திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.101 இராமேச்சுரம் பண் - சாதாரி |
திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக் கவெரி யேந்தியாடும் நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்தம் இலங்குகானல் இராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.
|
1 |
பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரும் இராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.
|
2 |
அலைவளர் தண்புனல் வார்சடைமேல் அடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடஆடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியும் இராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.
|
3 |
மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி அங்கையில் ஏந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.
|
4 |
சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடஆடுங் குணமே குறித்துணர்வார்
ஏலந றும்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.
|
5 |
கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளொடாடும் இயல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகானல் இராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.
|
6 |
நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடும் இராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.
|
7 |
பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடல் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்தும் இராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோள் அடர்த்தார் கொளுங்கொள்கையே.
|
8 |
கோவலன் நான்முகன் நோக்கொணாத குழகன் அழகாய
மேவலன் ஒள்ளெளி ஏந்தியாடும் இமையோர் இறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்தும் இராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.
|
9 |
பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலும் இராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.
|
10 |
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணும் இராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தன்நல்ல மொழியால் நவின்றேத்தும்
பாவியன் மாலைவல் லாரவர்தம் வினையாயின பற்றறுமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |