில்
    வாயது துவர்ப்பெய்த,
தீம்ப லங்கனித் தேனது நுகர்திரு
    வெள்ளறை நின்றானே*
4
1372
மான வேலொண்கண் மடவரல் மண்மகள்
    அழுங்கமுந் நீர்ப்பரப்பில்,
ஏன மாகியன் றிருநில மிடந்தவ-
    னே*எனக் கருள்புரியே,
கான மாமுல்லை கழைக்கரும் பேறிவெண்
    முறுவல்செய் தலர்கின்ற,
தேனின் வாய்மலர் முருகுகுக் கும்திரு
    வெள்ளறை நின்றானே*
5
1373
பொங்கு நீள்முடி யமரர்கள் தொழுதெழ
    அமுதினைக் கொடுத்தளிப்பான்,
அங்கொ ராமைய தாகிய வாதி*நின்
    அடிமையை யருளெனக்கு,
தங்கு பேடையொ டூடிய மதுகரம்
    தையலார் குழலணைவான்,
திங்கள் தோள்சென்னி மாடம்சென் றணைதிரு
    வெள்ளறை நின்றானே*
6
1374
ஆறி னோடொரு நான்குடை நெடுமுடி
    அரக்கன்றன் சிரமெல்லாம்,
வேறு வேறுக வில்லது வளைத்தவ
    னே*எனக் கருள்புரியே,
மாறில் சோதிய மரதகப் பாசடைத்
    தாமரை மலர்வார்ந்த,
தேறல் மாந்திவண் டின்னிசை முரல்திரு
    வெள்ளறை நின்றானே*
7
1375
முன்னிவ் வேழுல குணர்வின்றி யிருள்மிக
    உம்பர்கள் தொழுதேத்த,
அன்ன மாகியன் றமறை பயந்தவ
    னே*எனக் கருள்புரியே,
மன்னு கேதகை சூதக மென்றிவை
    வனத்திடைச் சுரும்பினங்கள்,
தென்ன வென்னவன் டின்னிசை முரல்திரு
    வெள்ளறை நின்றானே*
8
1376
ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென்
    றகலிட முழுதினையும்,
பாங்கி னாற்கொண்ட பரம*நிற் பணிந்தெழு
    வேனெனக் கருள்புரியே,
ஓங்கு பிண்டியின் செம்மல ரேறிவண்
    டுழிதர, மாவேறித்
தீங்கு யில்மிழற் றும்படப் பைத்திரு
    வெள்ளறை நின்றானே*
9
1377
மஞ்சு லாமணி மாடங்கள் சூழ்திரு
    வெள்ளறை யதன்மேய,
அஞ்ச னம்புரை யும்திரு வுருவனை
    ஆதியை யமுதத்தை,
நஞ்சு லாவிய வேல்வல வன்கலி
    கன்றிசொல் ஐயிரண்டும்,
எஞ்ச லின்றிநின் றேத்தவல் லாரிமை
    யோர்க்கர சாவர்களே.#
10

4. உந்திமேல்
திருவரங்கம் - 1
கலிநிலைத்துறை
1378
உந்தி மேல்நான் முகனைப்
    படைத்தானுல குண்டவன்
எந்தை பெம்மான், இமையோர்கள்
    தாதைக்கிட மென்பரால்,
சந்தி னோடு மணியும்
    கொழிக்கும்புனற் காவிரி,
அந்தி போலும் நிறத்தார்
    வயல்சூழ்தென் னரங்கமே.#
1
1379
வையமுண் டாலிலை மேவு
    மாயன்மணி நீண்முடிப்,
பைகொள் நாகத் தணையான்
    பயிலுமிட மென்பரால்,
தையல் நல்லார் குழல்மா
    லையும்மற்றவர் தடமுலை,
செய்ய சாந்தும் கலந்திழி
    புனல்சூழ்தென் னரங்கமே.
2
1380
பண்டிவ் வைய மளப்பான்
    சென்றுமாவலி கையில்நீர்
கொண்ட, ஆழித் தடக்கைக்
    குறளனிட மென்பரால்,
வண்டு பாடும் மதுவார்
    புனல்வந்திழி காவிரி
அண்ட நாறும் பொழில்சூழ்ந்
    தழகார்தென் னரங்கமே.
3
1381
விளைத்த வெம்போர் விறல்வா
    ளரக்கன்நகர் பாழ்பட,
வளைத்த வல்வில் தடக்கை
    யவனுக்கிட மென்பரால்,
துளைக்கை யானை மருப்பு
    மகிலும்கொணர்ந் துந்தி,முன்
திளைக்கும் செல்வப் புனல்கா
    விரிசூழ்தென் னரங்கமே.
4
1382
வம்புலாம் கூந்தல் மண்டோதரி
    காதலன் வான்புக,
அம்பு தன்னால் முனிந்த
    அழகனிட மென்பரால்,
உம்பர் கோனு முலகேழும்
    வந்தீண்டி வணங்கும்,நல்
செம்பொ னாரும் மதிள்சூழ்ந்
    தழகார்தென் னரங்கமே.
5
1383
கலையு டுத்த அகலல்குல்
    வன்பேய்மகள் தாயென,
முலைகொ டுத்தா ளுயிருண்
    டவன்வாழுமிட மென்பரால்,
குலையெ டுத்த கதலிப்
    பொழிலூடும் வந்துந்தி,முன்
அலையெ டுக்கும் புனற்கா
    விரிசூழ்தென் னரங்கமே.
6
1384
கஞ்சன் நெஞ்சும் கடுமல்
    லரும்சகடமும் காலினால்,
துஞ்ச வென்ற சுடராழி
    யான்வாழுமிட மென்பரால்,
மஞ்சு சேர்மா ளிகைநீ
    டகில்புகையும், மறையோர்
செஞ்சொல் வேள்விப் புகையும்
    கமழும்தென் னரங்கமே.
7
1385
ஏன மீனா மையோ
    டரியும்சிறு குறளுமாய்,
தானு மாய தரணித்
    தலைவனிட மென்பரால்,
வானும் மண்ணும் நிறையப்
    புகுந்தீண்டி வணங்கும்,நல்
தேனும் பாலும் கலந்தன்
    னவர்சேர்தென் னரங்கமே.
8
1386
சேய னென்றும் மிகப்பெரியன்
    நுண்ணேர்மையி னாய,இம்
மாயையை ஆரு மறியா
    வகையானிட மென்பரால்,
வேயின் முத்தும் மணியும்
    கொணர்ந்தார்புனற் காவிரி,
ஆய பொன்மா மதிள்சூழந்
    தழகார்தென் னரங்கமே.
9
1387
அல்லி மாத ரமரும்
    திருமார்வ னரங்கத்தை,
கல்லின் மன்னு மதிள்மங்
    கையர்கோன்கலி கன்றிசொல்,
நல்லிசை மாலைகள் நாலி
    ரண்டுமிரண் டுமுடன்,
வல்லவர் தாமுல காண்டு
    பின்வானுல காள்வரே.#
10

5. வெருவாதாள்
திருவரங்கம் - 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1388
வெருவாதாள் வாய்வெருவி ‘வேங்கடமே*
    வேங்கடமே*’ என்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண்
    துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன்
    ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள்
    எங்ஙனம்நான் சிந்திக் கேனே*#
1
1389
கலையாளா அகலல்குல் கனவளையும்
    கையாளா என்செய் கேன்றான்,
‘விலையாளா வடியேனை வேண்டுதியோ
    வேண்டாயோ?’ என்னும், மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்
    மராமரமே ழெய்த வென்றிச்
சிலையாளன், என்மகளைச் செய்தனகள்
    எங்ஙனம்நான் சிந்திக் கேனே*
2
1390
மானாய மென்னோக்கி வாணெடுங்கண்
    நீர்மல்கும் வளையும் சோரும்,
தேனாய நறுந்துழா யலங்கலின்
    திறம்பேசி யுறங்காள் காண்மடின்,
கானாயன் கடிமனையில் தயிருண்டு
    நெய்பருக நந்தன் பெற்ற
ஆனாயன், என்மகளைச் செய்தனகள்
    அம்மனைமீர்* அறிகி லேனே*
3
1391
தாய்வாயில் சொற்கேளாள் தன்னாயத்
    தோடணையாள் தடமென் கொங்கை-
யே,ஆரச் சாந்தணியாள், ‘எம்பெருமான்
    திருவரங்க மெங்கே?’ என்னும்,
பேய்மாய முலையுண்டிவ் வுலகுண்ட
    பெருவயிற்றன் பேசில் நங்காய்,
மாமாய னென்மகளைச் செய்தனகள்
    மங்கைமீர்* மதிக்கி லேனே*
4
1392
பூண்முலைமேல் சாந்தணியாள் பொருகயல்கண்
    மையெழுதாள் பூவை பேணாள்,
ஏணறியா ளெத்தனையும் ‘எம்பெருமான்
    திருவரங்க மெங்கே?’ என்னும்,
நாண்மலராள் நாயகனாய் நாமறிய
    ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி,
ஆண்மகனா யென்மகளைச் செய்தனகள்
    அம்மனைமீர்* அறிகி லேனே.
5
1393
‘தாதாடு வனமாலை தாரானோ?’
    என்றென்றே தளர்ந்தாள் காண்மின்,
யாதானு மொன்றுரைக்கில் ‘எம்பெருமான்
    திருவரங்கம்’ என்னும், பூமேல்
மாதாளன் குடமாடி மதுசூதன்
    மன்னர்க்காய் முன்னம் சென்ற
தூதாளன், என்மகளைச் செய்தனகள்
    எங்ஙனம்நான் சொல் கேனே*
6
1394
வாராளு மிளங்கொங்கை வண்ணம்வே
    றாயினவா றெண்ணாள், எண்ணில்
பேராளன் பேரல்லால் பேசாள்இப்
    பெண்பெற்றே னென்செய் கேன்நான்,
தாராளன் நண்குடந்தை நகராளன்
    ஐவர்க்கா யமரி லூய்த்த
தேராளன், என்மகளைச் செய்தனகள்
    எங்ஙனம்நான் செப்பு கேனே*
7
1395
உறவாது மிலளென்றென் றொழியாது
    பலரேசும் அலரா யிற்றால்,
மறவாதே யெப்பொழுதும் ‘மாயவனே*
    மாதவனே*’ என்கின் றாளால்,
பிறவாத பேராளன் பெண்ணாளன்
    மண்ணாளன் விண்ணோர் தங்கள்
அறவாளன், என்மகளைச் செய்தனகள்
    அம்மனைமீர்* அறிகி லேனே.
8
1396
பந்தோடு கழல்மருவாள் பைங்கிளியும்
    பாலூட்டாள் பாவை பேணாள்,
‘வந்தானோ திருவரங்கன் வாரானோ?’
    என்றென்றே வளையும் சோரும்,
சந்தோகன் பௌழியன்ஐந் தழலோம்பு
    தைத்திரியன் சாம வேதி,
அந்தோ*வந் தென்மகளைச் செய்தனகள்
    அம்மனைமீர்* அறிகி லேனே.
9
1397
சேலுகளும் வயல்புடைசூழ் திருவரங்கத்
    தம்மானைச் சிந்தை செய்த,
நீலமலர்க் கண்மடவாள் நிறையழிவைத்
    தாய்மொழிந்த அதனை, நேரார்
காலவேல் பரகாலன் கலிகன்றி
    ஒலிமாலை கற்று வல்லார்,
மாலைசேர் வெண்குடைக்கீழ் மன்னவராயப்
    பொன்னுலகில் வாழ்வர் தாமே.#
10

மேலே செல்க

6. கைம்மானம்
திருவரங்கம் - 3
கலி விருத்தம்
1398
கைம்மான மழகளிற்றைக்
    கடற்கிடந்த கருமணியை,
மைம்மான மரதகத்தை
    மறையுரைத்த திருமாலை,
எம்மானை எனக்கென்று
    மினியானைப் பனிகாத்த
அம்மானை, யான்கண்ட
    தணிநீர்த் தென் னரங்கத்தே.#
1
1399
பேரானைக் குறுங்குடியெம்
    பெருமானை, திருத்தண்கால்
ஊரானைக் கரம்பனூர்
    உத்தமனை, முத்திலங்கு
காரார்திண் கடலேழு
    மலையேழிவ் வுலகேழுண்டும்,
ஆராதென் றிருந்தானைக்
    கண்டதுதென் னரங்கத்தே.#
2
1400
ஏனாகி யுலகிடந்தன்
    றிருநிலனும் பெருவிசும்பும்,
தானாய பெருமானைத்
    தன்னடியார் மனத்தென்றும்
தேனாகி யமுதாகித்
    திகழ்ந்தானை, மகிழ்ந்தொருகால்
ஆனாயன் ஆனானைக்
    கண்டதுதென் னரங்கத்தே.
3
1401
வளர்ந்தவனைத் தடங்கடலுள்
    வலியுருவில் திரிசகடம்,
தளர்ந்துதிர வுதைத்தவனைத்
    தரியாதன் றிரணியனைப்
பிளந்தவனை, பெருநிலமீ
    ரடிநீட்டிப் பண்டொருநாள்
அளந்தவனை, யான்கண்ட
    தணிநீர்த்தென் னரங்கத்தே.
4
1402
நீரழலாய் நெடுநிலனாய்
    நின்றானை, அன்றரக்கன்
ஊரழலா லுண்டானைக்
    கண்டார்பின் காணாமே,
பேரழலாய்ப் பெருவிசும்பாய்ப்
    பின்மறையோர் மந்திரத்தின்,
ஆரழலா லுண்டானைக்
    கண்டதுதென் னரங்கத்தே.
5
1403
தஞ்சினத்தைத் தவிர்த்தடைந்தார்
    தவநெறியை, தரியாது
கஞ்சனைக்கொன் றன்றுலக
    முண்டுமிழ்ந்த கற்பகத்தை,
வெஞ்சினத்த கொடுந்தொழிலோன்
    விசையுருவை யசைவித்த,
அஞ்சிறைப்புட் பாகனையான்
    கண்டதுதென் னரங்கத்தே.
6
1404
சிந்தனையைத் தவநெறியைத்
    திருமாலை, பிரியாது
வந்தெனது மனத்திருந்த
    வடமலையை, வரிவண்டார்
கொந்தணைந்த பொழில்கோவ
    லுலகளப்பா னடிநிமிர்த்த
அந்தணனை, யான்கண்ட
    தணிநீர்த்தென் னரங்கத்தே.
7
1405
துவரித்த வுடையார்க்கும்
    தூய்மையில்லாச் சமணர்க்கும்,
அவர்கட்கங் கருளில்லா
    அருளானை, தன்னடைந்த
எமர்கட்கு மடியேற்கு
    மெம்மாற்கு மெம்மனைக்கும்,
அமரர்க்கும் பிரானாரைக்
    கண்டதுதென் னரங்கத்தே.
8
1406
பொய்வண்ணம் மனத்தகற்றிப்
    புலனைந்தும் செலவைத்து,
மெய்வண்ணம் நினைந்தவர்க்கு
    மெய்ந்நின்ற வித்தகனை,
மைவண்ணம் கருமுகில்போல்
    திகழ்வண்ண மரதகத்தின்,
அவ்வண்ண வண்ணனையான்
    கண்டதுதென் னரங்கத்தே.
9
1407
ஆமருவி நிரைமேய்த்த
    அணிரயங்கத் தம்மானை,
காமருசீர்க் கலிகன்றி
    யொலிசெய்த மலிபுகழ்சேர்,
நாமருவு தமிழ்மாலை
    நாலிரண்டோ டிரண்டினையும்,
நாமருவி வல்லார்மேல்
    சாராதீ வினைதாமே.#
10

7. பண்டை
திருவரங்கம் - 4
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1408
பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப்
    பதங்களும் பதங்களின் பொருளும்,
பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும்
    பெருகிய புனலொடு நிலனும்,
கொண்டல்மா ருதமும் குரைகட லேழும்
    ஏழுமா மலைகளும் விசும்பும்,
அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான்
    அரங்கமா நகரமர்ந் தானே.#
1
1409
இந்திரன் பிரம னீசனென் றிவர்கள்
    எண்ணில்பல குணங்களே யியற்ற,
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
    சுற்றமும் சுற்றிநின் றகலாப்
பந்தமும், பந்த மறுப்பதோர் மருந்தும்
    பான்மையும் பல்லுயிர்க் கெல்லாம்,
அந்தமும் வாழ்வு மாயவெம் பெருமான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
2
1410
மன்னுமா நிலனும் மலைகளும் கடலும்
    வானமும் தானவ ருலகும்,
துன்னுமா யிருளாய்த் துலங்கொளி சுருங்கித்
    தொல்லைநான் மறைகளும் மறைய,
பின்னும்வா னவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப்
    பிறங்கிருள் நிறங்கெட, ஒருநாள்
அன்னமாய் அன்றங் கருமறை பயந்தான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
3
1411
மாயிருங் குன்ற மொன்றுமத் தாக
    மாசுண மதனொடும் அளவி,
பாயிரும் பௌவம் பகடுவிண் டலறப்
    படுதிரை விசும்பிடைப் படர,
சேயிரு விசும்பும் திங்களும் சுடரும்,
    தேவரும் தாடுடன் திசைப்ப,
ஆயிரந் தோளா லலைகடல் கடைந்தான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
4
1412
எங்ஙனே யுய்வர் தானவர் நினைந்தால்?
    இரணியன் இலங்குபூ ணலகம்,
பொங்குவெங் குருதி பொன்மலை பிளந்து
    பொழிதரு மருவியொத் திழிய,
வெங்கண்வா ளெயிற்றோர் வெள்ளிமா விலங்கல்
    விண்ணுறக் கனல்விழித் தெழுந்தது,
அங்ஙனே யொக்க அரியுரு வானான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
5
1413
ஆயிரம் குன்றம் சென்றுதொக் கனைய
    அடல்புரை யெழில்திகழ் திரள்தோள்,
ஆயிரந் துணிய அடல்மழுப் பற்றி
    மற்றவன் அகல்விசும் பணைய,
ஆயிரம் பெயரா லமரர்சென் றிறைஞ்ச
    அறிதுயி லலைகடல் நடுவே,
ஆயிரம் சுடர்வா யரவணைத் துயின்றான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
6
1414
சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த
    கொடுமையிற் கடுவிசை யரக்கன்,
எரிவிழித் திலங்கு மணிமுடி பொடிசெய்
    திலங்கைபாழ் படுப்பதற் கெண்ணி,
வரிசிலை வயைள அடுசரம் துரந்து
    மறிகடல் நெறிபட, மலையால்
அரிகுலம் பணிகொண் டலைகட லடைத்தான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
7
1415
ஊழியாய் ஓமத் துச்சியாய் ஒருகால்
    உடையதே ரொருவனாய் உலகில்,
சூழிமால் யானைத் துயர்கெடுத் திலங்கை
    மலங்கவன் றடுசரந் துரந்து,
பாழியால் மிக்க பார்த்தனுக் கருளிப்
    பகலவ னொளிகெட, பகலே
ஆழியா லன்றங் காழியை மறைத்தான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
8
1416
பேயினார் முலையூண் பிள்ளையாய் ஒகால்
    பெருநிலம் விழுங்கி,அ துமிழ்ந்த
வாயனாய் மாலாய் ஆலிலை வளர்ந்து
    மணிமுடி வானவர் தமக்குச்
சேயனாய், அடியேற் கணியனாய் வந்தென்
    சிந்தையுள் வெந்துய ரறுக்கும்,
ஆயனாய் அன்று குன்றமொன் றெடுத்தான்
    அரங்கமா நகரமர்ந் தானே.
9
1417
பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்த
    பொருதிரை மாநதி புடைசூழ்ந்து,
அன்னமா டுலவும் அலைபுனல் சூழ்ந்த
    அரங்கமா நகரமர்ந் தானை,
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
    மானவேல் கலியன்வா யொலிகள்,
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
    பழவினை பற்றறுப் பாரே.#
10

8. ஏழை ஏதலன்
திருவரங்கம் - 5
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1418
ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா
    திரங்கி மற்றவற் கின்னருள் சுரந்து,
‘மாழை மான்மட நோக்கியுன் தோழி
    உம்பி எம்பி’என் றொழிந்திலை, உகந்து
‘தோழ னீயெனக் கிங்கொழி’ என்ற
    சொற்கள் வந்தடி யேன்மனத் திருந்திட,
ஆழி வண்ண*நின் அடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*#
1
1419
வாத மாமகன் மர்க்கடம் விலங்கு
    மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
    செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று
‘கோதில் வாய்மையி னாயொடு முடனே
    உண்பன் நான்’என்ற ஒண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென றடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
2
1420
கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை
    வைகு தாமரை வாங்கிய வேழம்,
முடியும் வண்ணமோர் முழுவலி முதலை
    பற்ற மற்றது நின்சரண் நினைப்ப,
கொடிய வாய்விலங் கின்னுயிர் மலங்கக்
    கொண்ட சீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்
அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
3
1421
நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம்
    வெருவி வந்துநின் சரணெனச் சரணாய்,
நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்
    கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து
வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர்
    கொடிய செய்வன வுள,அதற் கடியேன்
அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
4
1422
மாக மாநிலம் முழுதும்வந் திறைஞ்சும்
    மலர டிகண்ட மாமறை யாளன்,
தோகை மாமயி லன்னவ ரின்பம்
    துற்றி லாமையில் ‘அத்த*இங் கொழிந்த
போகம் நீயெய்திப் பின்னும்நம் மிடைக்கே
    போது வாய்,’என்ற பொன்னருள், எனக்கும்
ஆக வேண்டுமென் றடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
5
1423
மன்னு நான்மறை மாமுனி பெற்ற
    மைந்த னைமதி யாதவெங் கூற்றந்-
தன்னை யஞ்சிநின் சரணெனச் சரணாய்த்
    தகவில் காலனை யுகமுனிந் தொழியா
பின்னை யென்றும்நின் திருவடி பிரியா
    வண்ண மெண்ணிய பேரருள், எனக்கும்
அன்ன தாகுமென் றடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
6
1424
ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்
    உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,
'காத லென்மகன் புகலிடங் காணேன்;
    கண்டு நீதரு வாயெனக்' கென்று,
கோதில் வாய்மையி னானுனை வேண்டிய
    குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*
7
1425
வேத வாய்மொழி யந்தண னொருவன்
    ‘எந்தை நின்சர ணென்னுடை மனைவி,
காதல் மக்களைப் பயத்தலும் காணாள்
    (*)கடிய தெய்வங்கொண் டொளிக்கும்,’என் றழைப்ப,
ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச்
    செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,
ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*

(*) கடியதோர் என்றும் பாடம்.
8
1426
துளங்கு நீண்முடி அரசர்தம் குரிசில்
    தொண்டை மன்னவன் திண்டிற லொருவற்கு,
உளங்கொ ளன்பினோ டின்னருள் சுரந்தங்
    கோடு நாழிகை யேழுட னிருப்ப,
வளங்கொள் மந்திரம் மற்றவற் கருளிச்
    செய்த வாறடி யேனறிந்து, உலகம்
அளந்த பொன்னடி யேயடைந் துய்ந்தேன்
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே*#
9
1427
மாட மாளிகை சூழ்திரு மங்கை
    மன்னன் ஒன்னலர் தங்களை வெல்லும்,
ஆடல் மாவல வன்கலி கன்றி
    அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானை,
நீடு தொல்புக ழாழிவல் லானை
    எந்தை யைநெடு மாலைநி னைந்த,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்*
    பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.#
10

9. கையிலங்கு
திருப்பேர்நகர்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1428
கையிலங் காழி சங்கன்
    கருமுகில் திருநி றத்தன்,
பொய்யிலன் மெய்யன் தன்தாள்
    அடைவரே லடிமை யாக்கும்,
செய்யலர் கமல மோங்கு
    செறிபொழில் தென்தி ருப்பேர்
பையர வணையான் நாமம்
    பரவிநா னுய்ந்த வாறே*#
1
1429
வங்கமார் கடல்க ளேழும்
    மலையும்வா னகமும் மற்றும்,
அங்கண்மா ஞால மெல்லாம்
    அமுதுசெய் துமிழ்ந்த எந்தை,
திங்கள்மா முகில்அ ணாவு
    செறிபொழில் தென்தி ருப்பேர்,
எங்கள்மா லிறைவன் நாமம்
    ஏத்திநா னுய்ந்த வாறே*
2
1430
ஒருவனை யுந்திப் பூமேல்
    ஓங்குவித் தாகந் தன்னால்,
ஒருவனைச் சாபம் நீக்கி
    ‘உம்பராள்’, என்று விட்டான்,
பெருவரை மதிள்கள் சூழ்ந்த
    பெருநகர் அரவ ணைமேல்,
கருவரை வண்ணன் தென்பேர்
    கருதிநா னுய்ந்த வாறே*
3
1431
ஊனமர் தலையொன் றேந்தி
    உலகெலாம் திரியு மீசன்,
ஈனமர் சாபம் நீக்காய்,
    என்னவொண் புனலை யீந்தான்,
தேனமர் பொழில்கள் சூழ்ந்த
    செறிவயல் தென்தி ருப்பேர்,
வானவர் தலைவன் நாமம்
    வாழ்த்திநா னுய்ந்த வாறே*
4
1432
‘வக்கரன் வாய்முன் கீண்ட
    மாயனே*’ என்று வானேர்
புக்கு,’அரண் தந்த ருள்வாய்,’
    என்னப்பொன் னாகத் தானை,
நக்கரி யுருவ மாகி
    நகங்கிளர்ந் திடந்து கந்த,
சக்கரச் செல்வன் தென்பேர்த்
    தலைவன்தா ளடைந்துய்ந் தேனே*
5
1433
விலங்கலால் கடல டைத்து
    விளங்கிழை பொருட்டு, வில்லால்,
இலங்கைமா நகர்க்கி றைவன்
    இருபது புயம்து ணித்தான்,
நலங்கொள்நான் மறைவல் லார்கள்
    ஓத்தொலி யேத்தக் கேட்டு
மலங்குபாய் வயல்தி ருப்பேர்
    மருவிநான் வாழ்ந்த வாறே*
6
1434
வெண்ணெய்தா னமுது செய்ய
    வெகுண்டுமத் தாய்ச்சி யோச்சி,
கண்ணியார் குறுங்க யிற்றால்
    கட்டவெட் டென்றி ருந்தான்,
திண்ணமா மதிள்கள் சூழ்ந்த
    தென்திருப் பேருள், வேலை
வண்ணனார் நாமம் நாளும்
    வாய்மொழிந் துய்ந்த வாறே*
7
1435
அம்பொனா ருலக மேழும்
    அறியஆய்ப் பாடி தன்னுள்,
கொம்பனார் பின்னை கோலம்
    கூடுதற் கேறு கொன்றான்,
செம்பொனார் மதிள்கள் சூழ்ந்த
    தென்திருப் பேருள் மேவும்,
எம்பிரான் நாமம் நாளும்
    ஏத்திநா னுய்ந்த வாறே*
8
1436
நால்வகை வேத மைந்து
    வேள்வியா றங்கம் வல்லார்,
மேலைவா னவரின் மிக்க
    வேதிய ராதி காலம்,
சேலுகள் வயல்தி ருப்பேர்ச்
    செங்கண்மா லோடும் வாழ்வார்,
சீலமா தவத்தர் சிந்தை
    யாளியென் சிந்தை யானே.
9
1437
வண்டறை பொழில்தி ருப்பேர்
    வரியர வணையில், பள்ளி
கொண்டுறை கின்ற மாலைக்
    கொடிமதிள் மாட மங்கை,
திண்டிறல் தோள்க லியன்
    செஞ்சொலால் மொழிந்த மாலை,
கொண்டிவை பாடி யாடக்
    கூடுவார் நீள்வி சும்பே.#
10

10. தீதறு
திருநந்திபுரவிண்ணகரம் (நாதன் கோயில்)
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1438
தீதறுநி லத்தொடெரி காலினொடு நீர்கெழுவி
    சும்பு மவையாய்,
மாசறும னத்தினொடு றக்கமொடி றக்கையவை
    யாய பெருமான்,
தாய்செறவு ளைந்துதயி ருண்டுகுட மாடுதட
    மார்வர் தகைசேர்
நாதனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*#
1
1439
உய்யும்வகை யுண்டுசொன செய்யிலுல கேழுமொழி
    யாமை முனநாள்,
மெய்யினள வேயமுது செய்யவல ஐயனவன்
    மேவு நகர்தான்,
மையவரி வண்டுமது வுண்டுகிளை யோடுமலர்
    கிண்டி யதன்மேல்,
நைவளம்ந விற்றுபொழில் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
2
1440
உம்பருல கேழுகட லேழுமலை யேழுமொழி
    யாம முனநாள்,
தம்பொன்வயி றாரளவு முண்டவையு மிழ்ந்ததட
    மார்வர் தகைசேர்,
வம்புமலர் கின்றபொழில் பைம்பொன்வரு தும்பிமணி
    கங்குல் வயல்சூழ்,
நம்பனுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
3
1441
பிறையினொளி எயிறிலக முறுகியெதிர் பொருதுமென
    வந்த அசுரர்,
இறைகளவை நெறுநெறென வெறியவவர் வயிறழல
    நின்ற பெருமான்,
சிறைகொள்மயில் குயில்பயில மலர்களுக அளிமுரல
    அடிகொள் நெடுமா,
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
4
1442
மூளவெரி சிந்திமுனி வெய்தியமர் செய்துமென
    வந்த அசுரர்,
தோளுமவர் தாளுமுடி யோடுபொடி யாகநொடி
    யாம ளவெய்தான்,
வாளும்வரி வில்லும்வளை யாழிகதை சங்கமிவை
    யங்கை யுடையான்,
நாளுமுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
5
1443
தம்பியொடு தாமொருவர் தந்துணைவி காதல்துணை
    யாக முனநாள்,
வெம்பியெரி கானகமு லாவுமவர் தாமினிது
    மேவு நகர்தான்,
கொம்புகுதி கொண்டுகுயில் கூவமயி லாலுமெழி
    லார்பு றவுசேர்
நம்பியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
6
1444
தந்தைமன முந்துதுயர் நந்நஇருள் வந்தவிறல்
    நந்தன் மதலை,
எந்தையிவ னென்றமரர் கந்தமலர் கொண்டுதொழ
    நின்ற நகர்தான்,
மந்தமுழ வோசைமழை யாகவெழு கார்மயில்கள்
    ஆடு பொழில்சூழ்,
நந்திபணி செய்தநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
7
1445
எண்ணில்நினை வெய்தியினி யில்லையிறை யென்றுமுனி
    யாளர் திருவார்,
பண்ணில்மலி கீதமொடு பாடியவ ராடலொடு
    கூட எழிலார்,
மண்ணிலிது போலநக ரில்லையென வானவர்கள்
    தாம லர்கள்தூய்,
நண்ணியுறை கின்றநகர் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
8
1446
வங்கமலி பௌவமது மாமுகடி னுச்சிபுக
    மிக்க பெருநீர்,
அங்கமழி யாரவன் தாணைதலை சூடுமடி
    யாற றிதியேல்,
பொங்குபுன லுந்துமணி கங்குலிருள் சீறுமொளி
    யெங்கு முளதால்,
நங்கள்பெரு மானுறையும் நந்திபுர விண்ணகரம்
    நண்ணு மனமே*
9
1447
நறைசெய்பொழில் மழைதவழும் நந்திபுர விண்ணகரம்
    நண்ணி யுறையும்,
உறைகொள்புக ராழிசுரி சங்கமவை யங்கையுடை
    யானை, ஒளிசேர்
கறைவளரும் வேல்வல்ல கலியனொலி மாலையிவை
    யைந்து மைந்தும்,
முறையிலிவை பயிலவல அடியவர்கள் கொடுவினைகள்
    முழுத கலுமே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஆறாம் பத்து
1. வண்டுணும்
திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோயில்) - 1
வஞ்சி விருத்தம்
1448
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு
பண்டைநம் வினைகெட வென்று,அடிமேல்
தொண்டரு மமரரும் பணியநின்றங்
கண்டமொ டகலிட மளந்தவனே*
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*#
1
1449
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள்
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே,
விண்ணவ ரமுதுண அமுதில்வரும்
பெண்ணமு துண்டவெம் பெருமானே
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
2
1450
குழல்நிற வண்ண*நின் கூறுகொண்ட
தழல்நிற வண்ணன்நண் ணார்நகரம்
விழ,நனி மலைசிலை வளைவுசெய்துஅங்
கழல்நிற அம்பது வானவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
3
1451
நிலவொடு வெயில்நில விருசுடரும்
உலகமு முயிர்களு முண்டொருகால்,
கலைதரு குழவியி னுருவினையாய்
அலைகட லாலிலை வளர்ந்தவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
4
1452
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச்
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம்,
ஆர்கெழு வயிற்றினி லடக்கிநின்றங்
கோரெழுத் தோருரு வானவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
5
1453
கார்கெழு கடல்களும் மலைகளுமாய்
ஏர்கெழு முலகமு மாகி,முத
லார்களு மறிவரு நிலையினையாய்ச்
சீர்கெழு நான்மறை யானவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
6
1454
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில்
இருக்குறு மந்தணர் சந்தியின்வாய்,
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும்
இருக்கினி லின்னிசை யானவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
7
1455
காதல்செய் திளையவர் கலவிதரும்
வேதனை வினையது வெருவுதலாம்,
ஆதலி னுனதடி யணுகுவன்நான்
போதலர் நெடுமுடிப் புண்ணியனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
8
1456
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக்
காதல்செய் யாதுன கழலடைந்தேன்,
ஓதல்செய் நான்மறை யாகியும்பர்
ஆதல்செய் மூவுரு வானவனே*,
ஆண்டாயுனைக் காண்பதோ
    ரருளெனக் கருளுதியேல்,
வேண்டேன்மனை வாழ்க்கையை
    விண்ணகர் மேயவனே*
9
1457
பூமரு பொழிலணி விண்ணகர்மேல்,
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன,
பாமரு தமிழிவை பாடவல்லார்,
வாமனன் அடியிணை மருவுவரே.#
10

2. பொறுத்தேன்
திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோயில்) - 2
கலிநிலைத்துறை
1458
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு
    ளின்ப மெனவிரண்டும்
இறுத்தேன், ஐம்புலன் கட்கிட
    னாயின வாயிலொட்டி
அறுத்தேன், ஆர்வச்செற் றம்(*)அவை
    தம்மை மனத்தகற்றி
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*#

(*) அவைதன்னை என்றும் பாடம்.
1
1459
மறந்தே னுன்னைமு னம்மறந்
    தமதி யின்மனத்தால்,
இறந்தே னெத்த னையுமத
    னாலிடும் பைக்குழியில்,
பிறந்தே யெய்த்தொழிந்
    தேன்(*)பெரு மானே திருமார்பா,
சிறந்தேன் நின்னடிக் கேதிரு
    விண்ணகர் மேயவனே*

(*) பெருமான் என்றும் பாடம்.
2
1460
மானேய் நோக்கியர் தம்வயிற்
    றுக்குழி யிலுழைக்கும்,
ஊனேய் ஆக்கை தனையுத
    வாமை யுணர்ந்துணர்ந்து,
வானே* மாநில மே*வந்து
    வந்தென் மனத்திருந்த
தேனே, நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
3
1461
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி
    ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன், நீபணித் தஅரு
    ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன், ஐம்புலன் கள்இடர்
    தீர வெறிந்துவந்து
செறிந்தேன், நின்னடிக் கேதிரு
    விண்ணகர் மேயவனே*
4
1462
பாண்டேன் வண்டறை யும்குழ
    லார்கள்பல் லாண்டிசைப்ப,
ஆண்டார் வையமெல் லாம்அர
    சாகி,முன் னாண்டவரே
மாண்டா ரென்றுவந் தார்அந்
    தோ(மனை வாழ்க்கைதன்னை
வேண்டேன், நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
5
1463
கல்லா வைம்புலன் கள்அவை
    கண்டவா செய்யகில்லேன்,
மல்லா* மல்லம ருள்மல்
    லர்மாள மல்லடர்த்த
மல்லா, மல்லலம் சீர்மதிள்
    நீரிலங் கையழித்த
வில்லா, நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
6
1464
வேறா யானிரந் தேன்வெகு
    ளாது மனக்கொளெந்தாய்,
ஆறா வெந்நர கத்தடி
    யேனை யிடக்கருதி,
கூறா ஐவர்வந் துகுமைக்
    கக்குடி விட்டவரை
தேறா துன்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
7
1465
தீவாய் வல்வினை யாருட
    னின்று சிறந்தவர்போல்,
மேவா வெந்நர கத்திட
    ருற்று விரைந்துவந்தார்,
மூவா வானவர் தம்முதல்
    வா*மதி கோள்விடுத்த
தேவா, நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
8
1466
போதார் தாமரை யாள்புல
    விக்குல வானவர்தம்
கோதா, கோதில்செங் கோல்குடை
    மன்ன ரிடைநடந்த
தூதா, தூமொழி யாய்*சுடர்
    போலென் மனத்திருந்த
வேதா, நின்னடைந் தேன்திரு
    விண்ணகர் மேயவனே*
9
1467
தேனார் பூம்பிற வில்திரு
    விண்ணகர் மேயவனை,
வானா ரும்மதில் சூழ்வயல்
    மங்கையர் கோன்,மருவார்
ஊனார் வேல்கலி யனொலி
    செய்தமிழ் மாலைவல்லார்,
கோனாய் வானவர் தம்கொடி
    மாநகர் கூடுவரே.#
10

3. துறப்பேன்
திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோயில்) - 3
கலிநிலைத்துறை
1468
துறப்பேன் அல்லேனின் பம்துற
    வாது, நின்னுருவம்
மறப்பே னல்லேனென் றும்மற
    வாது, யானுலகில்
பிறப்பே னாகவெண் ணேன்பிற
    வாமை பெற்றது,நின
திறத்தே னாதன் மையால்
    திருவிண் ணகரானே*#
1
1469
துறந்தே னார்வச் செற்றச்சுற்
    றம்து றந்தமையால்,
சிறந்தேன் நின்னடிக்கே
    யடிமை திருமாலே,
அறந்தா னாய்த்திரி வாய்உன்
    னையென் மனத்தகத்தே,
திறம்பா மல்கொண் டேன்திரு
    விண்ண கரானே*
2
1470
மானேய் நோக்குநல்லார்
    மதிபோல்மு கத்துலவும்,
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட்
    டந்துன் னடைந்தேன்,
கோனே* குறுங்குடியுள்
    குழகா* திருநறையூர்த்
தேனே, வருபுனல்சூழ்
    விண்ண கரானே*
3
1471
சாந்தேந்து மென்முலை யார்தடந்
    தோள்புண ரின்பவெள்ளத்
தாழ்ந்தேன், அருநரகத்
    தழுந்தும் பயன்படைத்தேன்,
போந்தேன், புண்ணியனே*
    உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன், நின்னடைந்தேன்
    விண்ண கரானே*
4
1472
மற்றோர் தெய்வமெண்ணே
    னுன்னையென் மனத்துவைத்துப்
பெற்றேன், பெற்றதுவும்
    பிறவாமை யெம்பெருமான்,
வற்றா நீள்கடல்சூ
    ழிலங்கையி ராவணனைச்
செற்றாய், கொற்றவனே*
    விண்ண கரானே*
5
1473
மையொண் கருங்கடலும்
    நிலனு மணிவரையும்,
செய்ய சுடரிரண்டும்
    இவையாய நின்னை, நெஞ்சில்
உய்யும் வகையுணர்ந்தே
    னுண்மையாலினி யாது,மற்றோர்
தெய்வம் பிறிதறியேன்
    விண்ண கரானே*
6
1474
வேறே கூறுவதுண்
    டடியேன் விரித்துரைக்கு
மாறே, நீபணியா
    தடைநின் திருமனத்து,
கூறேன் நெஞ்சுதன்னால்
    குணங்கொண்டு,மற் றோர்தெய்வம்
தேறே னுன்னையல்லால்
    விண்ண கரானே*
7
1475
முளிந்தீந்த வேங்கடத்து
    மூரிப்பெ ருங்களிற்றால்,
விளிந்தீந்த மாமரம்போல்
    வீழ்ந்தாரை நினையாதே,
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா
    லடியேற்கு, வானுலகம்
தெளிந்தேயென் றெய்துவது?
    விண்ண கரானே*
8
1476
சொல்லாய் திருமார்வா*
    உனக்காகித் தொண்டுபட்ட
நல்லே னை,வினைகள்
    நலியாமை நம்புநம்பீ,
மல்லா* குடமாடி*
    மதுசூத னே,உலகில்
செல்லா நல்லிசையாய்*
    விண்ண கரானே*
9
1477
தாரார் மலர்க்கமலத்
    தடஞ்சூழ்ந்த தண்புறவில்,
சீரார் நெடுமறுகில்
    திருவிண் ணகரானை,
காரார் புயல்தடக்கைக்
    கலிய னொலிமாலை,
ஆரா ரிவைல்லார்
    அவர்க்கல்லல் நில்லாவே.#
10

4. கண்ணும் சுழன்று
திருநறையூர் - 1
கலிநிலைத்துறை
1478
கண்ணும் சுழன்று பீளையோ
    டீளைவந் தேங்கினால்,
பண்ணின் மொழியார் ‘பைய
    நடமின்’ என் னாதமுன்,
விண்ணும் மலையும் வேதமும்
    வேள்வியு மாயினான்,
நண்ணு நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே*#
1
1479
கொங்குண் குழலார் கூடி
    யிருந்து சிரித்து,நீர்
இங்கென் னிருமிடி யெம்பால்
    வந்ததென் றிகழாதமுன்,
திங்க ளெரிகால் செஞ்சுட
    ராயன் தேசுடை,
நங்கள் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
2
1480
கொங்குண் குழலார் கூடி
    யிருந்து சிரித்து,எம்மை
எங்கோலம் ஐயா* என்னினிக்
    காண்பதென் னாதமுன்,
செங்கோல் வலவன் தான்பணிந்
    தேத்தித் திகழுமூர்
நங்கோன் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
3
1481
கொம்பும் அரவமும் வல்லியும்
    வென்றநுண் ணேரிடை,
வம்புண் குழலார் வாச
    லடைத்திக ழாதமுன்,
செம்பொன் கமுகினந் தான்கனி
    யும்செழுஞ் சோலைசூழ்
நம்பன் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
4
1482
விலங்கும் கயலும் வேலுமொண்
    காவியும் வென்றகண்,
சலம்கொண்ட சொல்லார் தாங்கள்
    சிரித்திக ழாதமுன்,
மலங்கும் வராலும் வாளையும்
    பாய்வயல் சூழ்தரு,
நலங்கொள் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
5
1483
மின்னே ரிடையார் வேட்கையை
    மாற்றி யிருந்து,
என்நீ ரிருமியெம் பால்வந்த
    தென்றிக ழாதமுன்,
தொன்னீ ரிலங்கை மலங்க
    இலங்கெரி யூட்டினான்,
நன்னீர் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
6
1484
வில்லேர் நுதலார் வேட்கையை
    மாற்றிச் சிரித்து, ‘இவன்
பொல்லான் திரைந்தான்’ என்னும்
    புறனுரை கேட்பதன்முன்,
சொல்லார் மறைநான் கோதி
    யுலகில் நிலாயவர்,
நல்லார் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
7
1485
வாளொண்கண் ணல்லார் தாங்கள்
    மதனனென் றார்தம்மை,
(*)’கேளுமின் ஈளையோ டேங்கு
    கிழவன்’என் னாதமுன்,
வேள்வும் விழவும் வீதியி
    லென்று மறாதவூர்,
நாளு நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.

(*) கேண்மின்க ளீளையோ என்றும் பாடம்.
8
1486
கனிசேர்ந் திலங்குநல் வாயவர்
    காதன்மை விட்டிட,
குனிசேர்ந் துடலம் கோலில்
    தளர்ந்திளை யாதமுன்,
பனிசேர் விசும்பில் பான்மதி
    கோள்விடுத் தானிடம்,
நனிசேர் நறையூர் நாம்தொழு
    தும்மெழு நெஞ்சமே.
9
1487
‘பிறைசேர் நுதலார் பேணுதல்
    நம்மை யிலாதமுன்,
நறைசேர் பொழில்சூழ் நறையூர்
    தொழுநெஞ்ச மே*’என்ற,
கறையார் நெடுவேல் மங்கையர்
    கோன்கலி கன்றிசொல்,
மறவா துரைப்பவர் வானவர்க்
    கின்னர சாவரே.#
10

5. கலங்க
திருநறையூர் - 2
கலிநிலைத்துறை
1488
கலங்க முந்நீர் கடைந்தமு
    தங்கொண்டு, இமையோர்
துலங்கல் தீர நல்கு
    சோதிச் சுடராய,
வலங்கை யாழி யிடங்கைச்
    சங்க முடையானூர்,
நலங்கொள் வாய்மை யந்தணர்
    வாழும் நறையூரே.#
1
1489
முனையார் சீய மாகி
    யவுணன் முரண்மார்வம்,
புனைவா ளுகிரால் போழ்பட
    வீர்ந்த புனிதனூர்,
சினையார் தேமாஞ் செந்தளிர்
    கோதிக் குயில்கூவும்,
நலையார் சோலை சூழந்தழ
    காய நறையூரே.
2
1490
ஆனைப் புரவி தேரொடு
    காலா ளணிகொண்ட,
சேனைத் தொகையைச் சாடி
    யிலங்கை செற்றானூர்,
மீனைத் தழுவி வீழ்ந்தெழும்
    மள்ளர்க் கலமந்து,
நானப் புதலில் ஆமை
    யொளிக்கும் நறையூரே.
3
1491
உறியார் வெண்ணெ யுண்டுர
    லோடும் கட்டுண்டு,
வெறியார் கூந்தல் பின்னை
    பொருட்டுஆன் வென்றானூர்,
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்
    தோறும் நடமாட,
நறுநாண் மலர்மேல் வண்டிசை
    பாடும் நறையூரே.
4
1492
விடையேழ் வென்று மென்தோ
    ளாய்ச்சிக் கன்பனாய்,
நடையால் நின்ற மருதம்
    சாய்த்த நாதனுர்,
பெடையோ டன்னம் பெய்வளை
    யார்தம் பின்சென்று,
நடையோ டியலி நாணி
    யொளிக்கும் நறையூரே.
5
1493
பகுவாய் வன்பேய் கொங்கை
    சுவைத்தா ருயிருண்டு,
புகுவாய் நின்ற போதகம்
    வீழப் பொருதானூர்,
நெகுவாய் நெய்தல் பூமது
    மாந்திக் கமலத்தின்,
நகுவாய் மலர்மே லன்ன
    முறங்கும் நறையூரே.
6
1494
முந்து நூலும் முப்புரி
    நூலும் முன்னீந்த,
அந்த ணாளன் பிள்ளையை
    யஞ்ஞான் றளித்தானூர்,
பொந்தில் வாழும் பிள்ளைக்
    காகிப் புள்ளோடி,
நந்து வாரும் பைம்புனல்
    வாவி நறையூரே.
7
1495
வெள்ளைப் புரவித் தேர்விச
    யற்காய் விறல்வியூகம்
விள்ள, சிந்துக் கோன்விழ
    வூர்ந்த விமலனூர்,
கொள்ளைக் கொழுமீ னுண்குரு
    கோடிப் பெடையோடும்,
நள்ளக் கமலத் தேற
    லுகுக்கும் நறையூரே.
8
1496
பாரை யூரும் பாரந்
    தீரப் பார்த்தன்தன்
தேரை யூரும் தேவ
    தேவன் சேருமூர்,
தாரை யூரும் தண்தளிர்
    வேலி புடைசூழ,
நாரை யூரும் நல்வயல்
    சூழந்த நறையூரே.#
9
1497
தாமத் துளப நீண்முடி
    மாயன் தான்நின்ற,
நாமத் திரள்மா மாளிகை
    சூழ்ந்த நறையூர்மேல்,
காமக் கதிர்வேல் வல்லான்
    கரிய னொலிமாலை,
சேமத் துணையாம் செப்பு
    மவர்க்குத் திருமாலே.#
10

மேலே செல்க

6. அம்பரமும்
திருநறையூர் - 3
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1498
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும்
    அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்,
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி
    கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
    மணிவண்டு வகுளத்தினட் மலர்மேல்வைகு,
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.#
1
1499
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம்
    குலவரையின் மீதோடி யண்டத்தப்பால்,
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை
    இணையடிக்கீ ழினிதிருப்பீர்* இனவண்டாலும்,
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி
    உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள,
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
2
1500
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப்
    பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா,
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம்
    திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர்,
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்ற
    கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற,
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
3
1501
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப்
    பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி,
அங்கைவா ளுகிர்நுதியா லவன தாகம்
    அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர்,
வெங்கண்மா களிறுந்தி வெண்ணி யேற்ற
    விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த,
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
4
1502
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர்
    அரியுருவா யிரணியன தாகங்கீண்டு,
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு
    விருந்தாவீர்* மேலெழுந்து விலங்கல் பாய்ந்து,
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப்
    புலம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன்,
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
5
1503
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த்
    தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய்,
தன்னாலே தன்னுருவில் மூர்த்தி மூன்றாய்த்
    தானாய னாயினான் சரணென்றுய்வீர்,
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை
    விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட,
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
6
1504
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி
    முதுதுவரைக் குலபதியாகக் காலிப்பின்னே,
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர்
    இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர்,
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய
    வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன்,
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில்
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
7
1505
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன்
    மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச்
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன்
    சிரந்துணித்தான் திருவடிநும் சென்னிவைப்பீர்,
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு
    எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட,
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில்
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
8
1506
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல்
    தனியாளன் முனியாள ரேத்தநின்ற
பேராளன், ஆயிரம்பே ருடைய வாளன்
    பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர்,
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற
    படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த,
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில்
    திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.
9
1507
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும்
    திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை,
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன்
    புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த,
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல்
    பாடுவார் வியனுலகில் நமனார்பாடி,
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
    விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே.#
10

7. ஆளும் பணியும்
திருநறையூர் - 4
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1508
ஆளும் பணியு மடியேனைக்
    கொண்டேன் விண்ட நிசாசரரை,
தோளும் தலையும் துணிவெய்தச்
    சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான்,
வேளும் சேயு மனையாரும்
    வேற்க ணாரும் பயில்வீதி,
நாளும் விழவி னொலியோவா
    நறையூர் நின்ற நம்பியே.#
1
1509
முனியாய் வந்து மூவெழுகால்
    முடிசேர் மன்ன ருடல்துணிய,
தனிவாய் மழுவின் படையாண்ட
    தாரார் தேளான், வார்புறவில்
பனிசேர் முல்லை பல்லரும்பப்
    பான லொருபால் கண்காட்ட,
நனிசேர் கமலம் முகங்காட்டும்
    நறையூர் நின்ற நம்பியே.
2
1510
தெள்ளார் கடல்வாய் விடவாய
    சினவா ளரவில் துயிலமர்ந்து,
துள்ளா வருமான் விழவாளி
    துரந்தா னிரந்தான் மாவலிமண்,
புள்ளார் புறவில் பூங்காவி
    புலன்கொள் மாதர் கண்காட்ட,
நள்ளார் கமலம் முகங்காட்டும்
    நறையூர் நின்ற நம்பியே.
3
1511
ஒளியா வெண்ணெ யுண்டானென்
    றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால்,
விளியா ஆர்க்க ஆப்புண்டு
    விம்மி யழுதான் மென்மலர்மேல்
களியா வண்டு கள்ளுண்ணக்
    காமர் தென்றல் அலர்தூற்ற,
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
    நறையூர் நின்ற நம்பியே.
4
1512
வில்லார் விழவில் வடமதுரை
    விரும்பி விரும்பா மல்லடர்த்து,
கல்லார் திரடோள் கஞ்சனைக்
    காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல்,
சொல்லார் சுருதி முறையோதிச்
    சோமுச் செய்யும் தொழிலினோர்,
நல்லார் மறையோர் பலர்வாழும்
    நறையூர் நின்ற நம்பியே.
5
1513
வள்ளி கொழுநன் முதலாய
    மக்க ளோடு முக்கண்ணான்
வெள்கி யோட, விறல்வாணன்
    வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான்,
பள்ளி கமலத் திடைப்பட்ட
    பகுவா யலவன் முகம்நோக்கி,
நள்ளி யூடும் வயல்சூழ்ந்த
    நறையூர் நின்ற நம்பியே.
6
1514
மிடையா வந்த வேல்மன்னர்
    வீய விசயன் தேர்கடவி,
குடையா வரையொன் றெடுத்தாயர்
    கோவாய் நின்றான் கூராழிப்
படையான், வேதம் நான்கைந்து
    வேள்வி யங்க மாறிசையேழ்,
நடையா வல்ல அந்தணர்வாழ்
    நறையூர் நின்ற நம்பியே.
7
1515
பந்தார் விரலாள் பாஞ்சாலி
    கூந்தல் முடிக்கப் பாரதத்து,
கந்தார் களிற்றுக் கழல்மன்னர்
    கலங்கச் சங்கம் வாய்வைத்தான்
செந்தா மரைமே லயனோடு
    சிவனு மனைய பெருமையோர்,
நந்தா வண்கை மறையோர் வாழ்
    நறையூர் நின்ற நம்பியே.
8
1516
ஆறும் பிறையும் அரவமும்
    அடம்பும் சடைமே லணிந்து,உடலம்
நீறும் பூசி யேறூரும்
    இறையோன் சென்று குறையிரப்ப,
மாறொன் றில்லா வாசநீர்
    வரைமார் வகலத் தளித்துகந்தான்,
நாறும் பொழில்சூழ்ந் தழகாய
    நறையூர் நின்ற நம்பியே.
9
1517
நன்மை யுடைய மறையோர்வாழ்
    நறையூர் நின்ற நம்பியை,
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக்
    கலிய னொலிசெய் தமிழ்மாலை,
பன்னி யுலகில் பாடுவார்
    பாடு சாரா பழவினைகள்,
மன்னி யுலகம் ஆண்டுபோய்
    வானோர் வணங்க வாழ்வாரே.#
10

8. மான்கொண்ட
திருநறையூர் - 5
தரவு கொச்சகக் கலிப்பா
1518
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண்
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை,
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை,
நான்சென்று நாடி நறையூரில் கண்டேனே.#
1
1519
முந்நீரை முன்னாள் கடைந்தானை, மூழ்த்தநாள்
அந்நீரை மீனா யமைத்த பெருமானை,
தென்னாலி மேய திருமாலை யெம்மானை,
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டேனே.
2
1520
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம்
மூவாமை நல்கி முதலை துணித்தானை,
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை,
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே.
3
1521
ஓடா அரியா யிரணியனை யூனிடந்த,
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை,
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை,
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே.
4
1522
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த
வில்லானை, செல்வ விபீடணற்கு வேறாக
நல்லானை, நாடி நறையூரில் கண்டேனே.
5
1523
உம்ப ருலகோ டுயிரெல்லாம், உந்தியில்
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை,
அம்பன்ன கண்ணா ளசோதைதன் சிங்கத்தை,
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே.
6
1524
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி
விட்டானை, மெய்யம் அமர்ந்த பெருமானை,
மட்டேறு கற்பதத்தை மாதர்க்காய், வண்துவரை
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே.
7
1525
மண்ணின்மீ பாரங் கெடுப்பான், மறமன்னர்
பண்ணின்மேல் வந்த படையெல்லாம், பாரதத்து
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை,
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே.
8
1526
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும்,
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை,
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை,
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே.#
9
1527
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை,
நன்னறையூர் நின்ற நம்பியை, வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார்,
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே.#
10

9. பெடையடர்த்த
திருநறையூர் - 6
தரவு கொச்சகக் கலிப்பா
1528
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத் திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்,
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே*#
1
1529
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி,
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர்,
பழியாரும் விறலரக்கன் பருடிக ளவைசிதற,
அழலாறும் சரந்துரந்தா னடியிணையே யடைநெஞ்சே*
2
1530
சுளைகொண்ட பலங்கனிக்ள தேன்பாய, கதலிகளின்
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர்
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல், மூவுலகோடு
அளைவெண்ணெ யுண்டான்ற னடியிணையே யடைநெஞ்சே*
3
1531
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல்,
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்,
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த,
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே*
4
1532
அகிற்குறடும் சந்தனமு மம்பொன்னும் மணிமுத்தும்,
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்,
பகல்கரந்த சுடராழிப் படையான்,இவ் வுலகேழும்
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே*
5
1533
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும்,
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர்,
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை, திருமார்வில்
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே*
6
1534
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின்,
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர்,
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன்,
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே*
7
1535
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும்,
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர்,
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி,
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே*#
8
1536
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து,எங்கும்
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர்,
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த,
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே*
9
1537
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை,
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன்,
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார்,
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே.#
10

10. கிடந்த நம்பி
திருநறையூர் - 7
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1538
கிடந்த நம்பி குடந்தை மேவிக்
    கேழ லாயுலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி
    எறிஞர் அரணழிய,
கடந்த நம்பி கடியா ரிலங்கை
    உலகை யீரடியால்,
நடந்த நம்பி நாமம் சொல்லில்
    நமோநா ராயணமே.#
1
1539
விடந்தா னுடைய அரவம் வெருவச்
    செருவில் முனநாள்,முன்
தடந்த மரைநீர்ப் பொய்கை புக்கு
    மிக்க தாடாளன்,
இடந்தான் வையம் கேழ லாகி
    உலகை யீரடியால்,
நடந்தா னுடைய நாமம் சொல்லில்
    நமோநா ராயணமே.
2
1540
பூணா தனலும் தறுகண் வேழம்
    மறுக வளைமருப்பைப்
பேணான் வாங்கி யமுதம் கொண்ட
    பெருமான் திருமார்வன்,
பாணா வண்டு முரலும் கூந்தல்
    ஆய்ச்சி தயிர்வெண்ணெய்,
நாணா துண்டான் நாமம் சொல்லில்
    நமோநா ராயணமே.
3
1541
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள்
    நச்சிப் பாடகத்துள்,
எல்லா வுலகும் வணங்க விருந்த
    அம்மான், இலங்கைக்கோன்
வல்லா ளாகம் வில்லால் முனிந்த
    எந்தை, விபீடணற்கு
நல்லா னுடைய நாமம் சொல்லில்
    நமோநா ராயணமே.
4
1542
குடையா வரையால் நிரைமுன் காத்த
    பெருமான், மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல்
    நின்றான், தென்னிலங்கை
அடையா அரக்கர் வீயப் பொருது
    மேவு வெங்கூற்றம்,
நடையா வுண்ணக் கண்டான் நாமம்
    நமோநா ராயணமே.
5
1543
கான எண்கும் குரங்கும் முசுவும்
    படையா, அடலரக்கர்
மான மழித்து நின்ற வென்றி
    அம்மான், எனக்கென்றும்
தேனும் பாலும் அமுது மாய
    திருமால் திருநாமம்,
நானும் சொன்னேன் நமரு முரைமின்
    நமோநா ராயணமே.
6
1544
நின்ற வரையும் கிடந்த கடலும்
    திசையு மிருநிலனும்,
ஒன்று மொழியா வண்ண மெண்ணி
    நின்ற அம்மானார்,
குன்று குடையா வெடுத்த அடிக
    ளுடைய திருநாமம்,
நன்று காண்மின் தொண்டீர்* சொன்னேன்
    நமோநா ராயணமே.
7
1545
கடுங்கால் மாரி கல்லே பொழிய
    அல்லே யெமக்கென்று
படுங்கால், நீயே சரணென் றாயர்
    அஞ்ச அஞ்சாமுன்,
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி
    நிரையைச் சிரமத்தால்
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம்
    நமோநா ராயணமே.
8
1546
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை
    நிலமா மகள்மலர்மா
மங்கை, பிரமன் சிவனிந் திரன்வா
    னவர்நா யகராய,
எங்க ளடிக ளிமையோர் தலைவ
    ருடைய திருநாமம்,
நங்கள் வினைகள் தவிர வுரைமின்
    நமோநா ராயணமே.
9
1547
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று
    நறையூர் நெடுமாலை,
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு
    நம்பி நாமத்தை,
காவித் தடங்கண் மடவார் கேள்வன்
    கலிய னொலிமாலை
மேவிச் சொல்ல வல்லார் பாவம்
    நில்லா வீயுமே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஏழாம் பத்து
1. கறவா மடநாகு
திருநறையூர் - 8
கலி விருத்தம்
1548
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல்,
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன்,
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்றநம்பி,
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே*#
1
1549
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும்,
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே,
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன்,
பெற்றே னருள்தந்திடு என்எந்தை பிரானே*
2
1550
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய்,
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன்,
காரேய் கடலே மலையே திருக்கோட்டி
யூரே, உகந்தா யையுகந் தடியேனே.
3
1551
‘புள்வாய் பிளந்த புனிதா*’என் றழைக்க,
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா,
கள்வா* கடன்மல்லைக் கிடந்த கரும்பே,
வள்ளால்* உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே.
4
1552
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும்,
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே,
நல்லாய் நரநா ரணனே* எங்கள்நம்பி,
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே.
5
1553
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே,
முனியே திருமூழிக் களத்து விளக்கே,
இனியாய்* தொண்டரோம் பருகின் னமுதாய
கனியே, உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே.
6
1554
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,
நிதியே* திருநீர் மலைநித் திலத்தொத்தே,
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்
கதியே, உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே.
7
1555
‘அத்தா* அரியே*’ என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே* மணிமா ணிக்கமே* முளைக்கின்ற
வித்தே, உன்னையெங் ஙனம்நான் விடுகேனே*
8
1556
தூயாய்* சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம்,
தாதாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா,
ஆயா* அலைநீ லகேழும் முன்னுண்ட
வாயா, உனையெங் ஙனம்நான் மறக்கேனே?
9
1557
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும்
தொண்டாய்க் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
தொண்டீர்* இவைபாடு மின்பாடி நின்றாட,
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே.#
10

2. புள்ளாயேனமுமாய்
திருநறையூர் - 9
கலி விருத்தம்
1558
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட
கள்வா* என்றலும்என் கண்கள்நீர் சோர்தருமால்,
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ*#
1
1559
ஓடா ஆளரியி னுருவாய் மருவி,என்றன்
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா,
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல்கொண்டு,
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ*
2
1560
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின்,
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற,
நன்மான வொண்சுடரே* நறையூர்நின்ற நம்பீ,உன்
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே.
3
1561
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல்
உறைவாய்,என் நெஞ்சினுள் உறைவாய், உறைந்ததுதான்
அறியா திருந்தறியே னடியேன்,அணி வண்டுகிண்டும்
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ*
4
1562
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால்,
ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை,
பூண்டேன்,என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போலொட்டேன்,
நாண்தா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ*
5
1563
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை
வந்தார்,என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன்,
அந்தோ*என் னாருயிரே* அரசே* அருளெனக்கு
நந்தாமல் தந்தவெந்தாய்* நறையூர்நின்ற நம்பீயோ*
6
1564
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,
வன்னெஞ்சம் புக்கிருக்க லொட்டேன் வளைத்துவைத்தேன்,
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ*
7
1565
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது,தங்கள்,
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்கநின்றாய்,
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன்
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ*
8
1566
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால்,
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த
தேனே, தீங்கரும்பின் தெளிவே*என் சிந்தைதன்னால்,
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ*
9
1567
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை,
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன்,
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில்
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுங்காலம் வாழ்வாரே.#
10

3. சினவில்
திருநறையூர் - 10
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1568
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச்
    செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம்
மனமுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும்
    மாமுனி யைமர மேழெய்த மைந்தனை,
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை
    நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை,
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென்
    கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே*#
1
1569
தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும்
    தன்னை யேநினைக் கச்செய்து, தானெனக்
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை
    அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட
வாய னை,மக ரக்குழைக் காதனை
    மைந்த னைமதிள் கோவ லிடைகழி
ஆய னை,அம ரர்க்கரி யேற்றையென்
    அன்ப னையன்றி யாதரி யேனே.
2
1570
வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான்
    மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச்
சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச்
    சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன்,
கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக்
    கோவி னைக்குட மாடிய கூத்தனை,
எந்தை யையெந்தை தந்தைதம் மானை
    எம்பி ரானையெத் தால்மறக் கேனே?
3
1571
உரங்க ளாலியன் றமன்னர் மாளப்
    பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்
    எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி
    ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக்
    கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே.
4
1572
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ
    தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து
தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி
    எம்பி ரானைஉம் பர்க்கணி யாய்நின்ற,
வேங்க டத்திரி யைப்பரி கீறியை
    வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட
தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை
    அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே.
5
1573
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும்
    என்ம னத்தக லாதிருக் கும்புகழ்,
தட்ட லர்த்தபொன் னைஅலர் கோங்கின்
    தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங்
கட்டி யை,கரும் பீன்றிவின் சாற்றைக்
    காத லால்மறை நான்குமுன் னோதிய
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென்
    பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே.
6
1574
பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற
    பாலை யாகி யிங்கே புகுந்து,என்
கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான்
    கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள்,
விண்ணு ளார்பெரு மானையெம் மானை
    வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல்
வண்ணன், மாமணி வண்ணனெம் மண்ணல்
    வண்ண மேயன்றி வாயுரை யாதே.
7
1575
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர்எமக்
    கிம்மை யேயருள் பெற்றமை யால்.அடும்
துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர்
    தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும்
முனியை வானவ ரால்வணங் கப்படும்
    முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர்
கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட
    கள்வ னையின்று கண்டுகொண் டேனே.
8
1576
என்செய் கேனடி னேனுரை யீர்இதற்
    கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
    நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மின்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
    சூழ்க டல்சிறை வைத்துஇம யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
    அன்றி யென்மனம் போன்றியென் னாதே.
9
1577
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர்
    தோன்றல் வாள்கலி யன்திரு வாலி
நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன்
    நல்ல மாமலர்ச் சேவடி, சென்னியில்
சூடி யும்தொழு துமெழுந் தாடியும்
    தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர்*
    பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.#
10

4. கண்சோர
திருச்சேறை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1578
‘கண்சோர வெங்குருதி வந்திழிய
    வெந்தழல்போல் கூந்த லாளை,
மண்சேர முலையுண்ட மாமதலாய்*
    வானவர்தம் கோவே*’ என்று,
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு
    மணிமாட மல்கு, செல்வத்
தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார்
    காண்மினென் தலைமே லாரே.#
1
1579
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை
    வரையகலத் தமர்ந்து, மல்லல்
கொம்புருவ விளங்கனிமே லிளங்கன்று
    கொண்டெறிந்த கூத்தர் போலாம்,
வம்பலரும் தண்சோலை வண்சேறை
    வானுந்து கோயில் மேய,
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும்
    என்மனத்தே யிருக்கின் றாரே.
2
1580
‘மீதோடி வாளெயிறு மின்னிலக
    முன்விலகு முருவி னாளை,
காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த
    கைத்தலத்தா*’ என்று நின்று,
தாதோடு வண்டலம்பும் தண்சேறை
    எம்பெருமான் தாளை யேத்தி,
போதோடு புனல்தூவும் புண்ணியரே
    விண்ணவரில் பொலிகின் றாரே.
3
1581
‘தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை
    வெஞ்சமத்துப் பொன்றி வீழ
போராளும் சிலையதனால் பொருகணைகள்
    போக்குவித்தாய்’ என்று, நாளும்
தாராளும் வரைமார்பன் தண்சேறை
    எம்பெருமா னும்ப ராளும்,
பேராளன் பேரோதும் பெரியோரை
    ஒருகாலும் பிரிகி லேனே.
4
1582
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின்
    வல்லமணர் தமக்கு மல்லேன்,
முந்திச்சென் றரியுருவா யிரணியனை
    முரணழித்த முதல்வர்க் கல்லால்,
சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை
    எம்பெருமான் தாளை, நாளும்
சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி
    எப்பொழுதும் தித்திக் கும்மே.
5
1583
‘பண்டேன மாயுலகை யன்றிடந்த
    பண்பாளா*’ என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணையல்லால்
    துணையில்லேன் சொல்லு கின்றேன்,
வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை
    எம்பெருமா னடியார் தம்மை,
கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம்
    கண்ணிணையும் களிக்கு மாறே.
6
1584
'பைவிரியும் வரியரவில் படுகடலுள்
    துயிலமர்ந்த பண்பா*’ என்றும்,
‘மைவிரியும் மணிவரைபோல் மாயவனே*'
    என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான்
    திருவடியைச் சிந்தித் தேற்கு,என்
ஐயறிவும் கொண்டானுக் காளானார்க்
    காளாமென் அன்பு தானே.
7
1585
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது
    பாவங்கள் சேரா, மேலை
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும்
    மென்தளிர்போ லடியி னானை,
பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ்
    தண்சேறை யம்மான் றன்னை,
கண்ணாரக் கண்டுருகிக் கையாரத்
    தொழுவரைக் கருதுங் காலே.
8
1586
கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால்
    போதொருகால் கவலை யென்னும்,
வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள்
    கருநீலம், களைஞர் தாளால்
தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை
    எம்பெருமான் தாளை, நாளும்
உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர்
    என்னுள்ள முருகு மாறே.
9
1587
பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து
    வயல்நின்ற பெடையோடு, அன்னம்
தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும்
    தண்சேறை யம்மான் றன்னை,
வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி
    ஒலிமாலை கொண்டு தொண்டீர்,
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின்நும்
    துணைக்கையால் தொழுது நின்றே.#
10

5. தந்தை காலில்
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) - 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1588
தந்தை காலில் பெருவி
    லங்கு தாளவிழ, நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார்
    மருவி நின்ற வூர்போலும்,
முந்தி வானம் மழைபொழியும்
    மூவா வுருவில் மறையாளர்
அந்தி மூன்று மனலோம்பும்
    அணியார் வீதி அழுந்தூரே.#
1
1589
பாரித் தெழுந்த படைமன்னர்
    தம்மை யாள, பாரதத்துத்
தேரில் பாக னாயூர்ந்த
    தேவ தேவ னூர்போலும்,
நீரில் பணைத்த நெடுவாளைக்
    கஞ்சிப் போன குருகினங்கள்,
ஆரல் கவுளோ டருகணையும்
    அணியார் வயல்சூழ் அழுந்தூரே.
2
1590
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்
    கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும்,
உம்பர் வாளிக் கிலக்காக
    உதிர்த்த வுரவோ னூர்போலும்,
கொம்பி லார்ந்த மாதவிமேல்
    கோதி மேய்ந்த வண்டினங்கள்,
அம்ப ராவும் கண்மடவார்
    ஐம்பா லணையும் அழுந்தூரே.
3
1591
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல்
    மேவி யடியேன் மனம்புகுந்து,என்
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும்
    நின்றார் நின்ற வூர்போலும்,
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப்
    போன காதல் பெடையோடும்,
அள்ளல் செறுவில் கயல்நாடும்
    அணியார் வயல்சூழ் அழுந்தூரே.
4
1592
பகலு மிரவும் தானேயாய்ப்
    பாரும் விண்ணும் தானேயாய்,
நிகரில் சுடரா யிருளாகி
    நின்றார் நின்ற வூர்போலும்,
துகிலின் கொடியும் தேர்த்துகளும்
    துன்னி மாதர் கூந்தல்வாய்,
அகிலின் புகையால் முகிலேய்க்கும்
    அணியார் வீதி அழுந்தூரே.
5
1593
ஏடி லங்கு தாமரைபோல்
    செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து
    நின்றார் நின்ற வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம்
    போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா
    அணியார் வீதி அழுந்தூரே.
6
1594
மாலைப் புகுந்து மலரணைமேல்
    வைகி யடியேன் மனம்புகுந்து,என்
நீலக் கண்கள் பனிமல்க
    நின்றார் நின்ற வூர்போலும்
வேலைக் கடல்போல் நெடுவீதி
    விண்தோய் சுதைவெண் மணிமாடத்து,
ஆலைப் புகையால் அழல்கதிரை
    மறைக்கும் வீதி அழுந்தூரே.
7
1595
வஞ்சி மருங்கு லிடைநோவ
    மணந்து நின்ற கனவகத்து,என்
நெஞ்சு நிறையக் கைகூப்பி
    நின்றார் நின்ற வூர்போலும்,
பஞ்சி யன்ன மெல்லடிநற்
    பாவை மார்கள், ஆடகத்தின்
அஞ்சி லம்பி னார்ப்போவா
    அணியார் வீதி அழுந்தூரே.
8
1596
என்னைம் புனலு மெழிலுங்கொண்
    டிங்கே நெருந லெழுந்தருளி
பொன்னங் கலைகள் மெலிவெய்தப்
    போன புனித ரூர்போலும்,
மன்னு முதுநீ ரரவிந்த
    மலர்மேல் வரிவண் டிசைபாட,
அன்னம் பெடையோ டுடனாடும்
    அணியார் வயல்சூழ் அழுந்தூரே.
9
1597
நெல்லில் குவளை கண்காட்ட
    நீரில் குமுதம் வாய்காட்ட,
அல்லிக் கமலம் முகங்காட்டும்
    கழனி யழுந்தூர் நின்றானை,
வல்லிப் பொதும்பில் குயில்கூவும்
    மங்கை வேந்தன் பரகாலன்,
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை
    சொல்லப் பாவம் நில்லாவே.#
10

மேலே செல்க

6. சிங்கமதாய்
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) - 2
கலி நிலைத்துறை
1598
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த,
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை,
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே.#
1
1599
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும்,
மூவா வானவனை முழுநீர்வண் ணனை.அடியார்க்கு,
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே.
2
1600
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை,
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை,
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர்
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.
3
1601
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை,
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர்
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே.
4
1602
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை,
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை,
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே.
5
1603
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும்,
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக்
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும்
கரியாணை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே.
6
1604
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா,
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை,
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே.
7
1605
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன்
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும்,
அலையா ரும்கடல்போல் முழுங்கழுந்தையில் மன்னிநின்ற
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே.
8
1606
பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர்
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை,
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற,
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே.
9
1607
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார்
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும்,
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே.#
10

7. திருவுக்கும்
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) - 3
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1608
திருவுக் கும்திரு வாகிய செல்வா*
    தெய்வத் துக்கர சே*செய்ய கண்ணா,
உருவச் செஞ்சுட ராழிவல் லானே*
    உலகுண் டவொரு வா*திரு மார்பா,
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால்
    உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*#
1
1609
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி
    பாவை பூமகள் தன்னொடு முடனே
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய்
    மால்வண் ணா*மழை போலொளி வண்ணா,
சந்தோ கா*பௌழி யா*தைத் திரியா*
    சாம வேதிய னே*நெடு மாலே,
அந்தோ* நின்னடி யன்றிமற் றறியேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
2
1610
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும்
    நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்
செய்யா தவுல கத்திடைச் செய்தாய்
    சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப்
    போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்
ஐயா* நின்னடி யன்றிமற் றறியேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
3
1611
பரனே* பஞ்சவன் பௌழியன் சோழன்
    பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்
வரனே, மாதவ னே*மது சூதா*
    மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்,
நரனே* நாரண னே*திரு நறையூர்
    நம்பீ* எம்பெரு மான்*உம்ப ராளும்
அரனே, ஆதிவ ராகமுன் னானாய்*
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
4
1612
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப்
    பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும்
    பண்பா ளா*பர னே*பவித் திரனே,
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை
    கரும மாவது மென்றனக் கறிந்தேன்,
அண்டா* நின்னடி யன்றிமற் றறியேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
5
1613
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச்
    சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும்
    தாடா ளா*தரை யோர்க்கும்விண் ணோர்க்கும்
சேயாய், கிரேத திரேத துவாபர
    கலியு கமிவை நான்குமு னானாய்,
ஆயா* நின்னடி யன்றிமற் றறியேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
6
1614
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய்*
    கார்வண் ணா*கடல் போல்ஒளி வண்ணா
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய்
    எந்தாய்* அந்தர மேழுமு னானாய்,
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொண்ணாப்
    போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
7
1615
நெடியா னே*கடி ஆர்கலி நம்பீ*
    நின்னை யேநினைந் திங்கிருப் பேனை,
கடியார் காளைய ரைவர் புகுந்து
    காவல் செய்தவக் காவலைப் பிழைத்து,
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன்
    கூறை சோறிவை தந்தெனக் கருளி,
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய்*
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
8
1616
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக்
    ‘கூறை சோறிவை தா’என்று குமைத்துப்
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன்
    புனிதா* புட்கொடி யாய்*நெடு மாலே,
தீவாய் நாகணை யில்துயில் வானே*
    திருமா லே*இனிச் செய்வதொன் றறியேன்,
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய்
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே*
9
1617
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழந்த
    அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி
    ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை
    தூய மாலை யிவைபத்தும் வல்லார்,
மன்னி மன்னவ ராயுல காண்டு
    மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே.#
10

8. செங்கமலம்
திருவழுந்தூர் (தேரழுந்தூர்) - 4
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1618
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்
    திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்
    வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து
    வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.#
1
1619
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண
    முனிவரோடு தானவர்கள் திகைப்ப, வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்
    பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்
    அவைமுரலச் செங்கமல மலரை யேறி,
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
2
1620
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்
    கோள்முதலை பிடிக்கஅதற் கனங்கி நின்று,
‘நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ*’ என்ன
    நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு
    வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
3
1621
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்
    திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி
    எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க
    பொழில்கடொறும் குயில்கூச மயில்க ளால
அலம்புதிரைப் புனல்புடைசூழந் தழகார் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
4
1622
சினமேவும் அடலரியி னுருவ மாகித்
    திறல்மேவு மிரணியன தாகம் கீண்டு,
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
    மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின்,
இனமேவு வரிவளைக்கை யேந்தும் கோவை
    ஏய்வாய மரதகம்போல் கிளியி னின்சொல்,
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
5
1623
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி
    மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,
தானமர வேழுலகு மளந்த வென்றித்
    தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்
    செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,
ஆனதொலசீர் மறையாளர் பயிலும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
6
1624
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்
    பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ
    அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
    திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
7
1625
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு
    பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து,
வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த
    தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத்
    திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,
அம்பொன்மதிள் பொழில்புடைசூழந் தழகார் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
8
1626
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்
    ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி
    நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்
    திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்
    தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே.
9
1627
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்
    படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்
    அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்
    கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்
    ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே.#
10

9. கள்ளம்மனம்
திருச்சிறுபுலியூர்
சந்தக் கலிவிருத்தம்
1628
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.#
1
1629
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி
மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர்,
திருவில்பொலி மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்து,
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே.
2
1630
பறையும்வினை தொழுதுய்ம்மின்நீர் பணியும்சிறு தொண்டீர்*
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால்
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத்
துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே.
3
1631
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே.
4
1632
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து
அந்தாமரை யடியாய்*உன தடியேற்கருள் புரியே.
5
1633
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி,
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும்,
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம்,
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே.
6
1634
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும்
மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ,
தீயோம்புகை மறையோர்சிறு புலியூர்ச்சல சயனத்
தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே.#
7
1635
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு,
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார்
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஐவாய்அர வணைமேலுறை அமலா*அரு ளாயே.
8
1636
கருமாமுகி லுருவா*கன லுருவா*புன லுருவா,
பெருமால்வரை யுருவா*பிற வுருவா*நின துருவா,
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து,
அருமாகட லமுதே*உன தடியேசர ணாமே.#
9
1637
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து,
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை,
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை,
பாராலிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே.#
10

10. பெரும்புறக்கடலை
திருக்கண்ணமங்கை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1638
பெரும்பு றக்கட லையட லேற்றினைப்
    பெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள்
தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப்
    பத்த ராவியை நித்திலத் தொத்தினை,
அரும்பி னையல ரையடி யேன்மனத்
    தாசை யைஅமு தம்பொதி யின்சுவைக்
கரும்பி னைக்,கணி யைச்சென்று நாடிக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.#
1
1639
மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும்
    மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை,
மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை
    மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை,
நென்ன லைப்பக லையிற்றை நாளினை
    நாளை யாய்வரும் திங்களை யாண்டினை,
கன்ன லைக்கும் பினிடைத் தேறலைக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
2
1640
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை
    வாச வார்குழ லாள்மலை மங்கைதன்
பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப்
    பான்மை யைப்பனி மாமதி யம்தவழ்
மங்கு லைச்,சுட ரைவட மாமலை
    உச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும்
கங்கு லை,பக லைச்சென்று நாடிக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
3
1641
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையைத்
    தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை,
மாய னைமதிள் கோவலி டைகழி
    மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள்
ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை
    எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை
காசி னைமணி யைச்சென்று நாடிக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
4
1642
ஏற்றி னையிம யத்துளெம் மீசனை
    இம்மை யைமறு மைக்கு மருந்தினை,
ஆற்ற லைஅண்டத் தப்புறத் துய்த்திடும்
    ஐய னைக்கையி லாழியொன் றேந்திய
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை
    நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை,
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.#
5
1643
துப்ப னைத்துரங் கம்படச் சீறிய
    தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்
செப்பி னை,திரு மங்கைம ணாளனைத்
    தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி
ஒப்ப னை,உல கேழினை யூழியை
    ஆழி யேந்திய கையனை அந்தணர்
கற்பி னை,கழு நீர்மல ரும்வயல்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
6
1644
திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத்
    தேவ தேவனை மூவரில் முன்னிய
விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை
    விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய
அருத்த னை,அரி யைப்பரி கீறிய
    அப்ப னைஅப்பி லாரழ லாய்நின்ற
கருத்த னை,களி வண்டறை யும்பொழில்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
7
1645
வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக்
    கன்று வீசிய ஈசனை, பேய்மகள்
துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத்
    தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய
நஞ்சி னை,அமு தத்தினை நாதனை
    நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை,
கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக்
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
8
1646
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப்
    பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை
    வேள்வி யைவிளக் கினொளி தன்னை,
மண்ணி னைமலை யையலை நீரினை
    மாலை மாமதி யைமறை யோர்தங்கள்
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று
    கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
9
1647
‘கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன்’என்று
    காத லால்கலி கன்றியு ரைசெய்த,
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை
    வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ்
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர்
    மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில்
    கற்க லாம்கவி யின்பொருள் தானே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

எட்டாம் பத்து
1. சிலையிலங்கு
திருக்கண்ணபுரம் - 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1648
'சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண்
    டொண்சங்கம்' என்கின் றாளால்,
'மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக்
    கெற்றேகாண்*' என்கின் றாளால்,
முலையிலங்கு பூம்பயலை முன்போட
    அன்போடி யிருக்கின் றாளால்,
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் (*)கொல்லோ*#

(*) கொலோ என்று பாடல்களிலெல்லாம் முடிதலும் பாட பேதம்.
1
1649
'செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ
    கைத்தலத்த' தென்கின் றாளால்,
'பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி
    மற்றொருகை' என்கின் றாளால்,
'ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா
    என்னப்பா*' என்கின் றாளால்,
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*#
2
1650
'துன்னுமா மண்முடிமேல் துழாயலங்கல்
    தோன்றுமால்' என்கின் றாளால்,
'மின்னுமா மணிமகர குண்டலங்கள்
    வில்வீசும்' என்கின் றாளால்,
'பொன்னின்மா மணியாரம் அணியாகத்
    திலங்குமால்' என்கின் றாளால்,
கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
3
1651
'தாராய தண்டுளப வண்டுழுத
    வரைமார்பன்' என்கின் றாளால்,
'போரானைக் கொம்பொசித்த புட்பாகன்
    என்னம்மான்' என்கின் றாளால்,
'ஆரானும் காண்மின்கள் அம்பவளம்
    வாயவனுக் கெ'ன்கின் றாளால்,
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
4
1652
'அடித்தலமும் தாமரையே அங்கையும்
    பங்கயமே' என்கின் றாளால்,
'முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத்
    துள்ளகலா' என்கின் றாளால்,
'வடித்தடங்கண் மலரவளோ வரையாகத்
    துள்ளிருப்பாள்?' என்கின் றாளால்,
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
5
1653
'பேரா யிரமுடைய பேராளன்
    பேராளன்' என்கின் றாளால்,
'ஏரார் கனமகர குண்டலத்தன்
    எண்தோளன்' என்கின் றாளால்,
'நீரார் மழைமுகிலே நீள்வரையே
    ஒக்குமால்' என்கின் றாளால்,
காரார் வயலமரும் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
6
1654
'செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர்
    சிவளிகைக்கச்' சென்கின் றாளால்,
'அவ்வரத்த வடியிணையு மங்கைளும்
    பங்கயமே' என்கின் றாளால்,
'மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ
    மழைமுகிலோ*' என்கின் றாளால்,
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
7
1655
'கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே
    வருகின்றான்' என்கின் றாளால்,
'வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே
    ஒக்குமால்' என்கின் றாளால்,
'பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம்
    உய்யோமோ?' என்கின் றாளால்,
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
8
1656
'வண்டமரும் வனமாலை மணிமுடிமேல்
    மணநாறும்' என்கின் றாளால்,
'உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும்
    பிரிகிலேன்' என்கின் றாளால்,
'பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில்
    யாம்?'என்றே பயில்கின் றாளால்,
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத்
    தம்மானைக் கண்டாள் கொல்லோ*
9
1657
'மாவளரு மென்னோக்கி மாதராள்
    மாயவனைக் கண்டாய்' என்று,
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத்
    தம்மானைக் கலியன் சொன்ன,
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல்
    இவையைந்து மைந்தும் வல்லார்,
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில்
    மன்னவராய்ப் புகழ்தக் கோரே.#
10

2. தெள்ளியீர்
திருக்கண்ணபுரம் - 2
வெண்தளையால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா
1658
தெள்ளியீர்* தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்*
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள்
கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே?#
1
1659
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்,
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள்,
பாணனார் திண்ண மிருக்க இனியிவள்
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே.
2
1660
'அருவிசோர் வேங்கடம் நீர்மலை' என்றுவாய்
வெருவினாள், மெய்யம் வினவி யிருக்கின்றாள்,
'பெருகுசீர்க் கண்ண புரம்'என்று பேசினாள்
உருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ*#
3
1661
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை,
பெண்மையும் சால நிறைந்திலா பேதைதான்,
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல்
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ*
4
1662
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே.
5
1663
‘வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம்,
இடவகை கொள்வது யாம்’என்று பேசினாள்,
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள்
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே.
6
1664
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும்,
இரங்குமோ? எத்தனை நாளிருந் தெள்கினாள்?
‘துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மைஊர்
அரங்கமே’ என்ப திவள்தினக் காசையே.
7
1665
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?
8
1666
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா,
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன்,
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும்
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே?
9
1667
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.#
10

3. கரையெடுத்த
திருக்கண்ணபுரம் - 3
தரவு கொச்சகக் கலிப்பா
1668
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும்,
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே.#
1
1669
அரிவிரவு முகில்கணத்தா னகில்புகையால் வரையோடும்
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும்,
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண்,
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே.
2
1670
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகை,போம்
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும்
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த,
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே.
3
1671
கணமருவு மலயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில்,
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும்,
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய், உரலோடும்
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனென் பொன்வளையே.
4
1672
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள்
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும்,
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட,
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே.
5
1673
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம்,
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும்,
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால்,
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
6
1674
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம்,
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும்,
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும்,
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே.
7
1675
கொங்குமலி கருங்குவளை கண்ணாக, தெண்கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும்,
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்ற,
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே.
8
1676
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை,
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும்,
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல்
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே.
9
1677
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும்
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன்,
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை,
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே.#
10

4. விண்ணவர்
திருக்கண்ணபுரம் - 4
தரவு கொச்சகக் கலிப்பா
1678
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன்,
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர்,
கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல்,
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ*#
1
1679
வேத முதல்வன் விளங்கு புரிநூலன்,
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி,
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான்,
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ*
2
1680
விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி,
அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும்,
கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ*
3
1681
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய்,
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி,
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான்,
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ*
4
1682
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி,
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள்,
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான்,
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ*
5
1683
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன்,
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி,
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ*
6
1684
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்
(*)தாமன்னு தாச ரதியாய் தடமார்வன்,
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ*

(*) தார்மன்னு என்பதும் பாடம்.
7
1685
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில்,
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர்
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல்,
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ*
8
1686
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன்,
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான்,
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல்,கோல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ*
9
1687
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன்,
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை,
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை,
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ*#
10

5. தந்தை கால்
திருக்கண்ணபுரம் - 5
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1688
(*)தந்தை காலில் விலங்கறவந்து
    தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன்
சிந்தை போயிற்றுத் திருவருள்
    அவனிடைப் பெருமள விருந்தேனை,
அந்தி காவல னமுதுறு
    பசுங்கதி ரவைசுட அதனோடும்,
மந்த மாருதம் வனமுலை
    தடவந்து வலிசெய்வ தொழியாதே*#

(*) தந்தை கால் விலங்கற என்றும் பாடம்.
1
1689
மாரி மாக்கடல் வளைவணற்
    கிளையவன் வரைபுரை திருமார்பில்,
தாரி னாசையில் போயின
    நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன்,
ஊரும் துஞ்சிற்று உலகமும்
    துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும்
    மறைந்தன செய்வதொன் றறியேனே*
2
1690
ஆயன் மாயமே யன்றிமற்
    றென்கையில் வளைகளும் இறைநில்லா,
பேயின் ஆருயி ருண்டிடும்
    பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ,
தூய மாமதிக் கதிர்சுடத்
    துணையில்லை இணைமுலை வேகின்றதால்,
ஆயன் வேயினுக் கழிகின்ற
    துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே*
3
1691
கயங்கொள் புண்தலைக் களிறுந்து
    வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில்,
மயங்க வெண்சங்கம் வாய்வைத்த
    மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர்
தயங்கு வெண்திரைத் திவலைநுண்
    பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல்,
இயங்கு மாருதம் விலங்கிலென்
    ஆவியை எனக்கெனப் பெறலாமே*
4
1692
ஏழு மாமரம் துளைபடச்
    சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த
ஆழி யான்,நமக் கருளிய
    அருளொடும் பகலெல்லை கழிகின்றதால்,
தோழி* நாமிதற் கென்செய்தும்?
    துணையில்லை சுடர்டபடு முதுநீரில்,
ஆழ ஆழ்கின்ற ஆவியை
    அடுவதோர் அந்திவந் தடைகின்றதே*
5
1693
முரியும் வெண்திரை முதுகயம்
    தீப்பட முழங்கழ லெரியம்பின்,
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த
    மைந்தனும் வந்திலன் என்செய்கேன்,
எரியும் வெங்கதிர் துயின்றது
    பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,
கரிய நாழிகை ஊழியில்
    பெரியன கழியுமா றறியேனே*
6
1694
கலங்க மாக்கடல் கடைந்தடைத்
    திலங்கையர் கோனது வரையாகம்,
மலங்க வெஞ்சமத் தடுசரம்
    துரந்தவெம் மடிகளும் வாரானால்,
இலங்கு வெங்கதி ரிளமதி
    யதனொடும் விடைமணி யடும்,ஆயன்
விலங்கல் வேயின தோசையு
    மாயினி விளைவதொன் றறியேனே*
7
1695
முழுதிவ் வையகம் முறைகெட
    மறைதலும் முனிவனும் முனிவெய்தி,
மழுவி னால்மன்னர் ஆருயிர்
    வவ்விய மைந்தனும் வாரானால்,
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய
    பேடையை யடங்கவஞ் சிறைகோலி,
தழுவு நள்ளிருள் தனிமையிற்
    கடியதோர் கொடுவினை யறியேனே*
8
1696
கனஞ்செய் மாமதிள் கணபுரத்
    தவனொடும் கனவினி லவன்தந்த,
மனஞ்செ யின்பம்வந் துள்புக
    வெள்கியென் வளைநெக இருந்தேனை,
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி
    ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும்,
அனந்த லன்றிலின் அரிகுரல்
    பாவியே னாவியை யடுகின்றதே*
9
1697
வார்கொள் மென்முலை மடந்தையர்
    தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,
ஆர்வத் தாலவர் புரம்பிய
    புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த,
கார்கொள் பைம்பொழில் மங்கையர்
    காவலன் கலிகன்றி யொலிவல்லார்,
ஏர்கொள் வைகுந்த மாநகர்
    புக்கிமை யவரொடும் கூடுவரே*#
10

மேலே செல்க

6. தொண்டீர்
திருக்கண்ணபுரம் - 6
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1698
தொண்டீர்* உய்யும் வகைகண்டேன்
    துளங்கா அரக்கர் துளங்க,முன்
திண்டோள் நிமிரச் சிலைவளையச்
    சிறிதே முனிந்த திருமார்பன்,
வண்டார் கூந்தல் மலர்மங்கை
    வடிக்கண் மடந்தை மாநோக்கம்
கண்டாள், கண்டு கொண்டுகந்த
    கண்ண புரம்நாம் தொழுதுமே.#
1
1699
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப்
    பொன்ற அன்று புள்ளூர்ந்து,
பெருந்தோள் மாலி தலைபுரளப்
    பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை,
இருந்தார் தம்மை யுடன்கொண்டங்
    கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப,
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
2
1700
வல்லி யிடையாள் பொருட்டாக
    மதிள்நீ ரிலங்கை யார்கோவை,
அல்லல் செய்து வெஞ்சமத்துள்
    ஆற்றல் மிகுந்த ஆற்றலான்,
வல்லாள் அரக்கர் குலப்பாவை
    வாட முனிதன் வேள்வியை,
கல்விச் சிலையால் காத்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
3
1701
மல்லை முந்நீ ரதர்பட
    வரிவெஞ் சிலைகால் வளைவித்து,
கொல்லை விலங்கு பணிசெய்யக்
    கொடியோன் இலங்கை புகலுற்று,
தொல்லை மரங்கள் புகப்பெய்து
    துவலை நிமிர்ந்து வானணவ,
கல்லால் கடலை யடைத்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
4
1702
ஆமை யாகி அரியாகி
    அன்ன மாகி, அந்தணர்தம்
ஓம மாகி ஊழியாய்
    உலகு சூழந்த நெடும்புணரி,
சேம மதிள்சூ ழிலங்கைக்கோன்
    சிரமமும் கரமும் துணித்து,முன்
காமற் பயந்தான் கருதுமூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
5
1703
வருந்தா திருநீ மடநெஞ்சே
    நம்மேல் வினைகள் வாரா,முன்
திருந்தா அரக்கர் தென்னிலங்கை
    செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள்,
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து
    பின்னை மணாள னாகி,முன்
கருந்தாள் களிறொன் றொசித்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
6
1704
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய்
    முதலை தன்னால் அடர்ப்புண்டு,
கொலையார் வேழம் நடுக்குற்றுக்
    குலைய அதனுக் கருள்புரிந்தான்,
அலைநீ ரிலங்கைத் தசக்கிரிவற்
    கிளையோற் கரசை யருளி,முன்
கலைமாச் சிலையால் எய்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
7
1705
மாலாய் மனமே* அருந்துயரில்
    வருந்தா திருநீ, வலிமிக்க
காலார் மருதும் காய்சினத்த
    கழுதும் கதமாக் கழுதையும்,
மாலார் விடையும் மதகரியும்
    மல்லர் உயிரும் மடிவித்து,
காலால் சகடம் பாய்ந்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
8
1706
குன்றால் மாரி பழுதாக்கிக்
    கொடியே ரிடையாள் பொருட்டாக,
வன்தாள் விடையே ழன்றடர்த்த
    வானோர் பெருமான் மாமாயன்,
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த்
    திரிகால் சகடம் சினமழித்து,
கன்றால் விளங்கா யெறிந்தானூர்
    கண்ணபுரம் நாம் தொழுதுமே.
9
1707
கருமா முகில்தோய் நெடுமாடக்
    கண்ண புரத்தெம் அடிகளை,
திருமா மகளா லருள்மாரி
    செழுநீ ராலி வளநாடன்,
மருவார் புயல்கைக் கலிகன்றி
    மங்கை வேந்த னொலிவல்லார்,
இருமா நிலத்துக் கரசாகி
    இமையோர் இறைஞ்ச வாழ்வாரே.#
10

7. வியமுடை
திருக்கண்ணபுரம் - 7
கலி விருத்தம்
1708
வியமுடை விடையினம் உடைதர மடமகள்,
குயமிடை தடவரை யகலம துடையவர்,
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில்,
கயமிடை கணபுரம் அடிகள்தம் இடமே.#
1
1709
இணைமலி மருதினோ டெருதிற இகல்செய்து,
துணைமலி முலையவள் மணமிகு கலவியுள்,
மணமலி விழவினோ டடியவர் அளவிய,
கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே.
2
1710
புயலுறு வரைமழை பொழிதர மணநிரை,
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர்,
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல்,
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே.
3
1711
ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய்,
போதுசெய் தமரிய புரிதர்நல் விரைமலர்,
கோதிய மதுகரம் குலவிய மலர்மகள்,
காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே.
4
1712
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ,
அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்செய்து
விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ,
கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே.
5
1713
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில்,
தழுவிய உருவினர் திருமகள் மருவிய,
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண்,
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே.
6
1714
பரிதியோ டணிமதி பனிவரை திசைநிலம்,
எரிதியோ டெனவின இயல்வினர் செலவினர்,
சுருதியோ டருமறை முறைசொலு மடியவர்,
கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே.
7
1715
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு,
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர்,
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர்,
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே.
8
1716
புலமனு மலர்மிசை மலர்மக்ள புணரிய,
நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும்,
வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை,
கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே.
9
1717
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை,
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர்,
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு,
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே.#
10

8. வானோர் அளவும்
திருக்கண்ணபுரம் - 8
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1718
வானோ ரளவும் முதுமுந்நீர்
    வளர்ந்த காலம், வலியுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக்
    கொண்ட தண்டா மரைக்கண்ணன்,
ஆனா வுருவி லானாயன்,
    அவனை யம்மா விளைவயலுள்
கானார் புறவில் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.#
1
1719
மலங்கு விலங்கு நெடுவெள்ளம்
    மறுக அங்கோர் வரைநட்டு,
இலங்கு சோதி யாரமுதம்
    எய்து மளவோர் ஆமையாய்,
விலங்கல் திரியத் தடங்கடலுள்
    சுமந்து கிடந்த வித்தகனை,
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
2
1720
பாரார் அளவும் முதுமுந்நீர்
    பரந்த் காலம், வளைமருப்பில்
ஏரார் உருவத் தேனமாய்
    எடுத்த ஆற்ற லம்மானை,
கூரார் ஆதல் இரைகருதிக்
    குருகு பாயக் கயலிரியும்
காரார் புறவில் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
3
1721
உளைந்த அரியும் மானிடமும்
    உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து,
விளைந்த சீற்றம் விண்வெதும்ப
    வேற்றோன் அகலம் வெஞ்சமத்து,
பிளந்து வளைந்த வுகிரானைப்
    பெருந்தண் செந்நெற் குலைதடிந்து,
களஞ்செய் புறவில் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
4
1722
தொழுநீர் வடிவில் குறளுருவாய்
    வந்து தோன்றி மாவலிபால்,
முழுநீர் வையம் முன்கொண்ட
    மூவா வுருவி னம்மானை,
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப
    ஒருபால் முல்லை முகையோடும்,
கழுநீர் மலரும் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
5
1723
வடிவாய் மழுவே படையாக
    வந்து தோன்றி மூவெழுகால்,
படியார் அரசு களைகட்ட
    பாழி யானை யம்மானை,
குடியா வண்டு கொண்டுண்ணக்
    கோல நீலம் மட்டுகுக்கும்,
கடியார் புறவில் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
6
1724
வைய மெல்லா முடன்வணங்க
    வணங்கா மன்ன னாய்த்தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை
    குடிகொண் டோட வெஞ்சமத்து,
செய்த வெம்போர் நம்பரனைச்
    செழுந்தண் கானல் மணநாறும்,
கைதை வேலிக் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
7
1725
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்
    ஒருபால் தோன்றத் தான்தோன்றி,
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்
    விண்பால் செல்ல வெஞ்சமத்து,
செற்ற கொற்றத் தொழிலானைச்
    செந்தீ மூன்றும் இல்லிருப்ப,
கற்ற மறையோர் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
8
1726
துவரிக் கனிவாய் நிலமங்கை
    துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள்,
இவரித் தரசர் தடுமாற
    இருள்நாள் பிறந்த அம்மானை,
உவரி யோதம் முத்துந்த
    ஒருபா லொருபா லொண்செந்நெல்,
கவரி வீசும் கண்ணபுரத்
    தடியேன் கண்டு கொண்டேனே.
9
1727
மீனோ டாமை கேழலரி
    குறளாய் முன்னு மிராமனாய்த்
தானாய், பின்னு மிராமனாய்த்
    தாமோ தரனாய் கற்கியும்
ஆனான் றன்னை, கண்ணபுரத்
    தடியன் கலிய னொலிசெய்த,
தேனா ரின்சொல் தமிழ்மாலை
    செப்பப் பாவம் நில்லாவே.#
10

9. கைம்மானம்
திருக்கண்ணபுரம் - 9
தரவு கொச்சகக் கலிப்பா
1728
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை,
மைம்மான மணியை யணிகொள் மரதகத்தை,
எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள்
அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே.#
1
1729
தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார்,
வருமானம் தவிர்க்கும் மணியை அணியுருவில்,
திருமாலை யம்மாயை யமுதத்தைக் கடற்கிடந்த
பெருமானை, அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே.
2
1730
விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற,
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி,
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன்
றுடையானுக்கு, அடியே னொருவர்க் குரியேனோ?#
3
1731
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை,என்னுள்
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை,
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த,
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.#
4
1732
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை,
எந்தாய்* போயறியாய் இதுவே யமையாதோ,
கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா, உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே.
5
1733
எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,
அஞ்சேலென் றடியேனை யாட்கொள்ள வல்லானை,
நெஞ்சே* நீநினையா திறைப்பொழுதும் இருத்திகண்டாய்,
மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே.
6
1734
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு,
உற்றானாய் வளர்த்தென் னுயிராகி நின்றானை,
முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை,
எத்தால் யான்மறக்கே னிதுசொல்லேன் ஏழைநெஞ்சே*
7
1735
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே,
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை,
வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன், பெற்றதும் பிறவாமை பெற்றேனே.
8
1736
கண்ணர் கண்ணபுரம் கடிகை கடிகமழும்,
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள்,
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை,
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ*#
9
1737
செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன்,
கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை,
இருநீ ரின்தமிழின்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர்,
வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே.#
10

10. வண்டார்
திருக்கண்ணபுரம் - 10
தரவு கொச்சகக் கலிப்பா
1738
வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம்
உண்டானே, உன்னை யகந்துகந் துன்றனக்கே
தொண்டானேற்கு, என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம்
கண்டானே, கண்ண புரத்துறை யம்மானே*#
1
1739
பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும்,
ஒருதாரா நின்று ளொடுக்கிய நின்னையல்லால்,
வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும்
கருதேன்நான், கண்ண புரத்துறை யம்மானே*
2
1740
மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ
டுற்றிலேன், உற்றது முன்னடி யார்க்கடிமை,
மற்றெல்லாம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்
கற்று,நான் கண்ண புரத்துறை யம்மானே*#
3
1741
பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல்,
உண்ணநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான்,
மண்ணாளா* வாள்நெடுங் கண்ணி மதுமலராள்
கண்ணாளா, கண்ண புரத்துறை யம்மானே*
4
1742
பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்,
மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்
உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்,
கற்றார்சேர் கண்ண புரத்துறை யம்மானே*
5
1743
ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை,
பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது,
சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமைநீ,
காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே*
6
1744
வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல்,
துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே,
வள்ளலே* உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல், கண்ண புரத்துறை யம்மானே*
7
1745
மாணாகி வைய மளந்ததுவும், வாளவுணன்
னாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன்,
பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும்
காணேன்நான், கண்ண புரத்துறை யம்மானே*
8
1746
நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக,
மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை,
பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை
காட்டினாய், கண்ண புரத்துறை யம்மானே*
9
1747
கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை,
கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை,
பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும்,
அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

ஒன்பதாம் பத்து
1. வங்கமா முந்நீர்
திருக்கண்ணங்குடி
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1748
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய
    வாளர வினணை மேவி,
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச்
    சாமமா மேனியென் தலைவன்,
அங்கமா றைந்து வேள்விநால் வேதம்
    அருங்கலை பயின்று,எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.#
1
1749
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக்
    கராம்கொளக் கலங்கி,உள் நினைந்து
துவளமேல் வந்து தோன்றிவன் முதலை
    துணிபடச் சுடுபடை துரந்தோன்,
குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர்
    கொய்ம்மலர் நெய்தலொண் கழனி,
திவளும்மா ளிகைசூழ் செழுமணிப் புரிசைத்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
2
1750
வாதைவந் தடர வானமும் நிலனும்
    மலைகளும் அலைகடல் குளிப்ப,
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி
    விரிபுனல் வரியகட் டொளித்தோன்,
போதலர் புன்னை மல்லிகை மௌவல்
    புதுவிரை மதுமல ரணைந்து
சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
3
1751
வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி
    வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலை
    தீர்த்தவன் பஞ்சவர் பாகன்,
ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத்
    துயர்கொடி யொளிவளர் மதியம்,
சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
4
1752
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய்
    மூவடி நீரொடும் கொண்டு,
பின்னுமே ழுலகும் ஈரடி யாகப்
    பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்,
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத்
    தலைபுன லிலைக்குடை நீழல்,
செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
5
1753
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால்
    மணிமுடி பொடிபடுத்து,உதிரக்
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம்
    தவிர்ந்தவன் குலைமலி கதலிக்,
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும்
    குளிர்தரு சூதம்மா தவியும்,
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
6
1754
வானுளா ரவரை வலிமையால் நலியும்
    மறிகடல் இலங்கையார் கோனை,
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப்
    பருமுடி யுதிரவில் வளைத்தோன்,
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக்
    கணமுகில் முரசநின் றதிர,
தேனுலா வரிவண் டின்னிசை முரலும்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
7
1755
அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை
    அஞ்சிடா தேயிட அதற்குப்
பெரியமா மேனி யண்டமூ டுருவப்
    பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன்,
வரையின்மா மணியும் மரகதத் திரளும்
    வயிரமும் வெதிருதிர் முத்தும்,
திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
8
1756
பன்னிய பாரம் பார்மகட் கொழியப்
    பாரத மாபெரும் போரில்,
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர்
    மைத்துனர்க் குய்த்தமா மாயன்,
துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும்
    சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,
தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்
    திருக்கண்ணங் குடியுள்நின் றானே.
9
1757
கலையுலா அல்குல் காரிகை திறத்துக்
    கடல்பெரும் படையொடும் சென்று,
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற
    திருக்கண்ணங் குடியுள்நின் றானை,
மலைகுலா மாட மங்கையர் தலைவன்
    மானவேல் கலியன்வா யொலிகள்,
உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும்
    வல்லவர்க் கில்லைநல் குரவே.#
10

2. பொன்னிவர் மேனி
திருநாகை (நாகப்பட்டினம்)
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1758
பொன்னிவர் மேனி மரக தத்தின்
    பொங்கிளஞ் சோதி யகலத்தாரம்
மின்,இவர் வாயில்நல் வேத மோதும்
    வேதியர் வானவ ராவர்தோழீ,
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி
    ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன்
    அச்சோ ஒருவர் அழகியவா*#
1
1759
தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும்
    சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த,
சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன்
    செஞ்சுட ராழியும் சங்குமேந்தி,
பாடக மெல்லடி யார்வ ணங்கப்
    பன்மணி முத்தொடி லங்குசோதி,
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும்
    அச்சோ ஒருவர் அழகியவா*
2
1760
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த
    மெய்ய மணாளர்இவ் வையமெல்லாம்,
தாயின நாயக ராவர் தோழி*
    தாமரைக் கண்கள் இருந்தவாறு,
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச்
    செவ்விய வாகி மலர்ந்தசோதி,
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும்
    அச்சோ ஒருவர் அழகியவா*
3
1761
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல்
    கையன ஆழியும் சங்கும்ஏந்தி,
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார்
    நாகரி கர்பெரி துமிளையர்,
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம்
    தேவ ரிவர துருவம்சொல்லில்,
அம்பவ ளத்திர ளேயு மொப்பர்
    அச்சோ ஒருவர் அழகியவா*
4
1762
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
    கோவல ரேயொப்பர் குன்றமன்ன,
பாழியும் தோளுமோர் நான்கு டையர்
    பண்டிவர் தம்மையும் கண்டறியோம்,
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்
    மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
    அச்சோ ஒருவர் அழகியவா*
5
1763
வெஞ்சின வேழம் மருப்பொ சித்த
    வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை,
தஞ்சுடை யாளர்கொல் யான றியேன்
    தாமரைக் கண்க ளிருந்தவாறு,
கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த
    காளையா ரவர்கண் டார்வணங்கும்,
அஞ்சன மாமலை யேயு மொப்பர்
    அச்சோ ஒருவர் அழகியவா*
6
1764
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும்
    பேரரு ளாளர்கொல்? யானறியேன்,
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழி*
    பண்டிவர் தம்மையும் கண்டறியோம்,
அணிகெழு தாமரை யன்ன கண்ணும்
    அங்கையும் பங்கய மேனிவானத்து,
அணிகெழு மாமுகி லேயு மொப்பர்
    அச்சோ ஒருவர் அழகியவா*
7
1765
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட
    மாலிருஞ் சோலைம ணாளர்வந்து,என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்
    நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்,
மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த
    மாமுகில் போன்றுளர் வந்துகாணீர்,
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார்
    அச்சோ ஒருவர் அழகியவா*
8
1766
எண்டிசை யுமெறி நீர்க்க டலும்
    ஏழுல குமுட னேவிழுங்கி,
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும்
    மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்,
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர்
    கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும்,
அண்டத் தமரர் பணிய நின்றார்
    அச்சோ ஒருவர் அழகியவா*
9
1767
அன்னமும் கேழலும் மீனு மாய
    ஆதியை நாகை யழகியாரை,
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன்
    காமரு சீர்க்கலி கன்றி,குன்றா
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை
    ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார்,
மன்னவ ராயுல காண்டு மீண்டும்
    வானவ ராய்மகிழ் வெய்துவரே.#
10

3. தன்னை நைவிக்கிலேன்
திருப்புல்லாணி - 1
கலி நிலைத்துறை
1768
தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு,
பொன்னை நைவிக்கு மப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய்,
என்னைநை வித்தெழில் கொண்டகன் றபெரு மானிடம்,
புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே.#
1
1769
உருகி நெஞ்சே* நினைந்திங் கிருந்தேன்? தொழுதுமெழு,
முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள்,
பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம்,
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே.
2
1770
ஏது செய்தால் மறக்கேன் மனமே* தொழுதுமெழு,
தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து,பின்
பேதை நின்னைப் பிரியே னினியென் றகன்றானிடம்,
போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே.
3
1771
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு,முன்
நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன்
மங்கை நல்லாய்* தொழுது மெழுபோ யவன்மன்னுமூர்,
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே.
4
1772
உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு,
துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து,பின்
தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம்,
புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே.
5
1773
எள்கி நெஞ்சே* நினைந்திங் கிருந்தென்? தொழுதுமெழு,
வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம்,
கள்ளவி ழும்மலர்க் காவியும் தூமடல் கைதையும்,
புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே.
6
1774
பரவி நெஞ்சே* தொழுதும் எழுபோ யவன்பாலமாய்,
இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்?
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு,வெண்திரை
புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே.
7
1775
அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய்,
சலம தாகித் தகவொன் றிலர்தாம் தொழுதுமெழு,
உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு,இசை
புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே.
8
1776
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால், ஒளிமாமலர்ப்
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின்,
ஆது தாரா னெனிலும் தரும்,அன் றியுமன்பராய்ப்
போதும் மாதே* தொழுதும் அவன்மன்னு புல்லாணியே.
9
1777
இலங்கு முத்தம் பவளக் கொழுந்து மெழில்தாமரை,
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல்
கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை,
வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே.#
10

4. காவார்
திருப்புல்லாணி - 2
தரவு கொச்சகக் கலிப்பா
1778
காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்,
ஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ,
பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன்,
பாவாய்* இதுநமக்கோர் பான்மையே யாகாதே.#
1
1779
முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த,
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன்,
பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள்* புல்லாணி
அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே.
2
1780
வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம்,
செவ்வி யறியாது நிற்குங்கொல், நித்திலங்கள்
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன்,
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே.
3
1781
பரிய இரணியன தாகம் அணியுகிரால்,
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு,
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன்,
அரிமலர்க்கண் ணீர்த்ததும்ப அந்துகிலும் நில்லாவே.
4
1782
வில்லால் இலங்கை மலங்கச் சரம்துரந்த,
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும்,
எல்லாரு மென்றன்னi யேசிலும் பேசிடினும்,
புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே.
5
1783
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான்,
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால்,
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே.
6
1784
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல்,
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ,
புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன்,
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே.
7
1785
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு,
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன்,
தேம்பல் இளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே.
8
1786
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்,
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு,
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்,
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே.
9
1787
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை,
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார்,
மன்னவராய் மண்ணாண்டு வானெடு முன்னுவரே.#
10

5. தவள இளம்பிறை
திருக்குறுங்குடி - 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1788
தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த்
    தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்
துவள,என் னெஞ்சகம் சோரவீரும்
    சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்,
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார்
    என்னல மைந்துமுன் கொண்டுபோன
குவளை மலர்நிற வண்ணர்மன்னு
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.#
1
1789
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த
    தண்மதி யினிள வாடையின்னே,
ஊதை திரிதந் துழறியுண்ண
    ஓரிர வுமுறங் கேன்,உறங்கும்
பேதையர் பேதைமை யாலிருந்து
    பேசிலும் பேசுக பெய்வளையார்,
கோதை நறுமலர் மங்கைமார்வன்
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
2
1790
காலையும் மாலையொத் துண்டுகங்குல்
    நாழிகை யூழியில் நீண்டுலாவும்,
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும்
    பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி,
மாலவன் மாமணி வண்ணன்மாயம்
    மற்று முளவவை வந்திடாமுன்,
கோல மயில்பயி லும்புறவில்
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
3
1791
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து
    காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும்,
ஒமணி யோசையென் னுள்ளந்தள்ள
    ஓரிர வுமுறங் காதிருப்பேன்,
பெருமணி வானவ ருச்சிவைத்த
    பேரரு ளாளன் பெருமைபேசி,
குருமணி நீர்கொழிக் கும்புறவில்
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
4
1792
திண்டிமி லேற்றின் மணியும்ஆயன்
    தீங்குழ லோசையும் தென்றலோடு,
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற
    கோல இளம்பிறை யோடுகூடி,
பண்டைய அல்ல இவைநமக்குப்
    பாவியே னாவியை வாட்டஞ்செய்யும்,
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
5
1793
எல்லியும் நன்பக லுமிருந்தே
    ஏசிலும் ஏசுக ஏந்திழையார்,
நல்லர் அவர்திறம் நாமறியோம்,
    நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை,
வல்லன சொல்லி மகிழ்வரேனும்
    மாமணி வண்ணரை நாம்மறவோம்,
கொல்லை வளரிள முல்லைபுக்கு
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
6
1794
செங்க ணெடிய கரியமேனித்
    தேவ ரொருவரிங் கேபுகுந்து,என்
அங்கம் மெலிய வளைகழல
    ‘ஆதுகொ லோ?’என்று சொன்னபின்னை,
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ
    டாடு மதனை யறியமாட்டேன்,
கொங்கலர் தண்பணை சூழ்புறவில்
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
7
1795
கேவல மன்று கடலினோசை
    கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து,என்
ஆவி யளவும் அணைந்துநிற்கும்
    அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு,
ஏவலங் காட்டி இவனொருவன்
    இப்படி யேபுகுந் தெய்திடாமுன்,
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
8
1796
சோத்தென நின்று தொழவிரங்கான்
    தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும்
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான்
    போயின வூரறி யேன்,என்கொங்கை
மூத்திடு கின்றன மற்றவன்றன்
    மொய்யக லம்அணை யாதுவாளா,
கூத்த னிமையவர் கோன்விரும்பும்
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.
9
1797
செற்றவன் தென்னிலங் கைமலங்கத்
    தேவர்பி ரான்திரு மாமகளைப்
பெற்றும்,என் நெஞ்சகம் கோயில்கொண்ட
    பேரரு ளாளன் பெருமைபேசக்
கற்றவன், காமரு சீர்க்கலியன்
    கண்ணகத் தும்மனத் துமகலாக்
கொற்றவன், முற்றுல காளிநின்ற
    குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.#
10

மேலே செல்க

6. அக்கும் புலியின்
திருக்குறுங்குடி - 2
கலி நிலைத்துறை
1798
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர்,
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும்
தக்க மரத்தின் தாழ்சினை யேறி, தாய்வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே.#
1
1799
துங்கார் அரவத் திரைவந் துலவத் தொடுகடலுள்,
பொங்கார் அரவில் துயிலும் புனிதர் ஊர்போலும்,
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும்,
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே.
2
1800
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்,
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர்,
ஏழைச் செங்கால் இன்ணை நாரைக் கிரைதேடி,
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே.
3
1801
சிரமுன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று, அரக்கன்
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும்,
இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம்
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே.
4
1802
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர்
ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும்,
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான்,
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே.
5
1803
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி,
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள்,
மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம்,வானில்
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே.
6
1804
வல்லிச் சிறுநுண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற,
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்,
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான்,
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே.
7
1805
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள்,
ஆரா அன்போ டெம்பெரு மானூர் அடைமின்கள்,
தாரா ஆரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும்,
கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே.
8
1806
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி,
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள்,
என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட,
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே.
9
1807
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்,
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல்,
கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே.#
10

7. தந்தைதாய்
திருவல்லவாழ்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1808
தந்தைதாய் மக்களே சுற்றமென்
    றுற்றவர் பற்றி நின்ற,
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ
    பழியெனக் கருதி னாயேல்,
அந்தமா யாதியாய் ஆதிக்கும்
    ஆதியாய் ஆய னாய,
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*#
1
1809
மின்னுமா வல்லியும் வஞ்சியும்
    வென்றநுண் ணிடைநு டங்கும்,
அன்னமென் னடையினார் கலவியை
    அருவருத் தஞ்சி னாயேல்,
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்
    காகிமுன் தூது சென்ற
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
2
1810
பூணுலா மென்முலைப் பாவைமார்
    பொய்யினை மெய்யி தென்று,
பேணுவார் பேசுமப் பேச்சைநீ
    பிழையெனக் கருதி னாயேல்,
நீணிலா வெண்குடை வாணனார்
    வேள்வியில் மண்ணி ரந்த,
மாணியார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
3
1811
‘பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார்
    பணமுலை அணைதும் நாம்,’என்று,
எண்ணுவார் எண்மை தொழித்துநீ
    பிழைத்துய்யக் கருதி னாயேல்,
விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங்
    கடத்துளார், வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
4
1812
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய்
    வாரணம் சூழ வாழ்ந்தார்,
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ
    துயரெனக் கருதி னாயேல்,
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய்
    வைத்தவள் நாளை யுண்ட,
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
5
1813
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி
    நரம்புதோல் குரம்பை யுள்புக்கு,
அருவிநோய் செய்துநின் றைவர்தாம்
    வாழ்வதற் கஞ்சி னாயேல்,
திருவினார் வேதநான் கைந்துநீ
    வேள்வியோ டங்க மாறும்,
மருவினார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
6
1814
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை
    மெய்யெனக் கொண்டு, வாளா
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ
    பிழையெனக் கருதி னாயேல்,
தீயலா வெங்கதிர்த் திங்களாய்
    மங்குல்வா னாகி நின்ற,
மாயனார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
7
1815
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம்
    காலிவை மயங்கி நின்ற,
அஞ்சுசேர் ஆக்கையை அரணமன்
    றென்றுய்யக் கருதி னாயேல்,
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப்
    பாவையும் தாமும், நாளும்
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
8
1816
வெள்ளியார் பிண்டியார் போதியார்
    என்றிவர் ஓது கின்ற,
கள்ளநூல் தன்னையும் கருமமன்
    றென்றுய்யக் கருதி னாயேல்,
தெள்ளியார் கைதொழும் தேவனார்
    மாமுநீர் அமுது தந்த,
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா
    வல்லையாய் மருவு நெஞ்சே*
9
1817
மறைவலார் குறைவிலார் உறையுமூர்
    வல்லவாழ் அடிகள் தம்மை,
சிறைகுலா வண்டறை சோலைசூழ்
    கோலநீள் ஆலி நாடன்,
கறையுலா வேல்வல்ல கலியன்வாய்
    ஒலியிவை கற்று வல்லார்,
இறைவராய் இருநிலம் காவல்பூண்
    டின்பநன் கெய்து வாரே.#
10

8. முந்துற
திருமாலிருஞ்சோலை - 1
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1818
முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார்
    கலவியை விடுதடு மாறல்,
அந்தர மேழும் அலைகட லேழும்
    ஆயவெம் மடிகள்தம் கோயில்,
சந்தொடு மணியும் அணிமயில் தழையும்
    தழுவிவந் தருவிகள் நிரந்து,
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*#
1
1819
'இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி
    எழுமினோ தொழுதும்'என்று, இமையோர்
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற
    சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,
விண்டலர் தூளி வேய்வளர் புறவில்
    விரைமலர்க் குறிஞ்சியின்ற நறுந்தேன்,
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
2
1820
பிணிவளர் ஆக்கை நீங்கநின் றேத்தப்
    பெருநிலம் அருளின்முன் அருளி,
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும்
    அளந்தவெம் மடிகள்தம் கோயில்,
கணிவளர் வேங்கை நெடுநில மதனில்
    குறவர்தம் கவணிடைத் துரந்த,
மணிவளர் சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
3
1821
சூர்மையி லாய பேய்முலை சுவைத்துச்
    சுடுசரம் அடுசிலைத் துரந்து,
நீர்மையி லாத தாடகை மாள
    நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில்
    கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,
வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
4
1822
வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய
    மணிமுடி ஒருபதும் புரள,
அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட
    அமர்செய்த அடிகள்தம் கோயில்,
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப்
    பிரசம்வந் திழிதர, பெருந்தேன்
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
5
1823
விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று
    விளங்கனிக் கிளங்கன்று விசிறி,
குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த
    கூத்தவெம் மடிகள்தம் கோயில்,
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத்
    தடவரைக் களிறென்று முனிந்து,
மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
6
1824
தேனுகன் ஆவி போயுக அங்கோர்
    செழுந்திரள் பனங்கனி யுதிர,
தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர்
    எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
வானகச் சோலை மரதகச் சாயல்
    மாமணிக் கல்லதர் நிறைந்து,
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
7
1825
புதமிகு விசும்பில் புணரிசென் றணவப்
    பொருகடல் அரவணைத் துயின்று,
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த
    பனிமுகில் வண்ணர்தம் கோயில்,
கதமிகு சினத்த கடதடக் களிற்றின்
    கவுள்வழிக் களிவண்டு பருக,
மதமிகு சாரல் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
8
1826
புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள்
    ஒத்தன பேசவும் உகந்திட்டு,
எந்தைபெம் மானார் இமையவர் தலைவர்
    எண்ணிமுன் இடங்கொண்ட கோயில்,
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்
    தாழ்வரை மகளிர்கள் நாளும்,
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை
    வணங்குதும் வாமட நெஞ்சே*
9
1827
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை
    மாமணி வண்ணரை வணங்கும்,
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல்
    சூழ்வயல் ஆலிநன் னாடன்,
கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன்
    கலியன்வா யொலிசெய்த பனுவல்,
கொண்டிவை பாடும் தவமுடை யார்கள்
    ஆள்வரிக் குரைகட லூலகே.#
10

9. மூவரில்
திருமாலிருஞ்சோலை - 2
கட்டளைக் கலித்துறை
1828
மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து,
பூவல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த,
தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ*#
1
1829
புனைவளர் பூம்பொழி லார்பொன்னி சூழரங் கநகருள்
முனைவனை, மூவுல கும்படைத் தமுதல் மூர்த்திதன்னை,
சினைவளர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்றான்
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே*#
2
1830
உண்டுல கேழினை யும்ஒரு பாலகன் ஆலிலைமேல்,
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே*
3
1831
சிங்கம தாயவ ணன்திற லாகம்முன் கீண்டுகந்த,
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை,
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே*
4
1832
தானவன் வேள்விதன் னில்தனி யேகுற யாள்நிமிர்ந்து,
வானமும் மண்ணக மும்அளந் ததிரி விக்கிரமன்,
தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள்கொலோ*
5
1833
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான்,
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான்,
தேவமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ**#
6
1834
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ*
7
1835
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேன்முன்னின்று,
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே*#
8
1836
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை,
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை,
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற,
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே*#
9
1837
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற,
ஆடல் பறவை யனைஅணி யாயிழை காணுமென்று,
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே*#
10

10. எங்கள்
திருக்கோட்டியூர்
ஆசிரியத்துறை
1838
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு
    நாயகன்,ஏத் தடியவர்
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான்,
பொங்குதண் ணருவி புதம்செய்யப்
    பொன்களே சிதறு மிலங்கொளி,
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே.#
1
1839
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை
    இன்னகைத் துவர்வாய், நிலமகள்
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை
    மாலையோடு மணந்து,மாருதம்
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.
2
1840
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்
    விண்ணவர் தமக்கிறை, எமக்கு
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான்,
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக்
    கற்றைச் சந்தன முந்தி வந்தசை,
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.
3
1841
ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும்
    ஈசற் கிசைந்து, உடம்பிலோர்
கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான்,
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி
    இன்னிள வண்டு, நன்னறுந்
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.
4
1842
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன்
    விண்ணவர் கோன்ம துமலர்த்
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான்,
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி
    மாக மீதுயர்ந் தேறி, வானுயர்
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே.
5
1843
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம்
    செலவுய்த்து, மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்,
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க
    மாலுறை கின்றதிங்கென,
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.
6
1844
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக்
    கழிவென்று, மாமழை
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான்,
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை
    மணமும் அளைந்து,இளந்
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.
7
1845
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து,
    அடியேனை யாளுகந்து
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம்பெருமான்,
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின்
    கனியொடு மாங்கனி
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே.
8
1846
கோவை யின்தமிழ் பாடு வார்குடம்
    ஆடு வார்தட மாமலர்மிசை,
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர்,
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி
    ஆறங்கம் வல்லவர் தொழும்,
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே.
9
1847
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர்
    தலைவன் அணிபொழில்
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை,
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை
    இன்தழி ழால்நி னைந்த,இந்
நாறு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

பத்தாம் பத்து
1. ஒருநற் சுற்றம்
பலதிருப்பதிகள்
கலி விருத்தம்
1848
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள்,
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை,
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய்,
கருநெல் சூழ்கண்ண மங்கையுள் காண்டுமே.#
1
1849
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர்,
மின்னை, வேங்கடத் துச்சியிற் கண்டுபோய்,
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்-
றன்னை, யாம்சென்று காண்டும்தண் காவிலே.#
2
1850
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய,
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய்,
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்துபோய்,
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே.
3
1851
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய்,
அளப்பி லாரமு தையம ரர்க்கருள்
விளக்கி னை,சென்று வெள்ளறைக் காண்டுமே.
4
1852
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர்
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என்
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண்,
விடலை யைச்சென்ற காண்டும்மெய் யத்துளே.
5
1853
வானை ஆரமு தம்தந்த வள்ளலை,
தேனை, நீள்வயல் சேறையில் கண்டுபோய்,
ஆனை வாட்டி யருளும் அமரர்தம்
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே.
6
1854
கூந்த லார்மகிழ் கோவல னாய்,வெண்ணெய்
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய்,
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய,
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே.
7
1855
பத்த ராவியைப் பான்மதி யை,அணித்
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய்
முத்தி னைமணி யைமணி மாணிக்க
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே.
8
1856
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை,
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்,
நம்ப னைச்சென்று காண்டும்நா வாயுளே.
9
1857
பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனை,
கற்ற நூல்கலி கன்றி யுரைசெய்த,
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே.#
10

