திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.91 திருமறைக்காடு பண் - பியந்தைக்காந்தாரம் |
பொங்கு வெண்மணற் கானற்
பொருகடல் திரைதவழ் முத்தங்
கங்கு லாரிருள் போழுங்
கலிமறைக் காடமர்ந் தார்தாந்
திங்கள் சூடின ரேனுந்
திரிபுரம் எரித்தன ரேனும்
எங்கும் எங்கள் பிரானார்
புகழல திகழ்பழி யிலரே.
|
1 |
கூனி ளம்பிறை சூடிக்
கொடுவரித் தோலுடை யாடை
ஆனி லங்கிள ரைந்தும்
ஆடுவர் பூண்பது மரவங்
கான லங்கழி யோதங்
கரையொடு கதிர்மணி ததும்பத்
தேன லங்கமழ் சோலைத்
திருமறைக் காடமர்ந் தாரே.
|
2 |
நுண்ணி தாய்வெளி தாகி
நூல்கிடந் திலங்கு பொன்மார்பிற்
பண்ணி யாழென முரலும்
பணிமொழி யுமையொரு பாகன்
தண்ணி தாயவெள் ளருவி
வலவல நுரைமணி ததும்பக்
கண்ணி தானுமொர் பிறையார்
கலிமறைக் காடமர்ந் தாரே.
|
3 |
ஏழை வெண்குரு கயலே
யிளம்பெடை தனதெனக் கருதித்
தாழை வெண்மடற் புல்குந்
தண்மறைக் காடமர்ந் தார்தாம்
மாழை யங்கய லொண்கண்
மலைமகள் கணவன தடியின்
நீழ லேசர ணாக
நினைபவர் வினைநலி விலரே.
|
4 |
அரவம் வீக்கிய அரையும்
அதிர்கழல் தழுவிய அடியும்
பரவ நாஞ்செய்த பாவம்
பறைதர வருளுவர் பதிதான்
மரவம் நீடுயர் சோலை
மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்
டிரவும் எல்லியும் பகலும்
ஏத்துதல் குணமெ னலாமே.
|
5 |
பல்லி லோடுகை யேந்திப்
பாடியும் ஆடியும் பலிதேர்
அல்லல் வாழ்க்கைய ரேனும்
அழகிய தறிவரெம் மடிகள்
புல்ல மேறுவர் பூதம்
புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்
மல்கு வெண்டிரை யோதம்
மாமறைக் காடது தானே.
|
6 |
நாகந் தான்கயி றாக
நளிர்வரை யதற்கு மத்தாகப்
பாகந் தேவரொ டசுரர்
படுகடல் அளறெழக் கடைய
வே நஞ்செழ ஆங்கே
செருவொடும் இரிந்தெங்கு மோட
ஆகந் தன்னில்வைத் தமிர்தம்
ஆக்குவித் தான்மறைக் காடே.
|
7 |
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்
தனதொரு பெருமையை ஓரான்
மிக்கு மேற்சென்று மலையை
யெடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்குத் தன்திரு விரலா
லூன்றலும் நடுநடுத் தரக்கன்
பக்க வாயும்விட் டலறப்
பரிந்தவன் பதிமறைக் காடே.
|
8 |
விண்ட மாமல ரோனும்
விளங்கொளி யரவணை யானும்
பண்டுங் காண்பரி தாய
பரிசினன் அவனுறை பதிதான்
கண்ட லங்கழி யோதங்
கரையொடு கதிர்மணி ததும்ப
வண்ட லங்கமழ் சோலை
மாமறைக் காடது தானே.
|
9 |
பெரிய வாகிய குடையும்
பீலியும் அவைவெயிற் கரவாக்
கரிய மண்டைகை யேந்திக்
கல்லென வுழிதருங் கழுக்கள்
அரிய வாகவுண் டோது
மவர்திறம் ஒழிந்து நம்மடிகள்
பெரிய சீர்மறைக் காடே
பேணுமின் மனமுடை யீரே.
|
10 |
மையுலாம் பொழில் சூழ்ந்த
மாமறைக் காடமர்ந் தாரைக்
கையினாற் றொழு தெழுவான்
காழியுள் ஞானசம் பந்தன்
செய்த செந்தமிழ் பத்துஞ்
சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப்
பொய்யில் வானவ ரொடும்
புகவலர் கொளவலர் புகழே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |