21. விந்து ஜயம் - போக சரவோட்டம் |
1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே. |
1 |
1938
தானே அருளால் சிவயோகம் தங்காது
தானேஅக் காமாதி தங்குவோ னும் உட்கும்
தானே அதிகாரம் தங்கில் சடங்கெடும்
ஊனே அவற்றுள் உயிர்ஒம்பா மாயுமே. |
2 |
1939
மாயாள் வசத்தே சென்றிவர் வேண்டில்
ஓயா இருபக்கத்து உள்வளர் பக்கத்துள்
ஏயாஎண் நாள்இன்ப மேல்பனி மூன்றிரண்டு
ஆயா அபரத்துள் ஆதிநாள் ஆறாமே. |
3 |
1940
ஆறுஐந்து பன்னொன்றும் அன்றிச் சகமார்க்கம்
வேறுஅன்பு வேண்டுவோர் பூவரில் பின்னம்தோடு
ஏறும் இருபத் தொருநாள் இடைத்தோங்கும்
ஆறின் மிகுந்தோங்கும் அக்காலம் செய்யவே. |
4 |
1941
செய்யும் அளவில் திருநான் முகூர்த்தமே
எய்யும் கலைகாலம் இந்து பருதிகால்
நையுமிடத்து ஓடி நன்கா நூல்நெறி
செய்க வலம் இடம் தீர்ந்து விடுக்கவே. |
5 |
1942
விடுங்காண் முனைந்துஇந் திரியங்க ளைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐஐந்தும் நண்ணப்
படுங்காதல் மாதின்பால் பற்றற விட்டுக்
கடுங்காற் கரணம் கருத்துறக் கொண்டே. |
6 |
1943
கொண்ட குணனே நலமேநற் கோமளம்
பண்டை உருவே பகர்வாய் பவளமே
மிண்டு தனமே மிடைய விடும் போதில்
கண்ட கரணம் உட் செல்லக்கண் டேவிடே. |
7 |
1944
விட்டபின் கர்ப்பஉற் பத்தி விதியிலே
தொட்டுறுங் காலங்கள் தோன்றக் கருதிய
கட்டிய வாழ்நாள் சாம்நாள் குணம் கீழ்மைசீர்ப்
பட்ட நெறியிதுஎன்று எண்ணியும் பார்க்கவே. |
8 |
1945
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்துற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம்எல்லாம் உள்ளவே. |
9 |
1946
வித்திடு வோர்க்கு அன்றி மேலோர் விளைவில்லை
வித்திடு வோர்க்கு அன்றி மிக்கோர் அறிவில்லை
வித்தினில் வித்தை விதற உணர்வரேல்
மத்தில் இருந்ததோர் மாங்கனி யாமே. |
10 |
1947
கருத்தினில் அக்கரம் ஆயுவும் யாவும்
கருத்துளன் ஈசன் கருஉயிரோடும்
கருத்தது வித்தாய்க் காரண காரியம்
கருத்தறு மாறுஇவை கற்பனை தானே. |
11 |
1948
ஒழியாத விந்து வுடன்நிற்க நிற்கும்
அழியாப் பிராணன் அதிபலஞ் சத்தி
ஒழியாத புத்தி தபஞ்செப மோனம்
அழியாத சித்தியுண் டாம்விந்து வற்றிலே. |
12 |
1949
வற்ற அனலைக் கொளுவி மறித்தேற்றித்
துற்ற சுழியனல் சொருகிக் சுடருற்று
முற்று மதியத்து அமுதை முறைமுறை
செற்றுண் பவரே சிவயோகி யாரே. |
13 |
1950
யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே. |
14 |
1951
அண்ணல் உடலாகி அவ்வனல் விந்துவும்
மண்ணிடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்தெரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே. |
15 |
1952
அறியாது அழிகின்ற ஆதலால் நாளும்
பொறியால் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே வாயுமே. |
16 |
1953
மாதரை மாய வரும் கூற்றம் என்றுன்னக்
காதலது ஆகிய காமம் கழிந்திடும்
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசறும் காலமே. |
17 |
1954
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந் தான்விந்து செற்றவன்
காலங் களின்விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பறி யாரே. |
18 |
1955
கலக்கு நாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டில் அந் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தை
விலக்கு வனசெய்து மேலணை வீரே. |
19 |
1956
மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமான மாளும் அவ்விந்துவே. |
20 |
1957
விந்து விளைவும் விளைவின் பயன்முற்றும்
அந்த அழிவும் அடக்கத்தில் ஆக்கமும்
நந்திய நாசமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே. |
21 |
1958
விந்துஎன் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கிய னாலே நயந்தெரிந்து
அந்தமில் பானுஅதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே. |
22 |
1959
அமுதச் சசிவிந்து வாம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மான
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்குறும் யோகிக்கே. |
23 |
1960
யோகம் அவ் விந்து ஒழியா வகையுணர்ந்து
ஆகம்இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமா
மோகங் கெடமுயங் கார்மூடர் மாதர்க்கே. |
24 |
1961
மாதர் இடத்தே செலுத்தினும் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாடுவர்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே. |
25 |
1962
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம்அருந்தவித் தாமே. |
26 |
1963
விந்துவும் நாதமும் மேலக் கனல்மூல
வந்த அனல் மயிர்க் கால்தோறும் மன்னிடச்
சிந்தனை மாறச் சிவம்அக மாகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே. |
27 |
1964
வித்துக்குற் றுண்பான் விளைவுஅறி யாதவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துச் சுட்டு உண்பான்
வித்துகுற் றுண்பானில் வேறலன் ஈற்றவன்
வித்துக்குற் றுண்ணாமல் வித்துவித்தான் அன்றே. |
28 |
1965
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே. |
29 |
1966
அன்னம் பிராணன்என் றார்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்ன மாம்உருத் தோன்றும்எண் சித்தியாம்
அன்னவர் எல்லாம் அழிவற நின்றதே. |
30 |
1967
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்றும் மகாரம் ஒருமூன்றோடு ஒன்றவை
சென்று பராசக்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே. |
31 |
1968
தானே உபதேசம் தானல்லாது ஒன்றில்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே. |
32 |
1969
விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே. |
33 |
1970
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அந் நீள்வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்திப் பழமே. |
34 |
1971
விந்துவும் நாதமும் மேவியுடன் கூடிப்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
சுந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குஉதி மந்திரம் ஆகுதி யாகுமே. |
35 |
1972
மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. |
36 |
1973
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்து அறிகின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடம் தானே. |
37 |
1974
உரம்அடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய தன்முலை மேவிய கீழ்அங்கி
கருமலை மீமிசை கைக்கீழிற் காலாம்
விரவிய சுந்தரம் மேல்வெளி யாமே. |
38 |