2. இரக்கமின்றி
இராமாவதாரத்தில் ஈடுபாடு - 1
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1858
இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை
    இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்,
பரக்க யாமின் றுரைத்தென் இராவணன்
    பட்ட னனினி யாவர்க்கு ரைக்கோம்*,
குரக்கு நாயகர் காள்*இளங் கோவே*
    கோல வல்வி லிராம பிரானே,
அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள்
    அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ*#
1
1859
பத்து நீள்முடி யும்வற் றிரட்டிப்
    பாழித் தோளும் படைத்தவன் செல்வம்,
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான்
    செய்வ தொன்றறி யாவடி யோங்கள்,
ஒத்த தோளிரண் டுமொரு முடியும்
    ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம்,
அத்த* எம்பெரு மான்*எம்மைக் கொல்லேல்
    அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
2
1860
தண்ட காரணி யம்புகுந் தன்று
    தைய லைத்தக விலியெங் கோமான்,
கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர்
    குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே,
பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப்
    பேசு கின்றதென்? தாசர தீ,உன்
அண்ட வாணர் உகப்பதே செய்தாய்
    அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
3
1861
எஞ்ச லில்இலங் கைக்கிறை யெங்கோன்-
    றன்னை முன்பணிந்து, எங்கள்கண் முகப்பே
நஞ்சு தானரக் கர்குடிக் கென்று
    நங்கை யையவன் தம்பியே சொன்னான்,
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம்
    வேரி வார்பொழில் மாமயி லன்ன,
அஞ்சி லோதியைக் கொண்டு நடமின்
    அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
4
1862
செம்பொன் நீள்முடி எங்கள் இராவணன்
    சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து,
வம்பு லாம்கடி காவில் சிறையா
    வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர்,
கும்ப னோடு நிகும்பனும் பட்டான்
    கூற்றம் மானிட மாய்வந்து தோன்றி,
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது
    அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
5
1863
ஓத மாகட லைக்கடந் தேறி
    உயர்கொள் மாக்கடி காவை யிறுத்து,
காதல் மக்களும் சுற்றமுங் கொன்று
    கடியி லங்கை மலங்க எரித்துத்
தூது வந்த குரங்குக்கே உங்கள்
    தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே,
ஆதர் நின்று படுகின்ற தந்தோ*
    அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
6
1864
தாழ மின்றமுந் நீதையஞ் ஞான்று
    தகைந்த தேகண்டு வஞ்சுநுண் மருங்குல்,
மாழை மான்மட நோக்கியை விட்டு
    வாழ்கி லாமதிடி யில்மனத் தானை,
ஏழை யையிலங் கைக்கிறை தன்னை
    எங்க ளையொழி யக்கொலை யவனை,
சூழு மாநினை மாமணி வண்ணா*
    சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
7
1865
மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா
    அங்க யற்கண்ணி னோர்கள் இருப்ப,
தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து
    தஞ்ச மேசில தாபத ரென்று,
புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த
    புன்மை யாளன்நெஞ் சில்புக எய்த,
அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற்
    கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
8
1866
புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில்
    பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின்,
சரங்க ளேகொடி தாயடு கின்ற
    சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம்,
இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே*
    இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா,
குரங்கு கட்கர சே*எம்மைக் கொல்லேல்*
    கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*
9
1867
அங்கவ் வானவர்க் காகுலம் தீர
    அணியி லங்கை அழித்தவன் றன்னை,
பொங்கு மாவல வன்கலி கன்றி
    புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில்
எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர்*
    இம்மை யேயிட ரில்லை, இறந்தால்
தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின்
    சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ*#
10

3. ஏத்துகின்றோம்
இராமாவதாரத்தில் ஈடுபாடு - 2
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1868
ஏத்து கின்றோம் நாத்த
    ழும்ப இராமன் திருநாமம்,
சோத்தம் நம்பீ* சுக்கி
    ரிவா* உம்மைத் தொழுகின்றோம்,
வார்த்தை பேசீர் எம்மை
    யுங்கள் வானரம் கொல்லாமே,
கூத்தர் போல ஆடு
    கின்றோம் குழமணி தூரமே.#
1
1869
‘எம்பி ரானே* என்னை
    யாள்வாய்*’ என்றென் றலற்றாதே,
அம்பின் வாய்ப்பட் டாற்ற
    கில்லா திந்திர சித்தழிந்தான்,
நம்பி அனுமா* சுக்கி
    ரிவா* அங்கத னே*நளனே,
கும்ப கர்ணன் பட்டுப்
    போனான் குழமணி தூரமே.
2
1870
ஞால மாளு முங்கள்
    கோமான் எங்கள் இராவணற்குக்
கால னாகி வந்த
    வாகண் டஞ்சிக் கருமுகில்போல்,
நீலன் வாழ்கசு டேணன்
    வாழ்க அங்கதன் வாழ்கவென்று,
கோல மாக ஆடு
    குன்றோம் குழமணி தூரமே.
3
1871
மணங்கள் நாறும் வார்குழ
    லார்கள் மாதர்க ளாதரத்தை,
புணர்ந்த சிந்தைப் புன்மை
    யாளன் பொன்ற வரிசிலையால்,
கணங்க ளுண்ண வாளி
    யாண்ட காவல னுக்கிளையோன்,
குணங்கள் பாடி யாடு
    கின்றோம் குழமணி தூரமே.
4
1872
வென்றி தந்தோம் மானம்
    வேண்டோம் தானம் எமக்காக,
இன்று தம்மி னெங்கள்
    வாணாள் எம்பெரு மான்தமர்காள்,
நின்று காணீர் கண்க
    ளார நீரெமைக் கொல்லாதே,
குன்று போல ஆடு
    கின்றோம் குழமணி தூரமே.
5
1873
கல்லின் முந்நீர் மாற்றி
    வந்து காவல் கடந்து,இலங்கை
அல்லல் செய்தா னுங்கள்
    கோமான் எம்மை அமர்க்களத்து,
வெல்ல கில்லா தஞ்சி
    னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா,
கொல்லா வேண்டா ஆடு
    கின்றோம் குழமணி தூரமே.
6
1874
மாற்ற மாவ தித்த
    னையே வம்மின் அரக்கருளீர்,
சீற்றம் நும்மேல் தீர
    வேண்டில் சேவகம் பேசாதே,
ஆற்றல் சான்ற தொல்பி
    றப்பில் அனுமனை வாழ்கவென்று,
கூற்ற மன்னார் காண
    ஆடீர் குழமணி தூரமே.
7
1875
கவள யானை பாய்புர
    வித்தே ரோட ரக்கரெல்லாம்
துவள, வென்ற வென்றி
    யாளன் றன்தமர் கொல்லாமே,
தவள மாடம் நீட
    யோத்தி காவலன் றன்சிறுவன்,
குவளை வண்ணன் காண
    ஆடீர் குழமணி தூரமே.
8
1876
ஏடொத் தேந்தும் நீளி
    லைவேல் எங்கள் இராவணனார்
ஓடிப் போனார், நாங்கள்
    எய்த்தோம் உய்வதோர் காரணத்தால்,
சூடிப் போந்தோம் உங்கள்
    கோமா னாணை தொடரேன்மின்,
கூடிக் கூடி யாடு
    கின்றோம் குழமணி தூரமே.
9
1877
வென்ற தொல்சீர்த் தென்னி
    லங்கை வெஞ்சமத்து, அன்றரக்கர்
குன்ற மன்னா ராடி
    உய்ந்த குழமணி தூரத்தை,
கன்றி நெய்ந்நீர் நின்ற
    வேற்கைக் கலிய னொலிமாலை,
ஒன்றும் ஒன்றும் ஐந்தும்
    மூன்றும் பாடிநின் றாடுமினே.#
10

4. சந்த மலர்க்குழல்
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 1
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1878
சந்த மலர்க்குழல் தாழத்
    தானுகந் தோடித் தனியே
வந்து,என் முலைத்தடந் தன்னை
    வாங்கிநின் வாயில் மடுத்து,
நந்தன் பெறப்பெற்ற நம்பீ*
    நானுகந் துண்ணும் அமுதே,
எந்தை பெருமானே* உண்ணாய்
    என்னம்மம் சேமமுண் ணாயே.#
1
1879
வங்க மறிகடல் வண்ணா*
    மாமுகி லேயொக்கும் நம்பீ,
செங்க ணெடிய திருவே*
    செங்கம லம்புரை வாயா,
கொங்கை சுரந்திட வுன்னைக்
    கூவியும் காணாதி ருந்தேன்,
எங்கிருந் தாயர்க ளோடும்
    என்விளை யாடுகின் றாயே?
2
1880
திருவில் பொலிந்த எழிலார்
    ஆயர்தம் பிள்ளைக ளோடு,
தெருவில் திளைக்கின்ற நம்பீ*
    செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,
உருகியென் கொங்கையின் தீம்பால்
    ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
மருவிக் குடங்கா லிருந்து
    வாய்முலை யுண்ணநீ வாராய்.
3
1881
மக்கள் பெறுதவம் போலும்
    வையத்து வாழும் மடவார்
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும்
    முதல்வா* மதக்களி றன்னாய்,
செக்கர் இளம்பிறை தன்னை
    வாங்கிநின் கையில் தருவன்,
ஒக்கலை மேலிருந் தம்மம்
    உகந்தினி துண்ணநீ வாராய்.
4
1882
மைத்த கருங்குஞ்சி மைந்தா*
    மாமரு தூடு நடந்தாய்,
வித்தக னே*விரை யாதே
    வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,
இத்தனை போதன்றி யென்றன்
    கொங்கை சுரந்திருக்க கில்லா,
உத்தம னே*அம்மம் உண்ணாய்
    உலகளந் தாய்*அம்மம் உண்ணாய்.
5
1883
பிள்ளைகள் செய்வன செய்யாய்
    பேசின் பெரிதும் வலியை,
கள்ளம் மனத்தி லுடையை
    காணவே தீமைகள் செய்தி,
உள்ள முருகியென் கொங்கை
    ஓட்டந்து பாய்ந்திடு கின்ற,
பள்ளிக் குறிப்புச்செய் யாதே
    பாலமு துண்ணநீ வாராய்.
6
1884
தன்மக னாகவன் பேய்ச்சி
    தான்முலை யுண்ணக் கொடுக்க,
வன்மக னாயவள் ஆவி
    வாங்கி முலையுண்ட நம்பி,
நன்மகள் ஆய்மக ளோடு
    நானில மங்கை மணாளா,
என்மக னே*அம்ம முண்ணாய்
    என்னம்மம் சேமமுண் ணாயே.
7
1885
உந்தம் அடிகள் முனிவர்
    உன்னைநான் என்கையிற் கோலால்,
நொந்திட மோதவுங் கில்லேன்
    நுங்கள்தம் ஆநிலை யெல்லாம்,
வந்து புகுதரும் போது
    வானிடைத் தெய்வங்கள் காண,
அந்தியம் போதங்கு நில்லேல்
    ஆழியங் கையனே* வாராய்.
8
1886
பெற்றத் தலைவனெங் கோமான்
    பேரரு ளாளன் மதலாய்,
சுற்றக் குழாத்திளங் கோவே*
    தோன்றிய தொல்புக ழாளா,
கற்றினந் தோறும் மறித்துக்
    கானம் திரிந்த களிறே,
எற்றுக்கென் அம்மமுண் ணாதே
    எம்பெரு மானிருந் தாயே?
9
1887
இம்மை யிடர்கெட வேண்டி
    ஏந்தெழில் தோள்கலி கன்றி,
செம்மைப் பனுவல்நூல் கொண்டு
    செங்க ணெடியவன் றன்னை,
‘அம்மமுண்’ என்றுரைக் கின்ற
    பாடி லிவையைந்து மைந்தும்,
மெய்ம்மை மனத்துவைத் தேத்த
    விண்ணவ ராகலு மாமே.#
10

5. பூங்கோதை
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 2
கலித்தாழிசை
1888
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணெய் புக்குண்ண,
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு,
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும்,
ஓங்கோத வண்ணனே* சப்பாணி
    ஒளிமணி வண்ணனே* சப்பாணி.#
1
1889
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண்-
டேயெம் பிராக்கள், இருநிலத் தெங்கள்தம்,
ஆயர் அழக அடிகள், அரவிந்த
வாயவ னே*கொட்டாய் சப்பாணி
    மால்வண்ண னே*கொட்டாய் சப்பாணி.
2
1890
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு,
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால்,
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிந்த,
தாமோ தரா*கொட்டாய் சப்பாணி
    தாமரைக் கண்ணனே* சப்பாணி.
3
1891
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து,
உற்றா ரொருவரு மின்றி யுலகினில்,
மற்றாரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட
கற்றாய னே*கொட்டாய் சப்பாணி
    கார்வண்ண னே*கொட்டாய் சப்பாணி.
4
1892
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர,
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர், அவர்க்காகச்
சாற்றியோ ராயிரம் சப்பாணி
    தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி.
5
1893
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு
(*)நானவல் அப்பம் தருவன், கருவிளைப்
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே,
கோவல னே*கொட்டாய் சப்பாணி
    கார்வண்ண னே*கொட்டாய் சப்பாணி.

(*) நான்பல என்றும் பாடம்.
6
1894
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து,
துள்ளி விளையாடித் தூங்குறி வெண்ணெயை,
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும்,
பிள்ளைப்பி ரான்*கொட்டாய் சப்பாணி
    பேய்முலை யுண்டானே* சப்பாணி.
7
1895
யாயும் பிறரும் அறியாத யாமத்து,
மாய வலவைப்பெண் வந்து முலைதர,
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட,
வாயவ னே*கொட்டாய் சப்பாணி
    மால்வண்ண னே*கொட்டாய் சப்பாணி.
8
1896
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை,
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை,
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட,
வள்ளலே* கொட்டாய் சப்பாணி
    மால்வண்ண னே*கொட்டாய் சப்பாணி.
9
1897
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன்,
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட
சீராளா, செந்தா மரைக்கண்ணா* தண்டுழாய்த்
தாராளா, கொட்டாய் சப்பாணி
    தடமார்வா* கொட்டாய் சப்பாணி.#
10

மேலே செல்க

6. எங்கானும்
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 3
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1898
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே?
    நரநா ரணனா யுலகத் தறநூல்,
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான்
    அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும்,
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும்
    நெருக்கிப் புகப்பொன் மிடறத் தனைபோது,
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.#
1
1899
குன்றொன்று மத்தா அரவம் அளவிக்
    குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வன்கூன் நிமிர
    நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ்
    மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
2
1900
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள்
    உலப்பில் வலியால் அவர்பால், வயிரம்
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ
    அவர்நா ளொழித்த பெருமான் முனநாள்,
வளைந்திட்ட வில்லாரி வல்வா ளெயிற்று
    மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால்,
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
3
1901
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான்
    சரணாய் முரணா யவனை உகிரால்
பிளந்திட் டமரர்க் கருள்செய் துகந்த
    பெருமான் திருமால் விரிநீ ருலகை,
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா ருலகை,
    மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய்,
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
4
1902
நீண்டான் குறளாய் நெடுவா னளவும்
    அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,
தீண்டா மைநினைந் திமையோ ரளவும்
    செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,
‘வேண்டா மைநமன் றமரென் தமரை
    வினவப் பெறுவார் அலர்’என்று, உலகேழ்
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
5
1903
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப்
    பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
ஒழித்திட்ட டவரைத் தனக்காக்க வல்ல
    பெருமான் திருமா லதுவன் றியும்முன்,
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன்
    சினத்தோள் அவையா யிரமும் மழுவால்
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
6
1904
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள்
    பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம்,
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத்
    தெளியா அரக்கர் திறல்போய் அவிய,
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா
    விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை
அடைத்திட டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
7
1905
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ
    டுடனாய வில்லென்ன வல்லே யதனை,
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட்
    டியங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர்,
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன்
    செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய,
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
8
1906
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத்
    தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய்
    இருகூறு செய்த பெருமான் முனநாள்,
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து
    மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு,
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால்
    அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே.
9
1907
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான்
    வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய்,
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ
    டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல்,
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன்
    கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார்,
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி
    இமையோர்க்கு மப்பால் செலவெய் துவாரே.#
10

7. மானமுடைத்து
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 4
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1908
மான முடைத்துங்க ளாயர் குலமத
    னால்பிறர் மக்கள் தம்மை
ஊன முடையன செய்யப் பெறாயென்
    றிரப்ப னுரப்ப கில்லேன்
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன்
    நங்கைகாள்* நானென் செய்கேன்?
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத்
    தயிர்கடை கின்றான் போலும்*#
1
1909
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப்
    போகின்றேன் கண்டே போனேன்,
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால்
    மற்றுவந் தாரு மில்லை,
மேலை யகத்துநங் காய்*வந்து காண்மின்கள்
    வெண்ணெ யேயன்று, இருந்த
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன்
    என்செய்கேன் என்செய் கேனோ*
2
1910
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள்*உறி
    மேலைத் தடாநி றைந்த,
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை
    வாரி விழுங்கி யிட்டு,
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள்
    கையெல் லாம்நெய், வயிறு
பிள்ளை பரமன்இவ் வேழுல கும்கொள்ளும்
    பேதையேன் என்செய் கேனோ*
3
1911
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற
    வளைவண்ண நன்மா மேனி,
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது
    அவனி வைசெய் தறியான்,
பொந்நம்பி புள்ளுவன் களவம் பொதியறை
    போகின்ற வாதவழ்ந் திட்டு,
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை
    என்செய்கேன் என்செய் கேனோ*
4
1912
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன்
    தோழிமா ராரு மில்லை,
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை
    யாடு மிடம்கு றுகி,
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப்
    படிறன் படிறு செய்யும்,
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய்*
    என்செய்கேன் என்செய் கேனோ*
5
1913
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்
    நந்தன் பெற்ற மதலை,
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே
    அல்லிற் றான்வந்த பின்னை,
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக்
    கமலச் செவ்வாய்வெ ளுப்ப,
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய்*
    என்செய்கேன் என்செய் கேனோ*
6
1914
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென்
    றாயர் விழவெ டுப்ப,
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப்
    பெய்த அதனை யல்லாம்,
போயிருந் தங்காரு பூத வடிவுகொண்
    டுன்மக னின்று நங்காய்,
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி
    வளைத்துண் டிருந்தான் போலும்*
7
1915
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர்
    ஓர்குடம் துற்றிடு மென்று,
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற்
    கெள்கி யிவனை நங்காய்,
‘சோத்தம் பிரான்*இவை செய்யப் பெறாய்*’என்
    றிரப்பன் உரப்ப கில்லேன்
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப்
    பேசுவ தஞ்சு வேனே*
8
1916
ஈடும் வலியும் உடையவிந் நம்பி
    பிறந்த ஏழு திங்களில்
ஏடலர் கண்ணியி னானை வளர்த்தி
    யமுனை நீராடப் போனேன்,
சேடன் திருமறு மார்வன் கிடந்து
    திருவடி யால்,மலை போல
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை
    உரப்புவ தஞ்சு வேனே*
9
1917
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள்*
    ஆயிர நாழி நெய்யைப்,
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற
    பாகந் தான்வை யார்களே,
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில்
    என்கை வலத்தாது மில்லை,
நெஞ்சத் திருப்பன செய்துவைத்த தாய்நம்பீ*
    என்செய்கே னென்செய் கேனோ*
10
1918
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ*
    ஆயர் மடமக் களைப்,
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள்
    பின்னே சென்றொளித் திருந்து,
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர
    வேரி டையா ரிரப்ப,
'மங்கைநல் லீர்*வந்து கொண்மின்' என்றுமரம்
    ஏறி யிருந்தாய் போலும்*
11
1919
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக்
    காண்மை யும்சே வகமும்,
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக்
    குரைத்திலன் தானின் றுபோய்,
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு
    பாய்ந்து புக்கு,ஆ யிரவாய்
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு
    பிணங்கிநீ வந்தாய் போலும்.
12
1920
தம்பல மல்லன ஆண்மைக ளைத்தனி
    யேநின்று தாம்செய் வாரோ?,
எம்பெரு மான்*உன்னைப் பெற்ற வயிறுடை
    யேனினி யானென் செய்கேன்?,
அம்பர மேழும் அதிரும் இடிகுரல்
    அங்கனற் செங்க ணுடை,
வம்பவிழ் கானத்து மால்விடை யோடு
    பிணங்கிநீ வந்தாய் போலும்.
13
1921
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித்
    தஞ்ச அருவரை போல,
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய
    மைந்தனை மாக டல்சூழ்,
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன்
    காமரு சீர்க்கலி கன்றி,
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க்
    கேது மிடரில் லையே.#
14

8. காதில் கடிப்பு
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 5
கலி விருத்தம்
1922
காதில் கடிப்பிட்டுக் கலிங்க முடுத்து,
தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து,
போது மறுத்துப் புறமேவந் துநின்றீர்,
ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ*#
1
1923
துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி,
சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர்,
இவரா ரிதுவென் னிதுவன் னிதுவென்னோ*
2
1924
கருளக் கொடியோன் றுடையீர்* தனிப்பாகீர்,
உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,
மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,
இருளத் திதுவென் னிதுவன் னிதுவென்னோ*
3
1925
நாமம் பலவு முடைநா ரணநம்பீ,
தாமத் துளவம் மினசா ரிடுகின்றீர்,
காம னெனப்பாடி வந்தில்லம் புகுந்தீர்,
ஏமத் திதுவென் னிதுவன் னிதுவென்னோ*
4
1926
சுற்றும் சூழல்தழச் சுரிகை யணைத்து,
மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,
முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,
எற்றுக் கிதுவென் னிதுவன் னிதுவென்னோ*
5
1927
ஆனா யரும்ஆ னிடையுமங் கொழியக்,
கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப்,
போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர்,
ஏனோர்கள் முன்னென் னிதுவன் னிதுவென்னோ*
6
1928
மல்லே பொருத திரள்தோள் மணவாளீர்,
அல்லே யிற்தோம்நும் மனத்தின் கருத்தை,
சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரிர்,
எல்லே யிதுவென் னிதுவன் னிதுவென்னோ*
7
1929
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,
தக்கார் பலர்தேவி மார்சால வுடையீர்,
எக்கே* இதுவென் னிதுவன் னிதுவென்னோ*
8
1930
ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்
கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,
தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,
ஏடி* இதுவென் னிதுவன் னிதுவென்னோ*
9
1931
அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி
எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,
கல்லின் மலிதோள் கலியன்சொன்ன மாலை,
சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே.#
10

9. புள்ளுருவாகி
கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு - 6
எழுசீர்க் கழிநெலடி ஆசிரிய விருத்தம்
1932
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த
    பூதனை மாள, இலங்கை
ஒள்ளெளி மண்டி யுண்ணப் பணித்த
    ஊக்க மதனை நினைந்தோ,
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள்
    காரிகை மாதர் கருத்தும்,
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப்
    பேசுவ தெந்தை பிரானே.#
1
1933
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி
    மால்விடை யேழும டர்த்து, ஆயர்
அன்று நடுங்க ஆனிரை காத்த
    ஆண்மைகொ லோவறி யேன்நான்,
நின்ற பிரானே* நீள்கடல் வண்ணா*
    நீயிவள் தன்னைநின் கோயில்,
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா
    முன்கை வளைகவர்ந் தாயே.
2
1934
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி
    ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,
கார்முகில் வண்ணா* கஞ்சனை முன்னம்
    கடந்தநின் கடுந்திறல் தானோ,
நேரிழை மாதை நித்திலத் தொத்தை
    நெடுங்கடல் அமுதனை யாளை,
ஆரெழில் வண்ணா* அங்கையில் வட்டாம்
    இவளெனக் கருதுகின் றாயே.
3
1935
மல்கிய தோளும் மானுரி யதளும்
    உடையவர் தமக்குமோர் பாகம்,
நல்கிய நலமோ? நரகனைத் தொலைத்த
    கரதலத் தமைதியின் கருத்தோ?,
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு
    வந்துமுன் னேநின்று போகாய்,
சொல்லியென் நம்பி* இவளைநீ யுங்கள்
    தொண்டர்கைத் தண்டென்ற வாறே.
4
1936
செருவழி யாத மன்னர்கள் மாளத்
    தேர்வலங் கொண்டவர் செல்லும்,
அருவழி வானம் அதர்படக் கண்ட
    ஆண்மைகொ லோவறி யேன்நான்,
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை
    சீர்மையை நினைந்திலை யந்தோ,
பெருவழி நாவற் கனியினு மெளியள்
    இவளெனப் பேசுகின் றாயே.
5
1937
அரக்கிய ராகம் புல்லென வில்லால்
    அணிமதி ளிலங்கையர் கோனை,
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற
    சேவக மோசெய்த தின்று,
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம்
    கொண்டுமுன் னேநின்று போகாய்,
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல்
    என்செய்வ தெந்தை பிரானே*
6
1938
ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச
    அலைகடல் உலகம்முன் ஆண்ட,
பாழியந் தோளோ ராயிரம் வீழப்
    படைமழுப் பற்றிய வலியோ?,
மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு
    வந்துமுன் னேநின்று போகாய்,
கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய்*
    குறுந்தடி நெடுங்கடல் வண்ணா*
7
1939
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற
    வள்ளுகி ரால்பிளந்து, அன்று
பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த
    பெருமைகொ லோசெய்த தின்று,
பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை
    பெருமையை நினைந்திலை பேசில்,
கருங்கடல் வண்ணா* கவுள்கொண்ட நீராம்
    இவளெனக் கருதுகின் றாயே.
8
1940
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய்
    நின்றநின் நீர்மையை நினைந்தோ?,
சீர்கெழு கோதை யென்னல திலளென்
    றன்னதோர் தேற்றன்மை தானோ?,
பார்கெழு பவ்வத் தாரமு தனைய
    பாவையைப் பாவம்செய் தேனுக்கு,
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட
    மாகநின் மனத்துவைத் தாயே.
9
1941
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி
    மெய்ம்மைநின் றெம்பெரு மானை,
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன்
    மானவேல் கலியன்வா யொலிகள்,
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப்
    பழமொழி யால்பணிந் துரைத்த,
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச்
    சித்தமும் திருவொடு மிகுமே.#
10

10. திருத்தாய்
தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாது கூறிய பாசுரம்
வெண்டுறை
1942
திருத்தாய் செம்போத்தே,
    திருமாமகள் தன்கணவன்,
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத்
    திருத்தாய் செம்போத்தே*#
1
1943
கரையாய் காக்கைப்பிள்ளாய்,
    கருமாமுகில் போல்நிறத்தன்,
உரையார் தொல்புக ழுத்தம னைவரக்
    கரையாய் காக்கைப்பிள்ளாய்*
2
1944
கூவாய் பூங்குயிலே,
    குளிர்மாரி தடுத்துகந்த,
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்,
    கூவாய் பூங்குயிலே*
3
1945
கொட்டாய் பல்லிக்குட்டி,
    குடுமாடி யுலகளந்த,
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக்,
    கொட்டாய் பல்லிக்குட்டி*
4
1946
சொல்லாய் பைங்கிளியே,
    சுடராழி வலனுயர்த்த,
மல்லார் தோள்வட வேங்கட வன்வர,
    சொல்லாய் பைங்கிளியே*
5
1947
கோழி கூவென்னுமால்,
    தோழி* நானென்செய்கேன்,
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று
    கோழி கூவென்னுமால்.
6
1948
காமற் கென்கடவேன்,
    கருமாமுகில் வண்ணற்கல்லால்,
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக்,
    காமற் கென்கடவேன்*
7
1949
இங்கே போதுங்கொலோ,
    இனவேல்நெடுங் கண்களிப்ப,
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால்,
    இங்கே போதுங்கொலோ*
8
1950
இன்ன ரென்றறியேன்,
    அன்னே* ஆழியொடும்,
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை,
    இன்ன ரென்றறியேன்.
9
1951
தொண்டீர்* பாடுமினோ,
    சுரும்பார்பொழில் மங்கையர்கோன்,
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள்,
    தொண்டீர்* பாடுமினோ.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

பதினோராம் பத்து
1. குன்றமொன்றெடுத்து
பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறும் பாசுரம்
கலி விருத்தம்
1952
குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை
அன்று காத்தவம் மான்,அ ரக்கரை
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்*#
1
1953
காரும் வார்பணிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து,
ஈர வாடைதான் ஈரு மென்னையே*
2
1954
சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லர்ந்ததோர் கூவு மென்னையே*
3
1955
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நஞ்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே*
4
1956
அங்கொ ராளரி யாய்,அ வுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ,
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே*
5
1957
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே*
6
1958
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே*
7
1959
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர்
ஆலி வந்ததால் அரிது காவலே*
8
1960
கெண்டை யொண்கணும் துயிலும், என்நிறம்
பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த்
தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே.
9
1961
அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்புகழ் மங்கை வாள்கலி
கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே.#
10

2. குன்றமெடுத்து
தலைவி பிரிவாற்றாது வருந்திக் கூறும் பாசுரம்
கலி நிலைத்துறை
1962
குன்ற மெடுத்து மழைத
    டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த
    மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை
    மேல்கிடந் தீர்கின்ற,
அன்றிலின் கூட்டைப் பிரிக்க
    கிற்பவ ரார்கொலோ*#
1
1963
பூங்கு ருந்தொசித்து ஆனை
    காய்ந்தரி மாச்செகுத்து,
ஆங்கு வேழத்தின் கொம்பு
    கொண்வடுவன் பேய்முலை
வாங்கி யுண்ட,அவ் வாயன்
    நிற்கஇவ் வாயன்வாய்,
ஏங்கு வேய்ங்குழல் என்னோ
    டாடும் இளமையே*
2
1964
மல்லொடு கஞ்சனும் துஞ்ச
    வென்ற மணிவண்ணன்,
அல்லி மலர்த்தண் டுழாய்நி
    னைந்திருந் தேனையே,
எல்லி யின்மா ருதம்வந்
    தடுமது வன்றியும்,
கொல்லைவல் லேற்றின் மணியும்
    கோயின்மை செய்யுமே*
3
1965
பொருந்து மாமர மேழு
    மெய்த புனிதனார்,
திருந்து சேவடி யென்ம
    னத்து நினைதொறும்,
கருந்தண் மாகடல் கங்கு
    லார்க்கும் அதுவன்றியும்,
வருந்த வாடை வருமி
    தற்கினி யென்செய்கேன்*
4
1966
அன்னை முனிவதும் அன்றி
    லின்குர லீர்வதும்,
மன்னு மறிகட லார்ப்ப
    தும்வளை சோர்வதும்,
பொன்னங் கலையல்கு லன்ன
    மென்னடைப் பூங்குழல்
பின்னை மணாளர் திறத்த
    வாயின பின்னையே.
5
1967
ஆழியும் சங்கு முடைய
    நங்கள் அடிகள்தாம்,
பாழிமை யான கனவில்
    நம்மைப் பகர்வித்தார்,
தோழியும் நானு மொழிய
    வையம் துயின்றது,
கோழியும் கூகின்ற தில்லைக்
    கூரிரு ளாயிற்றே*
6
1968
காமன் றனக்கு முறையல்
    லேன்கடல் வண்ணனார்,
மாமண வாள ரெனக்குத்
    தானும் மகன்சொல்லில்,
யாமங்கள் தோறெரி வீசு
    மென்னிளங் கொங்கைகள்,
மாமணி வண்ணர் திறத்த
    வாள்வளர் கின்றவே*
7
1969
மஞ்சுறு மாலிருஞ் சோலை
    நின்ற மணாளனார்,
நெஞ்சம் நிறைகொண்டு போயி
    னார்நினை கின்றிலர்,
வெஞ்சுடர் போய்விடி யாமல்
    எவ்விடம் புக்கதோ,
நஞ்சு உடலம் துயின்றால்
    நமக்கினி நல்லதே*
8
1970
காமன் கணைக்கோ ரிலக்க
    மாய்நலத் தில்மிகு,
பூமரு கோலநம் பெண்மை
    சிந்தித்தி ராதுபோய்,
தூமலர் நீர்கொடு தோழி*
    நாம்தொழு தேத்தினால்,
கார்முகில் வண்ணரைக் கண்க
    ளால்காண் லாங்கொலோ*
9
1971
வென்றி விடையுட னேழ
    டர்த்த அடிகளை,
மன்றில் மலிபுகழ் மங்கை
    மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதுமு
    ரைப்பவர் தங்கள்மேல்,
என்றும் நில்லாவினை யொன்றும்
    சொல்லி லுலகிலே.#
10

3. மன்னிலங்கு
தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் - அறத்தொடு நிற்றல்
தரவு கொச்சகக் கலிப்பா
1972
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப்
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ்,
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர்,
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே*#
1
1973
இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர்
பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண்
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட,
வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே*
2
1974
அன்னே* இவவை யறிவன், மறைநான்கும்
முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து,
பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து,
என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே*
3
1975
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு,
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி,
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு,
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே?
4
1976
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு,
தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால்,
தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி,
தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே.
5
1977
வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து,இன்பம்
உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும்
எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி,
கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே.
6
1978
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள்
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்?,
பெண்ணானோம் பெண்மையோம் நின்ற, அவன்மேய
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே.
7
1979
பாடோமே யெந்தை பெருமானை?, பாடிநின்று
ஆடோமே யாயிரம் பேரானை?, பேர்நினைந்து
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம்
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே*
8
1980
நன்னெஞ்சே* நம்பெருமான் நாளும் இனிதமரும்,
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது,
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன்,
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே*
9
1981
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப்
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை,
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க-
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே.#
10

4. நிலையிடம்
இறைவனின் பத்துத் தோற்றங்களின் சிறப்பு
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
1982
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம்
    உம்பர் வளநாடு மூட இமையோர்,
'தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை'
    என்ன அரணாவ னென்னு மருளால்,
அலைகடல் நீர்கு ழம்ப அகடாட
    ஓடி யகல்வா னுரிஞ்ச, முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை
    மாலை மறவா திறைஞ்சென் மனனே*#
1
1983
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று
    சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே,
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும்
    குழம்ப இமையோர்கள் நின்று கடைய,
பருவரை யொன்று நின்று முதுகிற்
    பரந்து சுழலக் கிடந்து துயிலும்,
அருவரை யன்ன தன்மை அடலாமை
    யான திருமால் நமக்கொ ரரணே.
2
1984
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர்
    உம்ப ருலகேழி னோடு முடனே,
மாதிர மண்சு மந்து வடகுன்று
    நின்ற மலையாறும் ஏழு கடலும்
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட
    லத்தி னொருபா லொடுங்க வளர்சேர்,
ஆதிமுன் ஏன மாகி அரணாய
    மூர்த்தி அதுநம்மை யாளு மரசே.
3
1985
தளையவிழ் கோதை மாலை யிருபால்
    தயங்க எரிகான் றிரண்டு தறுகண்,
அளவெழ வெம்மை மிக்க அரியாகி
    அன்று பரியோன் சினங்க ளவிழ,
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன
    தாகம் மதியாது சென்றொ ருகிரால்,
பிளவெழ விட்ட குட்ட மதுவைய
    மூடு பெருநீரில் மும்மை பெரிதே.
4
1986
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி
    அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர,
செந்தொழில் வேத நாவின் முனியாகி
    வைய மடிமூன் றிரந்து பெறினும்,
மந்தர மீது போகி மதிநின்றி
    றைஞ்ச மலரோன் வணங்க வளர்செர்,
அந்தர மேழி னூடு செலவுய்த்த
    பாதம் அதுநம்மை யாளு மரசே.
5
1987
இருநில மன்னர் தம்மை யிருநாலும்
    எட்டு மொருநாலு மொன்று முடனே,
செருநுத லூடு போகி யவராவி
    மங்க மழுவாளில் வென்ற திறலோன்,
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை
    நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர்,
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய
    ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே.
6
1988
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம்
    என்ன இனமாய மான்பின் எழில்சேர்
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப
    தற்கொ ருருவாய மானை யமையா,
கொலைமலி யெய்து வித்த கொடியோன்
    இலங்கை பொடியாக வென்றி யமருள்,
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த
    நங்கள் திருமால் நமக்கொ ரரணனே.
7
1989
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி
    யுண்ண முதலோடு வீடு மறியாது,
என்னிது வந்த தென்ன இமையோர்
    திகைப்ப எழில்வேத மின்றி மறைய,
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும்
    நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ,
அன்னம தாயி ருந்தங் கறநூல்
    உரைத்த அதுநம்மை யாளு மரசே.
8
1990
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென்
    றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய,
உணமுலை முன்கொ டுத்த வுரவோள
    தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி,
பணமுலை யாயர் மாத ருரலோடு
    கட்ட அதனோடு மோடி அடல்சேர்,
இணைமரு திற்று வீழ நடைகற்ற
    தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே.
9
1991
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று
    கொன்று கொடியோன் இலங்கை பொடியா
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த
    நங்கள் திருமாலை, வேலை புடைசூழ்
கலிகெழு மாட வீதி வயல்மங்கை
    மன்னு கலிகன்றி சொன்ன பனுவல்,
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற
    தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே.#
10

5. மானமரும்
இரண்டு தோழியர் எம்பெருமானது எளிமையையும் மேன்மையையும் எதிரெதிராகக் கூறுதல்
தரவு கொச்சகக் கலிப்பா
1992
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா,
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ,*
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த பொன்னடிகள்,
லானவர்தம் சென்னி மலர்கண்டாய் சாழலே.#
1
1993
தந்தை தளைகழலத் தோன்றிப்போய், ஆய்ப்பாடி
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ,*
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத்
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே.
2
1994
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித்
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ,*
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ்
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே.
3
1995
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ,*
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே.
4
1996
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு,
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ,*
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும்,
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே.
5
1997
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ,*
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும்,
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே.
6
1998
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,*
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.
7
1999
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,*
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.
8
2000
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,*
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்,
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.
9
2001
கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,*
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி
உள்ளத்தி னுள்ளே உளன்கண்டாய் சாழலே.#
10

6. மைந்நின்ற
பிரளய ஆபத்தில் பாதுகாத்த எம்பெருமானையே வணங்கும்படி உலகத்தார்க்கு உபதேசித்தல்
கலி நிலைத்துறை
2002
மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி
    வானவரும் யாமுமெல்லாம்,
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில்
    நெடுங்காலம் கிடந்ததோரிர்,
எந்நன்றி செய்தாரா ஏதிலோர்
    தெய்வத்தை யேத்துகின்றீர்?
செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்*
    அண்டனையே ஏத்தீர்களே.#
1
2003
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின்
    மீதோடி நிமிர்ந்தகாலம்,
மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட
    மகப்படுத்த காலத்து,அன்று
எல்லாரும் அறியாரோ எம்பெருமான்
    உண்டுமிழ்ந்த எச்சில்தேவர்,
அல்லாதார் தாமுளரே? அவனருளே
    உலகாவ தறியீர்களே?
2
2004
நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய்
    நான்முகனும் நீணடநால்வாய்,
ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும்
    உள்ளிட்ட அமரரோடும்,
வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல்
    தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கொற்றப்போ ராழியான் குணம்பரவாச்
    சிறுதொண்டர் கொடியவாறே*
3
2005
பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம்
    நெடுங்கடலே யானகாலம்,
‘இனிக்களைகண் இவர்க்கில்லை’ என்றுலகம்
    ஏழினையும் ஊழில்வாங்கி,
முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில்
    வைத்தும்மை உய்யக்கொண்ட,
கனிக்களவத் திருவுருவத் தெருவனையே
    கழல்தொழுமா கல்லீர்களே.
4
2006
பாராரும் காணாமே பரவைமா
    நெடுங்கடலே யானகாலம்,
ஆரானும் அவனுடைய திருவயிற்றில்
    நெடுங்காலம் கிடந்தது,உள்ளத்
தோராத வுணர்விலீர்* உணருதிரேல்
    உலகளந்த வும்பர்கோமான்,
பேராளன் பேரான பேர்களா
    யிரங்களும் பேசீர்களே.
5
2007
பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின்
    மீதோடிப் பெருகுகாலம்,
தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன்
    வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான்,
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம்
    கொண்டாடும் தொண்டீர்,பெற்ற
தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ
    மாட்டாத தகவற்றீரே*
6
2008
மண்ணாடும் விண்ணாடும் வானவரும்
    தானவரும் மற்றுமெல்லாம்
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்
    தான்விழுங்கி யுய்யக்கொண்ட,
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன்
    கழல்சூடி, அவனையுள்ளத்
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத
    போதெல்லா மினியவாறே.
7
2009
மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து
    பரந்தேறி யண்டத்தப்பால்,
புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம்
    ஏழினையும் ஊழில்வாங்கி,
அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில்
    வைத்தும்மை யுய்யக்கொண்ட,
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை
    நினையாதார் நீசர்தாமே.
8
2010
அண்டத்தின் முகடழுந்த அலைமுந்நீர்த்
    திரைததும்ப ஆவாவென்று,
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும்
    தானருளி, உலகமேழும்
உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில்
    வைத்தும்மை யுய்யக்கொண்ட,
கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை
    நகர்பாடி யாடீர்களே.
9
2011
தேவரையும் அசுரரையும் திசைகளையும்
    கடல்களையும் மற்றும் முற்றும்,
யாவரையு மொழியாமே யெம்பெருமான்
    உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன,
காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி
    ஒலிமாலை கற்று வல்லார்,
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப்
    பொன்னுலகில் பொலிவர் தாமே.#
10

7. நீணாகம்
எம்பெருமான் திறத்தில் உதவாத அவயவங்கள் பயனற்றன எனல்
தரவு கொச்சகக் கலிப்பா
2012
நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப்
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை,
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை,
காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே.#
1
2013
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண்,
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை,
தோளாத மாமணியைத் தொண்டர்கட் கினியானை,
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே.
2
2014
தூயானைத் தூய மறையானை, தென்னாலி
மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட
வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை,
பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே.
3
2015
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த,
ஓடா அடலரியை உம்பரார் கோமானை,
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால்
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே.
4
2016
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
5
2017
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும்,
முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால்,
புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று,
உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே.
6
2018
கலையார் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும்
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று,
நினையாதார் நெஞ்சென்றும் நெஞ்சல்ல கண்டாமே.
7
2019
வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த,
உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட
சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித்
தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே.
8
2020
தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை,
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய்,
ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார்,
மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்ததேனே.#
9
2021
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக்
கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி,
கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை,
ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே.#
10

8. மாற்றமுள
பிறவித்துயரை அறுத்துத் தந்தருள வேண்டும் என்று ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல்
கலிவிருத்தம்
2022
மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம்,
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன்,
நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ*#
1
2023
சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள்
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி,
காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல,
ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா*
2
2024
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா*
3
2025
உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி,
இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல்,
உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா*
4
2026
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில்,
தள்ளிப் புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி,
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே,
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா*
5
2027
படைநின்ற பைந்தா மரையோடு, அணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா,
இடையன் எறிந்த மரமேயொத் திராமே,
அடைய அருளா யெனக்குறை னருளே.
6
2028
வேம்பின்புழு வேம்பன்றி யுண்ணாது, அடியேன்
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன்,
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப்
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ*#
7
2029
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா,
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு,
மணியே* மணிமா ணிக்கமே* மதுசூதா,
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ*#
8
2030
நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும்
எந்தாய்* தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,
சந்தோகா* தலைவனே* தாமரைக் கண்ணா,
அந்தோ* அடியேற் கருளாயுன் னருளே.#
9
2031
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை,
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல்,
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்தம்மேல்,
என்றும் வினையாயின சாரகில் லாவே.#
10
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்

மேலே செல்க

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com